Wednesday, August 31, 2011

அம்மாவும் தோழியும்

1.அம்மாவுக்கு எழுதிய

கவிதையை தோழிக்கும்

தோழிக்கு எழுதிய

கவிதையை அம்மாவுக்கும்

மாற்றி கொடுத்துவிட்டேன்

"அப்படியே புரிஞ்சு வச்சிருக்க"

என்றார்கள் இருவரும் .





2.நான் துயரப்படும் போதெல்லாம்

அம்மாவாகிவிடுகிறாள் தோழி

தோழியாகிவிடுகிறாள் அம்மா.



3.பல நாள் கழித்து

ஊர் திரும்புகையில்

கறி சமைத்து வைத்திருக்கிறாள் அம்மா

கவிதை சமைத்து வைத்திருக்கிறாள் தோழி.





4.தோழிக்கும் அம்மாவுக்குமான

இடைவெளி வெறும் வயதினால்

மட்டுமே நிரம்பியிருக்கிறது .





5.எனது வீட்டுப்பாடத்தை

எழுதித் தரச் சொல்லும் போது

"நான் என்ன உன் சோட்டுக்காரப் பிள்ளையா?"

என அம்மாவும்,

"நான் என்ன உங்க அம்மாவா?"

என சோட்டுக்காரப் பிள்ளையும்

கேட்டுவிட்டு எழுதித் தந்துவிடுகிறார்கள்.





6.அம்மாவின் தோழனும்

தோழியின் மகனும்

பாதி அதிஷ்டசாலிகள்.



7.என்னை அழைக்க

அம்மாவுக்கும் தோழிக்கும் மட்டும்

என் பெயர் தேவையே படுவதில்லை.

காற்று கவிதை

1.இறந்த சிறகொன்றுக்கு

உயிர் தந்து பறக்கவிடும்

காற்று- என் வீட்டு

மின்விசிறியில்

வெட்டுப்பட்டுச் சாகிறது.







2.உறைந்த நீர்

பனிக்கட்டி

பறக்கும் பனிக்கட்டி?

காற்று.





3. காற்று மட்டும்

பேசிக் கொண்டிருக்கிறது

மயான அமைதி.



4.மீன் நீரில் வாழும்

மான் நிலத்தில் வாழும்

நீரும் நிலமும் காற்றில் வாழும்.



5.சிகை கலைத்து

விளையாடும்

காதலி,காற்று.

Thursday, August 25, 2011

மது கவிதை


1.காலியாகும்
ஒவ்வொரு கோப்பையிலும்
நிரப்பப்படுகிறது மரணம்.

2.சரக்குடன் தண்ணீர்
கலப்பது போல்
அன்புடை நெஞ்சம் கலந்தனவே

3.போதை தரும் இன்பத்தை
மிஞ்சுகிறது
இன்பம் தரும் போதை.

4.குடி குடியைக் காக்கும்
மதுவிற்பனையாளன்.

5. மது வாங்கும் காசை
மடித்துக் கொடுங்கள்
காந்தி இருக்கிறார்.

6.மனிதன் கொஞ்சம் மதுவை ருசிக்கிறான்.
மதுவும் கொஞ்சம் மனிதனை ருசிக்கிறது.