Monday, November 28, 2011

உப்புச்சப்பாணி

"இந்தப் பையனையும் விளையாட்டுல சேத்துக்கங்க"
"அக்கா இவன் ரொம்பச் சின்னப் பையன் அக்கா"
"உப்புச்சப்பாணிக்கு சேர்த்துக்கங்கப்பா"
அம்மா என்னை புதுசாய் குடிவந்த ஊரில் உள்ள என்னைவிட மூத்த பையங்களோடு சேர்த்து விட்டார்.
உப்புச்சப்பாணி என்பது என்ன என்று சில நகர்புற் நண்பர்களுக்கு விளக்கவேண்டியுள்ளது. எடுத்துக் காட்டுக்கு உப்புச் சப்பாணி என்பவரை கடவுளாகவும் விளையாட்டை வாழ்க்கையாகவும் வைத்துக் கொள்ளலாம் (வாழ்க்கையே கடவுளின் விளையாட்டுத்தானே என தத்துவம் எல்லாம் பேசாமல் நான் எழுதியதை தொடர்ந்து படிக்கவும்).உப்புச் சப்பாணியால் விளையாட்டுக்கு எந்த விளைவும் ஏற்படாது.அதே போல் உப்புச் சப்பாணிக்கும் எந்த விளைவும் ஏற்படாது.சிலர் உப்புச்சப்பாணிகளை வைத்து பிழைத்துக் கொள்வார்கள் நம்மூர் சாமியார்கள் மாதிரி.ஒரு சிறு வித்தியாசம் உப்புச் சப்பாணிகள் அங்கிட்டு இங்கிட்டும் ஓடிக் கொண்டிருப்பார்கள்.


உப்புச் சப்பாணி என்கிற வார்த்தை ஒப்புக்குச் சப்பாணி என்கிற வார்த்தையில் இருந்து வந்ததாக அறிகிறேன்.'ஒப்புக்கு' 'உப்புக்கு' ஆகி பின் உப்பாகிவிட்டது.சப்பாணி என்கிற வார்த்தையின் மூலம் தேடிப்போனால் பதினாறு வயதினிலே படத்தின் கமலஹாசனிடம் இருந்து வந்தது எனவும் எங்கள் ஊரில் இருந்து தான் படத்துக்கு வந்தது எனவும் இரண்டு தகவல்கள் கிடைக்கின்றன.(பாரதி ராஜா எங்கூர்காரர்) . எது எப்படியோ உப்புச் சப்பாணி என்பவர் டம்மிபீஸ் ஆனால் அவரை பயன் படுத்திக் கொள்ளமுடியும்.இது தான் டெபனிஷன்.

உதாரணத்திற்கு ஐஸ்பாய் போன்ற விளையாட்டுகளில் "வாரேன் வருகிறேன் திருப்பிச் சொன்னா வரமாட்டேன்" என்று கத்தி விட்டு பட்டு வருபவன்,எங்கு இருந்து எங்கு செல்கிறான்.யார் யார் எல்லாம் அகப்பட்டிருக்குறார்கள் போன்ற தகவல்களை உப்புச்சப்பாணிகள் மட்டுமே சேகரித்துவரமுடியும். இது போன்ற ஒற்றறிதலில் நான் புலி என்பதால் நான் தான் விருப்பத்துக்குறிய உப்புச் சப்பாணி.அதே போல் பட்டு வருபவன் உப்புச் சப்பாணியை கண்காணித்தால் எல்லோரையும் கண்டு பிடித்துவிடலாம்.இப்படி எல்லாவற்றுக்கும் உதவும் சாதக பாதகம் நிறைந்தவனே உப்புச் சப்பாணி.அவன் நினைத்தால் பலரை சிக்கவைக்க முடியும் ஆனால் அதனால் அவனுக்கு எந்த பிரயோஜனமும் இருக்காது. (நாம கூட கலைஞருக்கு ஆப்பு வச்சோம். நமக்கு எதாவது நடந்ததா அது மாதிரி...)

எங்கள் ஊரில் கிரிக்கெட் ஆடுகையில் 'ட்ரெயல்','ஓப்பனிங்க் ட்ரெயல்','பேட்ஸ்மேன் ட்ரெயல்','பவுளர் ட்ரெயல்' ,'பீல்டர் ட்ரெயல்','கீப்பர் ட்ரெயல்', என ஒரு ஓவர் சும்மா போடுவார்கள்.இந்த ஒரு ஓவரையும் உப்புச் சப்பாணிகள் தான் பேட் பண்ணுவார்கள்,அவர்கள் தான் பவுள் பண்ணுவார்கள்.இந்த ஒரு ஓவர் விளையாண்டதற்காக பந்து நாட் ரன் போகும் போதெல்லாம் ஓடி எடுக்கவேண்டிவரும்.ஓட்டுப் போடும் போது தேர்தலுக்கு முன்னாடி காசி வாங்கிக் கொண்டு பின்பு அஞ்சு வருசம் அல்லல் படுவோமே அது மாதிரி,ஒரு ஓவருக்கு ஆசைப் பட்டு பின்பு ஓடி ஓடி தேய்ந்துவிடுவோம்..

அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி அதற்கு பாதிப்பு வராத அளவுக்கு இடியென போர் முழக்கம் விடுவோம் அல்லவா அதே மாதிரி "எவ்வளவு தூரம் ஓடிப்போய் பந்த எடுத்தேன் தெரியுமா? ஒரு பால் சேர்த்து போடுங்க"என சீனியர்களுக்கு கோபம் வராத அளவுக்கு எதிர்த்து பேசவும் உப்புச்சப்பாணிகள் அனுமதிக்கப் படுவார்கள். அந்த கோரிக்கை சீனியர்களை பாதிக்கவில்லை என்றால் நிறைவேற்றுவார்கள்.(சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேத்தின மாதிரி...).சில சீனியர்கள் போனா போகுதுனு அவங்களாவே உப்புச் சப்பாணிகளை கூப்பிட்டு ஒரு பந்து போடுவங்க (பஸ்ல 50 பைசா குறஞ்ச மாதிரி)

இந்த உப்புச்சப்பாணிகள் எல்லா சிறுவர்களின் விளையாட்டிலும் இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது.ஆனால் நமது வாழ்வில் உறவினரிடமோ ,நண்பரிடமோ,அலுவலகத்திலோ,கல்லூரியிலோ,அரசியலிலோ ஏதேனும் ஒரு வகையில் உப்புச்சப்பாணியாகவே நாம் இருக்கிறோம்.

Wednesday, November 23, 2011

தோழமைக் கதைகள் -1


தோழி எனும் தேவதை


"இனிமேல் உனக்கு கஷ்டம்னாலும் சந்தோஷம்னாலும் எங்கிட்ட சொல்லு, இப்போ இருந்து நான் உன் ஃப்ரெண்ட்"இது தான் அவள் என்னிடம் நேரடியாக பேசிய முதல் நாளில் கடைசியான வார்த்தைக்ள்.அவள் என்னைத் தன் நண்பன் என்று சொல்வதற்கு முன்பே என் சுக துக்கங்களில் பங்கெடுக்க முடிவெடுத்திருக்கிறாள் என அப்போது தெரியவில்லை.அவ்வப்போது சிக்கன சிரிப்பை மட்டும் உதிர்த்துச் செல்வாள்.நானும் அவளுடன் நெருங்கிப் பழகவில்லை பொதுவாகவே எல்லோருடனும் தோழமையுடன் பழகினாலும் என்னை புரிந்த நண்பர்கள் குறைவு.12 வருட பள்ளி வாழ்க்கையில் மூன்று பேர்தான் என்னை 50% புரிந்தவர்கள்.

பிறகு சின்ன சந்தோஷங்களையும் துக்கங்களையும் அவளுடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.பின்பு ஒரு நாளில் அவளே எனக்கு சந்தோஷமாகவும் துக்கமாகவும் மாறிப் போனதை உணர்ந்தேன்.சில துரோகங்களால் உடைந்து போயிருந்தபோது அவளே என்னை சேர்த்து ஒட்ட வைப்பாள் .நான் தேறி முடித்த அடுத்த நொடி "அவங்க உனக்கு அப்படி பண்ணியிருக்க கூடாது"என்று உடைந்து அழுவாள்.என்னுடைய எவ்வளவு பெரிய பிரச்சனைகளையும் சாமானியமாக உடைத்து எறிவாள்.


"இனிமே எனக்கு கவிதையே வராது..."என விரக்தியில் அழுதபோது "நீ சொல்றது மீன் குஞ்சு தண்ணில விழுந்து சாகப் போறேன்னு சொல்ற மாதிரி இருக்கு"எனக் கூறி சிரிக்க வைத்தவள்,"தங்கச்சி என்னைத் திட்டிட்டா"என மூன்று மணி நேரம் அழுவாள்.
ஓட்டப் பந்தயத்தில் ஓடி விழுந்து முட்டி தேய்ந்து இரத்தம் வழிந்ததனால் தோற்ற போதும் "நான் ஜெயிச்சிருக்கனும் மச்சி"எனும் சொல்லுபவள்."ராத்திரி எல்லாம் கண் முழிச்சு படிச்ச இல்ல அதனால தான் தூக்க கலக்கத்துல பெயில் ஆகிட்ட..."என்பாள்.


குச்சி ஐஸ் சாப்பிடயில் முக்கில் ஒட்டியிருக்கும் ஐஸை,சரியாக இன் பண்ணாத சட்டையை, கலைந்திருக்கும் தலைமுடியை,கூன் விழுந்த நடையை என எல்லாவற்றையுமே சைகையினால் சரி செய்வாள்.எனக்கும் அவளுக்கும் நடந்த பெரும் சண்டையில் "நீ எனக்குத் தேவை இல்லை, போய் எங்கிட்டாவது விழுந்து செத்துரு" என அனுப்பிய என் குறிஞ்செய்திக்கு. எதுவும் எழுதாத எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பி என்னை மவுனத்தால் அடித்தவள்.

"மேடம் கொடுத்த அசைன்மென்ட்ல இருக்க படம் எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு.எனக்கு வரையவே மூணு மணி நேரம் ஆச்சு.உன்ன நினைச்சுப் பாத்தேன் அதான் உனக்கும் வரஞ்சு எடுத்துட்டு வந்தேன்.எழுது அது மட்டும் போதும், ஆனா இது தான் கடைசி இனிமேல் பண்ணமாட்டேன்"என்பாள். "இது தான் கடைசி" என்று
ஒவ்வொரு முறையும் சொல்லுவாள். நானே வரைந்து எடுத்துப் போகும் படங்களைப் பார்த்து "எரும படம் கூட ஒழுங்க வரயத் தெரியல" எனச் சொல்லி நோட்டை பிடுங்கி அவள் வரைந்து தருவாள்.

நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என எல்லோரும் கிசுகிசுக்கும் போது "உங்க அம்மா மேல் உனக்கு இருப்பது காதல்னா நான் பரிதியை காதலிக்கிறேன்னே வச்சுக்கங்க"என்று சொல்லி எல்லோர் வாயையும் அடைத்தவள். ஏதாவது மொக்கையான கவிதை எழுதும் போது "பரிதியையும் பைத்தியக்காரனையும் தவிர எவனாலையும் இப்படி யோசிக்க முடியாது"என்பாள்.நல்ல கவிதை எழுதும் போது அதே வார்த்தைகளை வேறு தொணியில் சொல்லுவாள்.

எப்போதும் என்னைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பாள் அவளைப் பற்றி நான் சிந்திக்கக்கூடாது என்பாள்.திடீர் என அழைத்து "மச்சி, உன் கல்யாணத்துல நான் தான் சாம்பார் ஊத்துவேன் "என்பாள்.பின்பு "இந்த வயசுல படிப்புத் தான் முக்கியம் நீ நல்லா படி உனக்கு நல்ல பொண்ணா நானே பாக்குறேன்" என்பாள்.
அப்பாவுக்கு பயந்த பொண்ணு "காதலிக்கிறவளாம் கையப் புடிச்சு சுத்துறா. நண்பன் கூட சேந்து நடக்க முடியல"என பெருமூச்சு விடுவாள்.

அவள் உதட்டைப் பிதுக்கி கட்டை விரலை பூமி நோக்கி வைத்து "ஊத்திக்கிச்சு " எனச் சொல்லுகையில் தோல்வி அவ்வளவு அழகாக இருக்கும். அவள் மிக இயல்பானவள் என்பதாலேயே இக்கட்டுரையில் எந்த வார்த்தை ஜாலங்களை கைக்கொள்ள முடியவில்லை.இவை எல்லாம் இன்னும் ஒரு வருடத்திற்குத் தான் கல்லூரி முடிந்தவுடன் அவளுக்கு திருமணம். கணவன் நல்லவனாய் இருந்தால் எப்போதாவது பேசலாம் இல்லை என்றால் அதுவும் முடியாது.ஆனால் ஒரு தேவதை போல் என்னை எப்போதும் ஆசிர்வதித்துக் கொண்டிருப்பாள் என்பது மட்டும் உறுதி.

Monday, November 21, 2011

விஜய்ணா உங்கள எனக்கு ரொம்ப புடிக்குங்க்ணா...





வயசு எல்லாம் சரியாகத் தெரியவில்லை. எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து (ஒன்னாவது படிக்கும் போதுனு நினைக்கிறேன்) யாராவது நீ யார் ரசிகன் என்று கேட்டால்."இளைய தளபதி" எனக் காலரைத் தூக்கிவிட்டுச் சொல்வேன். அப்பொழுது நான் மட்டும் அல்ல எங்கள் ஊரில் உள்ள 12 பேர் விஜய் ரசிகர்கள் என்பதையும் தாண்டி விஜய் வெறியர்கள். அதே போல் ஒரு 8 பேர் கொண்ட அஜித் க்ரூப்பும் இருந்து வந்தது. எப்போதும் நாங்கள் முட்டிக் கொள்வது எல்லாம் இல்லை.ஆனால் எப்போதும் இரண்டு கேங்குக்கும் ஒரு கோல்ட் வார் நடந்து கொண்டிருக்கும். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஊரில் திருவிழாவுக்கு டான்ஸ் ஆடுவது வரை மறைமுகமாக குரோத நதி ஓடிக்கொண்டிருக்கும்.

விஜய், டி.வி.யில் பேசும் போது "எல்லோர் வீட்டில் இருக்கும் எனது குட்டி குட்டி நண்பர்களுக்கும்" என்பார். அவர் என்னைப் பார்த்து தான் பேசுகிறார் என நினைத்து பூரித்துப்போய் இருக்கிறேன். விஜய்க்காக நான் இழந்தது அதிகம். அதில் மிக முக்கியமான ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு இந்த கட்டுரை ஏன் எழுத வேண்டும் என நினைத்தேனோ அதை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
முன்னமே நான் சொன்னது போல் எங்கள் ஊரில் சிறுவர்கள் தான் திருவிழாவுக்கு ஆடுவார்கள். அங்கே ஜிங்கிலி பிங்கிலி எல்லாம் இல்லை. மிகவும் டீசன்டான ஊர் என்பதால் அப்படி. வருடா வருடம் ஒரு பொண்ணு ஆடும் அந்த பொண்ணு பேரை மறந்துட்டேன்.அந்தப் பொண்ணுடன் ஆடுவதற்குத் தான் அதிகபட்சம் எல்லா பையன்களும் ஆசைப்படுவார்கள். ஆனால் அந்தப் பெண் எப்போது சோலோ டான்சே ஆடும். அந்த வருடம் மட்டும் அந்தப் பெண் ஒரு பையனுடன் சேர்ந்து ஆடப் போவதாகவும் அது நான் தான் என்றும், அவள் அம்மா வந்து சொன்னபோது உண்மையிலேயே நம்ப முடியவில்லை. நான் தான் அந்த வாரத்தின் ஸ்டார் ஆனேன். பலர் வயிர் எரிந்து செத்துக்கொண்டிருந்தார்கள். டான்ஸ் பிராக்டிஸ் நாள் வந்தது. லிட்டில் ஜானி படத்தில் இருந்து "பூவுக்குப் பொறந்த நாளாம்" பாட்டுக்கு ரிகர்சல் பண்ண ஆரம்பித்தோம். எல்லாம் அன்று மதியம் வரை நன்றாய் போய்க் கொண்டிருந்தது. மதியம் அவள் அம்மா இந்த பாட்டு வேணாம் புதுசா "பூக்காரா"னு பாட்டு வந்திருக்கு அந்த பாட்டுக்கு ஆடலாம் என்றார். முன்னாடி நாள் தான் சிட்டிசன் படப் பாட்டு ரிலிஸ் ஆகியிருந்தது என்பதால் எனக்கு என்ன படம் என்று தெரியவில்லை. யார் ஹீரோ என நான் கேட்ட போது. அஜித் என்றார். "நான் அஜித்து பாட்டுக்கு வரமாட்டேன்" என்றேன். "இல்லப்பா அந்த பாட்டு நல்லா இருக்கும் . கேட்டு பாரு" என்றார். அஜித் பாட்டைக் கேட்கக் கூடாது என்று சபதத்தில் கிளம்பி வந்துவிட்டேன். அதன் பிறகு ஒரு பையன் வீட்டுக்கு விருந்தாளியாய் வந்த பொண்ணைப் பிடித்து ( அவளை விட அழகு கம்மி தான்) "பூவுக்கு பொறந்த நாளாம்" அடினேன்.வேறு ஊருக்கு குடி போனபின் அந்த பொண்ணுக்கும் அவளுடன் பூக்காரா பாட்டுக்கு ஆடியவனுக்கும் இருதலைக் காதல் என்று +2 படிக்கையில் நண்பன் ஒருவன் சொன்னான். நான் ஆடி இருந்தால் எனக்கும் அவளுக்கும் காதல் மலர்ந்திருக்கலாம். அன்று மிஸ் பண்ணிய சான்சால் இன்று வரை நான் சிங்கிளாகவே சுத்திக் கொண்டிருக்கிறேன்.எல்லாம் எதற்காக எங்கள் இளைய தளபதிக்காக.

குஷி, ப்ரெண்ட்ஸ்,யூத் என தளபதி பொளந்து கட்டிக்கொண்டிருக்கும் போது அஜித் ராஜா மாதிரி மொக்கைப் படங்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். அதனால் அஜித் ரசிகர்கள் எல்லாம் அடங்கி இருந்தார்கள். செம அடாவடி பண்ணிக் கொண்டிருந்தேன். அப்போது தான் வந்தது புதிய கீதை. எனக்குப் படம் சுத்தமாக பிடிக்கவில்லை. ஏன் தளபதி லூசு மாதிரிக் கத்திக் கொண்டிருக்கிறார் எனத் தோன்றியது.இருந்தாலும் அடுத்த படம் நல்லாய் வரும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தேன்.நம்பிக்கையில் இடியென விழுந்தது திருமலை ரிலீஸ். அந்த திருவிழாவுக்கு "தாம் தக்க தீம் தக்க தய்ய தக்க கூத்து" ஆடியதால் படத்தை நான் ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனால் புதிய கீதையைவிட விஜய் ஏகத்துக்கும் கத்தினார். தியேட்டர் விட்டு வெளியே வரும்போது என்னைத் தவிர எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். அந்த படம் தான் நான் விஜய் ரசிகனாய் நான் பார்த்த கடைசி படம். அடுத்து உதயா வந்தது. படு மொக்கை . அதிகாரப் பூர்வமாக விஜய் க்ரூப்பில் இருந்து விலகினேன்.அடுத்து கில்லி வந்தது. மதுர,திருப்பாச்சி, சிவகாசி என நடித்தார். ஹிட்டுகளும் ஆகின. ஆனாலும் என் கண் முன்னே " மேகமாய் வந்து போகிறேன்" எனப் பாடிய விஜயே கண்ணில் வந்து போனார். இது எனது தளபதி இல்லை. அவர் உருகி உருகி காதலிப்பார். எப்போதாவது சண்டை போடுவார். பஞ்ச் டயலாக் பேச மாட்டார். விஜயை எவ்வளவு எவ்வளவு நேசித்தேனோ அவ்வளவு வெறுக்க ஆரம்பித்தேன். விஜய் ரசிகன் கிடைத்தால் கலாசித் தள்ளுவதே பழக்கமாய் கொண்டேன்.

ஆனாலும் விஜயின் போக்கிரி அவரது மாஸைக் காட்டியது. ஆனால் அதன் பிறகு வந்த படங்கள் என்னை கொலைவெறி அடையச் செய்தன. சுறா அதன் உட்சபட்சம்.காவலனில் ஏதோ ட்ரை பண்ணியிருந்தாலும் பழைய ரேஞ்சை எனக்குத் தரவில்லை. வேலாயுதம் கதை என திருப்பாச்சி கதையைச் சொன்னதால் படத்தை பார்க்க ஆர்வம் இல்லை. அதிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுகிறார் என மார் தட்டி அவர் ரசிகர்கள் சொல்வதை கேள்விப் பட்டதும் ஒரு கட்டிங்க் போட்டுவிட்டு விஜய் ரசிகர்களை எல்லாம் கடத்திக் கொண்டு வந்து கும்பிபாகம் பண்ணவேண்டும் என்று தோன்றியது. இதில் அவரது அரசியல் என்ட்ரி வேறு .அவரது அணில் வேலை இன்னும் எரிச்சல் கெளப்பியது.ஆனாலும் பழைய விஜயை பார்க்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் அடியில் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கிறது. "பர்சியூட் ஆஃப் ஹாப்பினேஸ்" போல் ஒரு படத்தில் விஜயை பார்க்க வேண்டும் என்று அந்த படம் பார்க்கும் போதெல்லாம் தோன்றும். எனக்கு மிகவும் பிடித்த பத்து படங்கள் என்று கேட்டால் அதில் த்ரீ இடியட்ஸும் கண்டிப்பாக இருக்கும் . அதில் விஜய் நடிக்கிறார் என்றதும் ஒரு பயமும் அதோடு சேர்ந்து எனது ஆசை நிறைவேற வாய்ப்பு உள்ளது என்கிற மகிழ்ச்சியும் சேர்ந்து கொண்டது. இன்று காலை கூட விஜயின் வேட்டைக்காரனை கலாய்த்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் விஜயிடம் இதை சொல்ல வேண்டும் என்று இருக்கிறது ."விஜய்ணா உங்கள எனக்கு ரொம்ப புடிக்குங்க்ணா..."