நான் இறந்து போயிருந்தேன்
வெண்நிலவில் ஒட்டியிருக்கும்
கரையைப் போல்
ஆங்காங்கே என்வீட்டின்
முன் சிலர்.
கேட்கும் போதெல்லாம்
கடன் தரும்
ஆருயிர் நண்பன்
ஓரமாய் நின்றிருந்தான்.
அவனுக்கு
ஒரு தடவை கூட
கடனைத் திருப்பித்
தராத-நான் இறந்து போயிருந்தேன்.
தன்
இரண்டாவது குழந்தையுடன்
என் முதல்காதலி
கண்ணீர் நிரப்பி
நின்றிருந்தாள்.
தகுந்த நேரத்தில்
வேலை கிடைக்காததால்
அவளை இழந்த-நான்
இறந்து போயிருந்தேன்.
அழுது அழுது
கலைத்துப் போய்
ஓரமாய் சாய்ந்திருந்தாள்
அம்மா.
கணவன் அடகுவைத்த
நகையை எல்லாம்
மகன் திருப்பித் தருவான்
என்றிருந்தவளின்
கனவை உடைத்த-நான்
இறந்து போயிருந்தேன்.
யாரும் அழாத போதினும்
ஒற்றையாய் அழுதுகொண்டிருந்தாள்
என் மனைவி.
வளமான வாழ்வை
எதிர்நோக்கி வந்தவளின்
எதிர்பார்ப்பை வீணடித்த- நான்
இறந்து போயிருந்தேன்.
இருக்கும் சுவடே
தெரியாமல் என் மனைவியின்
வயிற்றில் வளரும்
மூன்று மாதக்கருவும்
இருந்தது.
அதற்கு
எந்த கனவையும்
வளர்க்காமலும் கலைக்காமலும்
நல்ல வேளை
நான் இறந்து போயிருந்தேன்.
