மானுடராய்ப் பிறந்த
எல்லோரிடமும் ஒரு கத்தி இருக்கிறது.
அவரவர் வசதிக்கு ஏற்ப
சிறிதாகவோ பெரிதாகவோ
கூராகவோ மொன்னையாகவோ
புதிதாகவோ பழையதாகவோ
எப்படியோ
ஒவ்வொருவரிடமும் ஒரு கத்தி இருக்கிறது.
ஒட்டு மொத்த வர்க்கத்துக்கு
வழங்கப்பட்ட கத்தியை பயன்படுத்தி
நமக்குள் குத்திக் கொண்டு
எதிராளியுடன் சேரவே விரும்புகிறோம்
நண்பன் குத்துகையில் 'துரோகி' என்றும்,
காதலி குத்துகையில் 'தேவடியா' என்றும்,
கொப்பளிக்கும் நாம்.
நாம் பிரயோகிக்கும் போது மட்டும்
'சூழ்நிலை' எனச் செப்புகிறோம்.
நம்மை
கத்தியை வெறுக்கும் அஹிம்சாவாதியாகவும்
அடையாளப் படுத்திக்கொள்ளவும் முயல்கிறோம்.
நம்மிடம் இருக்கும் கத்தியை வைத்து
ஆப்பிள் வெட்டலாம்
மயிரைச் சரைக்கலாம்
எனச் சொல்லித் தரும்
சமூகத்தின் காட்டு இரச்சலில்
"களையும் எடுக்கலாம்"
என்கிற குரல் தூரத்தில் சன்னமாக ஒலிக்கிறது.

No comments:
Post a Comment