Wednesday, November 23, 2011

தோழமைக் கதைகள் -1


தோழி எனும் தேவதை


"இனிமேல் உனக்கு கஷ்டம்னாலும் சந்தோஷம்னாலும் எங்கிட்ட சொல்லு, இப்போ இருந்து நான் உன் ஃப்ரெண்ட்"இது தான் அவள் என்னிடம் நேரடியாக பேசிய முதல் நாளில் கடைசியான வார்த்தைக்ள்.அவள் என்னைத் தன் நண்பன் என்று சொல்வதற்கு முன்பே என் சுக துக்கங்களில் பங்கெடுக்க முடிவெடுத்திருக்கிறாள் என அப்போது தெரியவில்லை.அவ்வப்போது சிக்கன சிரிப்பை மட்டும் உதிர்த்துச் செல்வாள்.நானும் அவளுடன் நெருங்கிப் பழகவில்லை பொதுவாகவே எல்லோருடனும் தோழமையுடன் பழகினாலும் என்னை புரிந்த நண்பர்கள் குறைவு.12 வருட பள்ளி வாழ்க்கையில் மூன்று பேர்தான் என்னை 50% புரிந்தவர்கள்.

பிறகு சின்ன சந்தோஷங்களையும் துக்கங்களையும் அவளுடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.பின்பு ஒரு நாளில் அவளே எனக்கு சந்தோஷமாகவும் துக்கமாகவும் மாறிப் போனதை உணர்ந்தேன்.சில துரோகங்களால் உடைந்து போயிருந்தபோது அவளே என்னை சேர்த்து ஒட்ட வைப்பாள் .நான் தேறி முடித்த அடுத்த நொடி "அவங்க உனக்கு அப்படி பண்ணியிருக்க கூடாது"என்று உடைந்து அழுவாள்.என்னுடைய எவ்வளவு பெரிய பிரச்சனைகளையும் சாமானியமாக உடைத்து எறிவாள்.


"இனிமே எனக்கு கவிதையே வராது..."என விரக்தியில் அழுதபோது "நீ சொல்றது மீன் குஞ்சு தண்ணில விழுந்து சாகப் போறேன்னு சொல்ற மாதிரி இருக்கு"எனக் கூறி சிரிக்க வைத்தவள்,"தங்கச்சி என்னைத் திட்டிட்டா"என மூன்று மணி நேரம் அழுவாள்.
ஓட்டப் பந்தயத்தில் ஓடி விழுந்து முட்டி தேய்ந்து இரத்தம் வழிந்ததனால் தோற்ற போதும் "நான் ஜெயிச்சிருக்கனும் மச்சி"எனும் சொல்லுபவள்."ராத்திரி எல்லாம் கண் முழிச்சு படிச்ச இல்ல அதனால தான் தூக்க கலக்கத்துல பெயில் ஆகிட்ட..."என்பாள்.


குச்சி ஐஸ் சாப்பிடயில் முக்கில் ஒட்டியிருக்கும் ஐஸை,சரியாக இன் பண்ணாத சட்டையை, கலைந்திருக்கும் தலைமுடியை,கூன் விழுந்த நடையை என எல்லாவற்றையுமே சைகையினால் சரி செய்வாள்.எனக்கும் அவளுக்கும் நடந்த பெரும் சண்டையில் "நீ எனக்குத் தேவை இல்லை, போய் எங்கிட்டாவது விழுந்து செத்துரு" என அனுப்பிய என் குறிஞ்செய்திக்கு. எதுவும் எழுதாத எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பி என்னை மவுனத்தால் அடித்தவள்.

"மேடம் கொடுத்த அசைன்மென்ட்ல இருக்க படம் எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு.எனக்கு வரையவே மூணு மணி நேரம் ஆச்சு.உன்ன நினைச்சுப் பாத்தேன் அதான் உனக்கும் வரஞ்சு எடுத்துட்டு வந்தேன்.எழுது அது மட்டும் போதும், ஆனா இது தான் கடைசி இனிமேல் பண்ணமாட்டேன்"என்பாள். "இது தான் கடைசி" என்று
ஒவ்வொரு முறையும் சொல்லுவாள். நானே வரைந்து எடுத்துப் போகும் படங்களைப் பார்த்து "எரும படம் கூட ஒழுங்க வரயத் தெரியல" எனச் சொல்லி நோட்டை பிடுங்கி அவள் வரைந்து தருவாள்.

நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என எல்லோரும் கிசுகிசுக்கும் போது "உங்க அம்மா மேல் உனக்கு இருப்பது காதல்னா நான் பரிதியை காதலிக்கிறேன்னே வச்சுக்கங்க"என்று சொல்லி எல்லோர் வாயையும் அடைத்தவள். ஏதாவது மொக்கையான கவிதை எழுதும் போது "பரிதியையும் பைத்தியக்காரனையும் தவிர எவனாலையும் இப்படி யோசிக்க முடியாது"என்பாள்.நல்ல கவிதை எழுதும் போது அதே வார்த்தைகளை வேறு தொணியில் சொல்லுவாள்.

எப்போதும் என்னைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பாள் அவளைப் பற்றி நான் சிந்திக்கக்கூடாது என்பாள்.திடீர் என அழைத்து "மச்சி, உன் கல்யாணத்துல நான் தான் சாம்பார் ஊத்துவேன் "என்பாள்.பின்பு "இந்த வயசுல படிப்புத் தான் முக்கியம் நீ நல்லா படி உனக்கு நல்ல பொண்ணா நானே பாக்குறேன்" என்பாள்.
அப்பாவுக்கு பயந்த பொண்ணு "காதலிக்கிறவளாம் கையப் புடிச்சு சுத்துறா. நண்பன் கூட சேந்து நடக்க முடியல"என பெருமூச்சு விடுவாள்.

அவள் உதட்டைப் பிதுக்கி கட்டை விரலை பூமி நோக்கி வைத்து "ஊத்திக்கிச்சு " எனச் சொல்லுகையில் தோல்வி அவ்வளவு அழகாக இருக்கும். அவள் மிக இயல்பானவள் என்பதாலேயே இக்கட்டுரையில் எந்த வார்த்தை ஜாலங்களை கைக்கொள்ள முடியவில்லை.இவை எல்லாம் இன்னும் ஒரு வருடத்திற்குத் தான் கல்லூரி முடிந்தவுடன் அவளுக்கு திருமணம். கணவன் நல்லவனாய் இருந்தால் எப்போதாவது பேசலாம் இல்லை என்றால் அதுவும் முடியாது.ஆனால் ஒரு தேவதை போல் என்னை எப்போதும் ஆசிர்வதித்துக் கொண்டிருப்பாள் என்பது மட்டும் உறுதி.

2 comments:

rajamelaiyur said...

அருமை
அன்புடன் :
ராஜா

அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்

பாரதி கண்ணம்மா said...

வரம் பெற்றிருக்கிறீர்கள் பரிதி :)

Post a Comment