Wednesday, April 24, 2024

இசைக்காக ஆன்மாவை விற்றவன் - ராபர்ட் ஜான்சன் - Man who sold his soul for music


முன்குறிப்பு: புதிய தலைமுறையில் டெபுடி எடிட்டராக பணியாற்றத் தொடங்கியதில் இருந்து காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சிக்காக ஒப்பீனியன் கட்டுரையை தேர்ந்தெடுக்க கிட்டத்தட்ட அனைத்து ஒப்பீனியன் கட்டுரைகளையும் வாசிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. அப்படியாக இன்று (25.04.2024)  PM Modi And 'Mangalsutra' Row: A Faustian Bargain For BJP?  என்கிற கட்டுரையை நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுந்தரபாரதி அனுப்ப வாசிக்க நேர்ந்தது. இதில் வரும் ஃபாசியன் பார்கெய்ன் என்கிற வார்த்தையை தமிழில் மொழி பெயர்ப்பது தொடர்பாக ஆன்மாவை பேரம்பேசுவது என்று வரலாமா அல்லது மனசாட்சியை பேரம்பேசுவது என்று வரலாமா என்கிற கலந்துரையாடல் பிரபல கவிஞரும், அவர் கவிஞர் என்பதை ஒதுக்கிவைத்துவிட்டு நிகழ்ச்சி உள்ளடக்க பொருப்பாளர் என்று மட்டுமே தன்னை வார்த்துக் கொண்டு பணியாற்றுபவருமான அன்பர் ஷங்கர்ராம சுப்ரமணியனுடன் நடைபெற்றது.


 மேற்கத்திய உலகின் ஆன்மா வேறு நமது நிலத்தில் ஆன்மா வேறு என்கிற புள்ளியில் இந்தக் கட்டுரைக்கு மனசாட்சி என்பதே பொருத்தம் என்கிற முடிவுக்கு மொழியியல் ரீதியாக வந்தோம். நிகழ்ச்சி முடிந்த பின்பு அலுவலக க்ரூப்பில் அனுப்பிய மெசேஜை இங்கே பதிவு செய்கிறேன்.

முக்கியக் குறிப்பு: ராபர்ட் ஜான்ஸன் பற்றி ஏற்கனவே தெரிந்தவர்களும், ராபர்ட் ஜான்சன் குறித்த சரியான தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களும் இப்பதிவை கடந்து போய்விடுவது  நன்மை பயக்கும்.




இன்றைக்கு NDTV கட்டுரையில் கண்ட faustian bargain என்கிற பதம் ஒரு நல் இசை தொடர்பான  நினைவைக் கொண்டுவந்தது. காலையில் இருந்து அதைக் கேட்டு உய்வதால் உங்களிடமும் அதுபற்றி  பகிர்கிறேன்.(உங்களில் சிலருக்கு இதுகுறித்து ஏற்கனவே தெரிந்து இருக்கலாம். )


வாய்ப்பிருந்தால் The man who sold his soul to play guitar என்று தேடிப்பாருங்கள்.. 1930களில் வாழ்ந்த ராபர்ட் ஜான்சன் என்கிற ப்ளூஸ் இசைக்கலைஞனைப் பற்றி வரும்.. வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ஆக்டிவாக இசையமைத்த ராபர்ட் ஜான்சன்தான்.. ராக் அண்ட் ரோலுக்கான விதை... (அவர் 7 மாத காலத்திற்குள் இசையமைத்தவை மட்டும்தான் நமக்கு ஒழுங்காகக் கிடைத்திருக்கிறது).

1900களின் தொடக்கத்தில் கருப்பினத்தவருக்கு இருந்த துயரமிகு வாழ்வு ராபர்ட் ஜான்சனையும் குதறி இருக்கிறது. 27 வயதிற்குள் மரணித்த ஜான்சன் பற்றி பின்னாளில் பல டாக்குமெண்ட்ரிகள் வந்திருக்கின்றன. ஆனால் என்னைப் போல பலருக்கும் ஜான்சனின் கதை   faustian bargain என்கிற சொல்லுக்கு தொடர்புடைய ஒரு நாட்டுப்புறக் கதை வழியாகவே முதலில் தெரியவரும்..  இதுவரை உங்களுக்கு அவரைத் தெரியாது என்றால் அக்கதை வழியாக அவரை அறிமுகப்படுத்துவதே அவருக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்..  அவருடைய பாடலின் வரிகளிலும் அந்தக் கதையின் சாயல் இருந்ததால் ... பலரும் அதை உண்மை என்றே நம்புகிறார்கள்.. அந்தக் கதையின் சாரம் இதுதான்..


”மிக மோசமான கிட்டார் ப்ளேயரான ராபர்ட் ஜான்சன் தனது திறமையின்மையை நினைத்து நொந்து போகிறான்.. எல்லோராலும் பரிகசிக்கப்பட்டவன் கிட்டாரைத் தூக்கிக் கொண்டு ஊரைவிட்டே கிளம்புகிறான். அவனை ஊர் மறந்து போகிறது. திடீரென ஒருநாள் மீண்டும் ஊருக்கு வருகிறான். க்ளப்பில் கிட்டார் வாசிக்கிறான்.

அவன் அன்று வாசித்த ஒலியை அதுவரை யாரும் கேட்டதில்லை. ராக் இசை உருவாகாத காலம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தற்குறியாக இருந்தவன் எப்படி இதுவரை யாரும் கேட்டிராத ஒலியை சாதாரண கிட்டாரில் கொண்டு வரமுடிந்தது  ஆச்சரியப்படுகிறார்கள். அவனிடமே கேட்கிறார்கள். 

அவன் ஒரு நாற்சந்திப்பு சாலைக்கு சென்றதாகவும் அங்கே சாத்தானைப் பார்த்ததாகவும் சொல்கிறான். தனது துயரத்தை சாத்தானிடம் பகிர்ந்துகொள்ள, சாத்தான் அவனுக்கு கிட்டார் இசைக்கும் திறனைத் தர சம்மதிக்கிறது. பதிலுக்கு அவனுடைய ஆன்மாவைக் கேட்கிறது. அவன் தனது ஆன்மாவை  சாத்தானிடம் இசைக்காக விற்றுவிடுகிறான். சாத்தான் ராபர்ட் கையில் இருந்த கிட்டாரை வாங்கி அற்புதமான இசையை இசைத்துவிட்டு மீண்டும் அவனிடமே கொடுக்கிறது. அப்போது சாத்தானின் விரலும் ராபர்டின் விரலும் உரசுகின்றன.அன்றில் இருந்து கிட்டாரை அதுவரை யாரும் கேட்டிராத வண்ணம் இசைக்கும் வல்லமையை ராபர்ட் பெறுகிறான்”.

திடீரென இசைஞானம் பெற்ற ராபர்ட் சில மாதங்களிலேயே  காணாமல் போகிறான்.  ராக் இசை என்று ஒன்று உருவாவதற்கு முன்பாகவே அதை வாசித்த ராபர்ட் ஜான்சனை பெரிய இசை கோர்ப்பு நிறுவனங்கள் தேடியபோது தனது 27வது வயதில் அவன் இறந்துவிட்டான் என்கிற தகவல் மட்டுமே கிடைக்கிறது. அவன் உடல் கூட கிடைக்கவில்லை. இறப்புச் சான்றிதழ் மட்டுமே கிடைக்கிறது. அவன் உடல் புதைக்கப்பட்ட இடம் என்று மூன்று இடங்கள் நம்பப்படுகின்றன. 

மூன்று முறை ராபர்ட் இறந்ததாகவும் அந்த மூன்று இடங்களிலும் ராபர்ட்டே புதைக்கப்பட்டிருக்கிறார் என்கிற கதையை நானே உருவாக்கி நண்பர்களிடம் பரப்பிவிட்டிருக்கிறேன்... 

சாத்தானிடம் இருந்து தோன்றிய இசை, ராக் இசை என்பதால் ராக் இசையை வெறுத்தவர்களும் உண்டு.. ராக் இசையை வழங்கியதால் சாத்தான் மேல் சாஃப்ட் கார்னரை வளர்த்துக் கொண்ட என்போன்றோரும் உண்டு..

படைப்பூக்க பித்து கொண்ட இளம்பருவக் கோளாறு கொண்டவர்களுக்கு இன்றும் ராபர்ட்டே ஆதர்சம். எனக்கும் 20 வயதில் ராபர்ட் போல் சாத்தானுக்கு ஆன்மாவை விற்றுவிட்டு படைப்பாளியாகிவிட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இளம்பருவக் கோளாறு இளம்பருவத்திலேயே தெளிந்துவிட்டது. 

ராபர்ட் இறந்து கிட்டத்தட்ட நூறு வருடங்கள் கடக்கப்போகின்றன. நான் அவர் இசையைக் கேட்டு குறைந்தது 5 முதல் 8 வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். ஆனாலும் இன்றைக்கு கேட்டபோது நமது ஆன்மாவை சாத்தானுக்கு விற்கத் தூண்டுவதை மட்டும் ராபர்ட் ஜான்சனின் இசை நிறுத்தவேயில்லை.


பி.கு:கொழந்த என்கிற பெயரில் ப்ளாக் எழுதிக் கொண்டிருந்த சரவண கணேஷோ அல்லது கருந்தேள் என்கிற பெயரில் ப்ளாக் எழுதிக் கொண்டிருந்த ராஜேஷோ ராபர்ட் ஜான்சன் பற்றி பத்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக எழுதிய நினைவு. விரும்புவோர் அவர்களைத் தேடிப் படிக்கலாம்.