
வயசு எல்லாம் சரியாகத் தெரியவில்லை. எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து (ஒன்னாவது படிக்கும் போதுனு நினைக்கிறேன்) யாராவது நீ யார் ரசிகன் என்று கேட்டால்."இளைய தளபதி" எனக் காலரைத் தூக்கிவிட்டுச் சொல்வேன். அப்பொழுது நான் மட்டும் அல்ல எங்கள் ஊரில் உள்ள 12 பேர் விஜய் ரசிகர்கள் என்பதையும் தாண்டி விஜய் வெறியர்கள். அதே போல் ஒரு 8 பேர் கொண்ட அஜித் க்ரூப்பும் இருந்து வந்தது. எப்போதும் நாங்கள் முட்டிக் கொள்வது எல்லாம் இல்லை.ஆனால் எப்போதும் இரண்டு கேங்குக்கும் ஒரு கோல்ட் வார் நடந்து கொண்டிருக்கும். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஊரில் திருவிழாவுக்கு டான்ஸ் ஆடுவது வரை மறைமுகமாக குரோத நதி ஓடிக்கொண்டிருக்கும்.
விஜய், டி.வி.யில் பேசும் போது "எல்லோர் வீட்டில் இருக்கும் எனது குட்டி குட்டி நண்பர்களுக்கும்" என்பார். அவர் என்னைப் பார்த்து தான் பேசுகிறார் என நினைத்து பூரித்துப்போய் இருக்கிறேன். விஜய்க்காக நான் இழந்தது அதிகம். அதில் மிக முக்கியமான ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு இந்த கட்டுரை ஏன் எழுத வேண்டும் என நினைத்தேனோ அதை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
முன்னமே நான் சொன்னது போல் எங்கள் ஊரில் சிறுவர்கள் தான் திருவிழாவுக்கு ஆடுவார்கள். அங்கே ஜிங்கிலி பிங்கிலி எல்லாம் இல்லை. மிகவும் டீசன்டான ஊர் என்பதால் அப்படி. வருடா வருடம் ஒரு பொண்ணு ஆடும் அந்த பொண்ணு பேரை மறந்துட்டேன்.அந்தப் பொண்ணுடன் ஆடுவதற்குத் தான் அதிகபட்சம் எல்லா பையன்களும் ஆசைப்படுவார்கள். ஆனால் அந்தப் பெண் எப்போது சோலோ டான்சே ஆடும். அந்த வருடம் மட்டும் அந்தப் பெண் ஒரு பையனுடன் சேர்ந்து ஆடப் போவதாகவும் அது நான் தான் என்றும், அவள் அம்மா வந்து சொன்னபோது உண்மையிலேயே நம்ப முடியவில்லை. நான் தான் அந்த வாரத்தின் ஸ்டார் ஆனேன். பலர் வயிர் எரிந்து செத்துக்கொண்டிருந்தார்கள். டான்ஸ் பிராக்டிஸ் நாள் வந்தது. லிட்டில் ஜானி படத்தில் இருந்து "பூவுக்குப் பொறந்த நாளாம்" பாட்டுக்கு ரிகர்சல் பண்ண ஆரம்பித்தோம். எல்லாம் அன்று மதியம் வரை நன்றாய் போய்க் கொண்டிருந்தது. மதியம் அவள் அம்மா இந்த பாட்டு வேணாம் புதுசா "பூக்காரா"னு பாட்டு வந்திருக்கு அந்த பாட்டுக்கு ஆடலாம் என்றார். முன்னாடி நாள் தான் சிட்டிசன் படப் பாட்டு ரிலிஸ் ஆகியிருந்தது என்பதால் எனக்கு என்ன படம் என்று தெரியவில்லை. யார் ஹீரோ என நான் கேட்ட போது. அஜித் என்றார். "நான் அஜித்து பாட்டுக்கு வரமாட்டேன்" என்றேன். "இல்லப்பா அந்த பாட்டு நல்லா இருக்கும் . கேட்டு பாரு" என்றார். அஜித் பாட்டைக் கேட்கக் கூடாது என்று சபதத்தில் கிளம்பி வந்துவிட்டேன். அதன் பிறகு ஒரு பையன் வீட்டுக்கு விருந்தாளியாய் வந்த பொண்ணைப் பிடித்து ( அவளை விட அழகு கம்மி தான்) "பூவுக்கு பொறந்த நாளாம்" அடினேன்.வேறு ஊருக்கு குடி போனபின் அந்த பொண்ணுக்கும் அவளுடன் பூக்காரா பாட்டுக்கு ஆடியவனுக்கும் இருதலைக் காதல் என்று +2 படிக்கையில் நண்பன் ஒருவன் சொன்னான். நான் ஆடி இருந்தால் எனக்கும் அவளுக்கும் காதல் மலர்ந்திருக்கலாம். அன்று மிஸ் பண்ணிய சான்சால் இன்று வரை நான் சிங்கிளாகவே சுத்திக் கொண்டிருக்கிறேன்.எல்லாம் எதற்காக எங்கள் இளைய தளபதிக்காக.
குஷி, ப்ரெண்ட்ஸ்,யூத் என தளபதி பொளந்து கட்டிக்கொண்டிருக்கும் போது அஜித் ராஜா மாதிரி மொக்கைப் படங்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். அதனால் அஜித் ரசிகர்கள் எல்லாம் அடங்கி இருந்தார்கள். செம அடாவடி பண்ணிக் கொண்டிருந்தேன். அப்போது தான் வந்தது புதிய கீதை. எனக்குப் படம் சுத்தமாக பிடிக்கவில்லை. ஏன் தளபதி லூசு மாதிரிக் கத்திக் கொண்டிருக்கிறார் எனத் தோன்றியது.இருந்தாலும் அடுத்த படம் நல்லாய் வரும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தேன்.நம்பிக்கையில் இடியென விழுந்தது திருமலை ரிலீஸ். அந்த திருவிழாவுக்கு "தாம் தக்க தீம் தக்க தய்ய தக்க கூத்து" ஆடியதால் படத்தை நான் ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனால் புதிய கீதையைவிட விஜய் ஏகத்துக்கும் கத்தினார். தியேட்டர் விட்டு வெளியே வரும்போது என்னைத் தவிர எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். அந்த படம் தான் நான் விஜய் ரசிகனாய் நான் பார்த்த கடைசி படம். அடுத்து உதயா வந்தது. படு மொக்கை . அதிகாரப் பூர்வமாக விஜய் க்ரூப்பில் இருந்து விலகினேன்.அடுத்து கில்லி வந்தது. மதுர,திருப்பாச்சி, சிவகாசி என நடித்தார். ஹிட்டுகளும் ஆகின. ஆனாலும் என் கண் முன்னே " மேகமாய் வந்து போகிறேன்" எனப் பாடிய விஜயே கண்ணில் வந்து போனார். இது எனது தளபதி இல்லை. அவர் உருகி உருகி காதலிப்பார். எப்போதாவது சண்டை போடுவார். பஞ்ச் டயலாக் பேச மாட்டார். விஜயை எவ்வளவு எவ்வளவு நேசித்தேனோ அவ்வளவு வெறுக்க ஆரம்பித்தேன். விஜய் ரசிகன் கிடைத்தால் கலாசித் தள்ளுவதே பழக்கமாய் கொண்டேன்.
ஆனாலும் விஜயின் போக்கிரி அவரது மாஸைக் காட்டியது. ஆனால் அதன் பிறகு வந்த படங்கள் என்னை கொலைவெறி அடையச் செய்தன. சுறா அதன் உட்சபட்சம்.காவலனில் ஏதோ ட்ரை பண்ணியிருந்தாலும் பழைய ரேஞ்சை எனக்குத் தரவில்லை. வேலாயுதம் கதை என திருப்பாச்சி கதையைச் சொன்னதால் படத்தை பார்க்க ஆர்வம் இல்லை. அதிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுகிறார் என மார் தட்டி அவர் ரசிகர்கள் சொல்வதை கேள்விப் பட்டதும் ஒரு கட்டிங்க் போட்டுவிட்டு விஜய் ரசிகர்களை எல்லாம் கடத்திக் கொண்டு வந்து கும்பிபாகம் பண்ணவேண்டும் என்று தோன்றியது. இதில் அவரது அரசியல் என்ட்ரி வேறு .அவரது அணில் வேலை இன்னும் எரிச்சல் கெளப்பியது.ஆனாலும் பழைய விஜயை பார்க்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் அடியில் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கிறது. "பர்சியூட் ஆஃப் ஹாப்பினேஸ்" போல் ஒரு படத்தில் விஜயை பார்க்க வேண்டும் என்று அந்த படம் பார்க்கும் போதெல்லாம் தோன்றும். எனக்கு மிகவும் பிடித்த பத்து படங்கள் என்று கேட்டால் அதில் த்ரீ இடியட்ஸும் கண்டிப்பாக இருக்கும் . அதில் விஜய் நடிக்கிறார் என்றதும் ஒரு பயமும் அதோடு சேர்ந்து எனது ஆசை நிறைவேற வாய்ப்பு உள்ளது என்கிற மகிழ்ச்சியும் சேர்ந்து கொண்டது. இன்று காலை கூட விஜயின் வேட்டைக்காரனை கலாய்த்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் விஜயிடம் இதை சொல்ல வேண்டும் என்று இருக்கிறது ."விஜய்ணா உங்கள எனக்கு ரொம்ப புடிக்குங்க்ணா..."
3 comments:
//விஜய்ணா உங்கள எனக்கு ரொம்ப புடிக்குங்க்ணா..." //
same feeling
more vijay stories visit www.kingraja.co.nr
thanks...
Post a Comment