Wednesday, October 5, 2011

சாமியும் பூச்சாண்டியும்....

கடவுள் இருக்கிறார் என்று சிலர் சொல்ல ஆரம்பித்தவுடனேயே கடவுள் இல்லை என்றும் சிலர் பேச ஆரம்பித்தார்கள்.இருக்கிறார்,இல்லை,இருந்தாலும் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் இல்லை.இல்லை என்பதற்கு ஆதாரம் போதுமானதாய் இல்லை.இப்படி நிறைய குழப்பமான வாதங்களுடன் கமலஹாசன் படம் போல் புரியாதவராகவே கடவுள் இருக்கிறார் கடவுள்.


எல்லா குழந்தைகளைப் போல் நானும் பிறக்கும் போது நாத்திகனே. வளரும் போது பெரும்பாலும் குழந்தைகள் ஆத்திகனாகிவிடும் ஆனாலும் வீட்டுச் சூழல் காரணமாக நாத்திகனாகவே நான் வளர்ந்தேன். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், முக்கியமாக பூசாரிகள், ஜோசியக்காரர்கள் எல்லாம் ஏமாற்றுக்காரர்கள் என்று நானே நினைத்துக் கொள்வேன்.எப்போதும் மற்றவர்களை வித்தியாசமாய் காட்டிக் கொள்ள விரும்பும் என் குணம் நாத்திகத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டது.

நான் நான்காவது படிக்கையில் மியூசிக் என்றொரு பாடமும் அதற்கு பரிட்ச்சையும் கூட இருந்தது. பெரும்பாலும் சமஸ்கிருத பாடல்கள்."சுக்லாம் பரதர விஷ்னு" மாதிரி. ஒன்றிரண்டு தமிழ் பாடல்கள் இருக்கும் "பாலும் தெளி தேனும்" மாதிரி. தமிழ் பாடல்களை மாணவர்கள் எளிதாய் பாடி விடுவதால் சமஸ்கிருத பாடலையே பரிட்சையில் பாடச் சொல்லுவார்கள். தீவிரமாக நாத்திகத்துள் இருந்த நான் எனது நாத்திகத்தை அந்த ஆசிரியைக்கு உணர்த்தும் பொருட்டு. "நான் சாமி பாட்டெல்லாம் பாடமாட்டேன் .வேணும்னா பாரதியார் பாட்டு பாடுறேன்" எனச் சொல்லி 'அக்னி குஞ்சு ஒன்று கண்டேன் ' பாடினேன்.(முந்தைய இரவு தான் அப்பா அந்த பாடலை சொல்லிக் கொடுத்தார்). ஆசிரியை எவ்வளவோ சொல்லியும் நான் மறுத்ததால். பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் 'நாத்திகன்' என்று அன்றே மனதில் பதிந்து போனேன்.அடுத்தநாள் பள்ளி முதல்வரிடம் அழைத்துச் செல்லப்படேன்."அவனுக்கு அந்த பாட்டு தெரியாததுனால தான் அவன் பாடல" என்று முந்தைய நாள் என்னை பாடச் சொன்ன ஆசிரியரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் முதல்வர்.உடனே நான் எல்லா பாடல்களையும் பாடி முடிக்க "எப்படி பாட வச்சேன் பாத்தியா" என்று என்னை பார்த்து சொன்ன பிரின்ஸ்பலை ஓங்கி தலையில் கொட்டு கொட்டுனு கொட்டலாமா என்று தோன்றியது.ஏமாற்றப் பட்டோம் எனத் தெரிந்ததும் கண்ணில் தண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அவர் மேல் இருந்த கோபம் ஒட்டு மொத்த ஆத்திகர்கள் மேல் திரும்பியது.என்னை நிறைய தி.க நூல்கள் படிக்க வைத்தது. யாராவது திரு நீறு,குங்குமம், வைத்துக் கொண்டு வந்தால் அவர்களை வம்புக்கிழுத்து கடவுள் இல்லை என்று நிறைய வாதங்கள் வைத்து அவர்கள் பேசமுடியாமல் திணறுவதைப் பார்த்து இரசிக்க ஆரம்பித்தேன்.


இந்த சமயத்தில் தான் கிறித்துவைப் பற்றி என்னிடம் பேசினார் ஒருவர். ஏசுவை எதிர்த்து பேச எந்த பாயின்டும் இல்லாததால் ஏசு தான் கடவுள் என்று நம்பி ஞாயிறு தோறும் சர்ச் செல்ல ஆரம்பித்தேன்.எனது அப்பா என்னை தடுக்கவில்லை.ஏசுவை பற்றி அவரிடம் சொல்லுகையிலும் அவர் எதிர்வாதம் பண்ணவில்லை.ஒரு வேளை அவர் அப்படி செய்திருந்தால் தீவிர கிறித்துவனாய் ஆகிருப்பேன்.மார்க்சியம் வாசிக்க ஆரம்பித்த காலம் அதுதான். ஒரு நாத்திகனான என்னை பகுத்தறிவாளனாய் ஆக்கியது. பின்பு யாராவது திருநீறும் குங்குமமும் வைத்திருப்பதைப் பார்த்தால் பரிதாபம் தோன்றியது. எங்கள் ஊரில் கோயில் வேண்டும் என மக்கள் போரடும்போது அப்பா ஆதரவு அளித்தது ஆச்சரியமூட்டியது.அதற்கு அவர் தந்த விளக்கம்."நாத்திகம் என்பது திணிக்கப்படக்கூடாது . மக்களே தெளிந்து வரவேண்டும். சாமியை வணங்காமல் இருப்பதற்கு நமக்கு இருக்கும் உரிமை வணங்குவதற்கும் அவர்களுக்கு இருக்கிறது. " இந்நிகழ்வுக்குப் பிறகு ஆத்திகர்களின் மீதான எனது பார்வை மாறி இருந்தது.

தினமும் குடித்து ஊர் வம்பிழுக்கும் அழகர் மாமா ஐய்யப்பனுக்கு மாலை போடும் போது மட்டும் ஒரு மாதம் குடிக்காமல் இருப்பார். எப்போதும் யாருடனும் பேசுவதற்கு கூச்சப்படும் பஞ்சம்மா சித்தி தீச்சட்டி எடுத்து வரும்போது போடும் ஆட்டம் செமத்தியானது.சீனி மிட்டாய், ஜவ்வு மிட்டாய் , தேனு மிட்டாய் போன்றவைகளை செய்து விற்கும் ஒரு பாட்டி திருவிழா காலத்தில் மட்டுமே கை நிறைய காசு பார்ப்பார். நேற்று கூட சென்ட்ரலில் இருந்து பூங்காவிற்கு போகும் சுரங்க பாதைக்கு அருகே அனுமார் படம் வரைந்து காசு வாங்கிக்கொண்டிருந்தார் ஒருவர். அண்ணன் போட்ட காசை எல்லாம் பாதி மாதத்திலேயே செலவு செய்துவிட்டு மீதி நாட்களில் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வீட்டு ஓனர் பொண்ணு வந்து 'சாமிக்கு படைத்தது' என்று தட்டு நிறைய பலகாரங்கள் வைத்து விட்டு போகும்.கார்பரேட் சாமியார்களுக்கு உதவும் கடவுள்( என்கிற கருத்து )மேல் சொன்னவைகளுக்கும் உதவும் போது அது மேல் இருக்கும் கோபம் குறைகிறது.


ஐன்ஸ்டீன் சொன்ன இதை எல்லா நாத்திகர்களும் பயன் படுத்திவிட்டார்கள் என்றாலும் இங்கே தேவைப் படுவதால் நானும் பயன்படுத்த வேண்டியுள்ளது."கடவுள் என்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை .ஆனால் கடவுள் இருக்கிறார் என்கிற நம்பிக்கை தான் பலரை மனிதர்களாகவே வைத்து இருக்கிறது". சில மனிதர்களை கடவுள் காட்டிதான் நல்லவனாக்க வேண்டியிருக்கிறது எனும் பட்சத்தில் சாப்பிடாத குழந்தைகளை சாப்பிடவைக்க பயன்படும் பூச்சாண்டியைப் போலாவது கடவுளின் தேவை நமக்கிருக்கிறது. ஆனால் கடவுள் இல்லை எனச் சொல்லும் பெரும்பாலன மனிதர்கள் பூச்சாண்டி இல்லாமலேயே சாப்பிடும் குழந்தைகளாய் இருக்கிறார்கள். அந்த குழந்தைகள் சமத்து என்றாலும் அதற்காக பூச்சாண்டிக்காய் சாப்பிடும் குழந்தையை குற்றம் சொல்ல முடியாது.

7 comments:

Anonymous said...

Good thinking and nice way of writting ..keep it up man ..all the best.seems to be u ill b a good writter in future..all ur poem(kavithai) are very nice...and creative.

Stalin

rajamelaiyur said...

//
"கடவுள் என்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை .ஆனால் கடவுள் இருக்கிறார் என்கிற நம்பிக்கை தான் பலரை மனிதர்களாகவே வைத்து இருக்கிறது".
//

உணமைதான்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

தமிழ்மணம் எங்களுக்கு SOLANUM TORVUM

ராஜ நடராஜன் said...

புதிய பரிதி!முதலில் உங்களுக்கு பாலோயர் போட்டு விட்டு வந்தேன் சொல்லி விட்டு மறுமொழியை எனது மறுமொழியில் தொடர்கிறேன்.இணைந்து கொள்வோம்!

தருமி said...

”சின்ன பையனி”(!)டமிருந்து ‘பெரிய” வார்த்தைகள்.

வாழ்க .. வளர்க ..

புதிய பரிதி said...

நண்பர்கள் கருத்துக்களை பதிந்ததற்கு நன்றி....

Anonymous said...

எப்படியோ எல்லாரும் சாப்பிட்டா சரி :)

Post a Comment