Tuesday, August 15, 2017

கீழடி: நசுக்கப்படும் தமிழர் அடையாளம்





தங்களது கடந்த கால வரலாறு, தோற்றம், கலாச்சாரம் ஆகியவற்றை அறியாத மக்கள் வேரற்ற மரம் போன்றவர்கள்

-மார்கஸ் கார்வே


வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!




உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா... இந்த வரிகளை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதி ஆண்டுகள் ஐம்பதைக் கடந்துவிட்டன. ஆனால் இன்றும் நாம் விழித்துக் கொள்ளவில்லை.

கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி  தமிழ் குடி என்கிற பெருமை மிகு வாக்கியத்தை எப்போதும் மார்தட்டிச் சொல்லும் நாம் அதை ஆதாரத்தோடு நிரூபணம் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கும் வேளையில் கண்மூடிக் கிடக்கின்றோம்..

கீழடி….  சங்கம் வளர்த்த மதுரையில் இருந்து சுமார் பதினொறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம்.   சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சிறுகிராமம் தமிழர்களின் பெரும் பெருமையை உலகுக்கு  உரக்கச் சொல்லக் காத்திருக்கிறது. ஆனால் அதை கேட்க நாம் தயாராகயில்லை என்பதுதான் சோகம்.

இந்தியா முழுக்க பழங்கால நாகரிகம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மத்திய தொல்லியல் துறை கடந்த 2013-14 ஆம்  ஆண்டுகளில்  வைகை நதிப் படுகையில் உருவான நாகரிகத்தைப் பற்றி ஒரு விரிவான கள ஆய்வை நடத்தியது. வைகை நதி துவங்கும் வெள்ளிமலையிலிருந்து அது கடலில் கலக்கும் இடம் வரை நதியின் இருபுறமும் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள அனைத்துக் கிராமங்களையும் தொல்லியல் துறை வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய அந்த பகுதியில் சுமார் 293 கிராமங்கள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கிராமங்களாக  கண்டறியப்பட்டன. அந்த கிராமங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தடயங்களும் தொல்லியல் எச்சங்களும் மிக அதிகமாக அடையாளங்காணப்பட்ட கிராமம்தான் கீழடி.


சுமார் நான்கரை கிலோ மீட்டர் சுற்றளவு, நூற்றி பத்து ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய 5,300 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இப்போது கிராமமாக நம் கண்முன் நிற்கும் கீழடி ஒருகாலத்தில் மிகப்பெரும் நகரமாக இருந்து வந்தது அந்த பொருட்களின் மூலம் தெரியவந்துள்ளது.

இன்றைய நாள்வரை சிந்து சமவெளி நாகரிகம் போல ஒரு பழமையான நாகரிகம் இந்தியாவில் இல்லை என்பதே பல முன்னணி வரலாற்றாசிரியர்களின் எண்ணம். சங்க இலக்கியம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் இருப்பவை எல்லாம் கற்பனையானவை என்பதும் மிகைப்படுத்தப்பட்டவை என்பதுமே அவர்களது கருத்து. ஆனால் அந்தக் கருத்தை சுக்குநூறாக உடைக்கும் வெடியாக இருக்கிறது கீழடி.

சங்க காலத் தமிழகத்தில் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாத நிலையில் முதன்முறையாக ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான முழுமையான அடையாளங்கள் கீழடியில் கண்டறியப்பட்டுள்ளன.  சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, வளர்ச்சி பெற்ற முழுமையான ஒரு நகரம் இப்போது ஆய்வாளர்களால் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. வரிசை வரிசையாக கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள் உருவாக்கப்பட்டு அந்த தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளிச் செல்வதற்குமான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் அந்தக் கால்வாய் தடத்தை ஒட்டி சிறியதும் பெரியதுமான ஆறு உலைகள்; கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள் உள்ளன. இது மட்டுமல்லாமல் மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள் உள்ளன. இதுபோன்ற அமைப்பை ஒப்பிடுவதற்கு தமிழ்நாட்டிலோ அல்லது தென்னிந்தியாவிலோ வேறு தொல்லியல் இடங்களே இல்லை என்று அடித்துக் கூறுகின்றனர் தொல்லியல் வல்லுநர்கள்.

கீழடியில் முத்துக்கள், தந்தத்தால் ஆன பல்வேறு பொருட்கள், சதுரங்கக் காய்கள், எண்ணிலடங்கா மணிகள், வணிகர்களின் எடைக் கற்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. மேலும்  கட்டடங்களின் தரைத்தளங்கள், நீண்டு செல்லும் மதில் சுவர்கள், போன்றவற்றுடன் உலர் கழிப்பிடங்கள் போன்ற அமைப்புகள் இருப்பதாகவும் அவற்றை பெண்கள் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. திறந்த வெளியில் மலம் கழித்தல் என்பது இந்தியாவின் தேசிய பிரச்சனையாக பார்க்கப்படும் நிலையில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் கழிப்பறை கட்டி வாழ்ந்திருப்பது அவன் சுகாதார அறிவுக்கு எடுத்துக்காட்டு.

இதுதவிர ஆப்கானிஸ்தானப் பகுதியைச் சேர்ந்த சூது பவளத்தினால் ஆன மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த மட்பாண்டங்களும் ,வட இந்திய பிராகிருத பெயர்கள் தாங்கிய எழுத்துக்களும் கிடைத்துள்ளன. பானை ஓடுகளில் இதுவரை 73 பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை எல்லாம் கீழடி வணிகத்தில் சிறந்த நகரமாக விளங்கியுள்ளது என்பதற்கான சான்றுகள்.

இத்துடன், ஒரு தொழிற்சாலை இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற தொழில்நுட்பக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலை எங்கும் குழாய்கள் பதிக்கப்பட்டிருப்பதால் கையால் கொண்டு செல்ல முடியாத திரவம் ஒன்றை வைத்து அந்த தொழிற்சாலை இயங்கியிருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. கீழடியில் கிடைக்கப்பெற்ற முக்கியமான கருவிகளுள் ஒன்று பானைகளில் எழுதும் எழுத்தாணி. மென்மையான பானை உடையாமல் அதில் எழுத எதைப் பயன்படுத்தினார்கள் என இத்தனை நாளாக இருந்து வந்த விடை தெரியாத கேள்விக்கு விலங்குகளின் எலும்பில் செய்யப்பட்ட எழுத்தாணி என்கிற பதில் கிடைத்திருக்கிறது. மொத்தத்தில்  வணிகமும், தொழில்நுட்பமும், கலாச்சாரமும் செழித்தோங்கிய நகரமாக இருந்திருக்கிறது கீழடி..

இதில் பெருமைக்குரிய விஷயம் மதப்பிரிவினைகளை ஏற்படுத்தி தமிழர்களை அழிக்க  நினைப்பவர்களுக்கு சம்மட்டி அடியாக இருக்கிறது கீழடி கண்டுபிடிப்பு என்பதுதான்.  கீழடியில் இதுவரை கிடைத்துள்ள 5,300 பொருட்களில் ஒன்றுகூட மத அடையாளம் சார்ந்த பொருட்கள் இல்லை. இதன்மூலம் பெரு மதங்களின் ஆதிக்கம் அல்லாத அடையாளமே உண்மையான தமிழரின் அடையாளம் என மார்தட்டுகிறது கீழடி. அதே போல் கண்டெடுக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ஆபரணங்களில் தாலி இல்லை. இதனால் திருமண பந்தம் என்பது இருமனங்களின் நம்பிக்கை சார்ந்ததாகவே அக்காலத்தில் இருந்திருக்க முடியும் என்றும் அந்த நம்பிக்கைகள் உடைந்த பின்பே தாலி போன்ற அடையாள பொருள் ஒன்று இருமன பந்தத்திற்குள் உருவாகியிருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கீழடியில் கிடைத்திருக்கும் கட்டடங்களைக் கொண்டு அப்போது வாழ்ந்த மக்களின் வாழ்வையும் பண்பாட்டையும் ஆராய்ந்து கொண்டிருந்த தொல்லியலாளர்களுக்கு  அங்கு வாழ்ந்த விலங்கு பற்றிய தகவல் ஒன்று கிடைத்தது சுவாரஸ்யமான கதை. கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட செங்கல் ஒன்றில் ஒரு விலங்கின் கால்தடம் பதிந்திருந்தது. அது செங்கல் காய்வதற்கு முன்பாகவே அந்த விலங்கு தெரியாமல் செங்கலை மிதித்திருக்கலாம் என்றும் அதனால் அதன் காலடித்தடம் பதிந்திருக்கலாம் என்றும் யூகிக்கப்பட்டது. இருப்பினும் அது என்ன விலங்கு என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை. ஏனெனில் அதன் கால்தடம் தற்போது உள்ள எந்த விலங்கின் கால்தடத்தோடும் ஒத்துப்போவதுபோல் இல்லை. தொல்லியலாளர்கள் பிரத்யேக ஆய்வுக்கு அதை அனுப்ப முடிவு செய்த நிலையில் அந்த செங்கலைப் பார்த்த அதிகம் படிக்காத ஆனால் வன அறிவு பெற்ற ஒருவர் அது நாயின் காலடி என்று தெரிவித்துள்ளார். தற்போது இருக்கும் நாய்களைவிட பெரிய நாயாக அது இருக்கவேண்டும் எனக் கூறிய அவர், அது போன்ற நாய்கள் ஐந்து சேர்ந்தால் ஒரு புலியை வீழ்த்த முடியும் என்றும் கூறியுள்ளார்.

இந்த ஆச்சரியம் நீங்குவதற்கு முன்பாகவே கீழடியின் நாகரிகம் அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு ஒரு ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் மதுரை நகரம் சங்க இலக்கியங்களில் வரும் மதுரை அல்ல என்று மறைந்த தமிழறிஞர் ராஜமாணிக்கனார் போன்ற தமிழ் ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வந்திருக்கின்றனர். ஏனெனில் மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை போன்ற சங்க இலக்கியங்களில் வரும் மதுரை திருப்புவனத்திற்கு மேற்காகவும் திருப்பரங்குன்றத்திற்கு நேற்கிழக்காகவும் அமைந்திருக்கிறது ஆனால் தற்போது உள்ள மதுரை நகரம் திருப்பரங்குன்றத்திற்கு தென்கிழக்கில் அமைந்திருக்கிறது. இதனை சுட்டிக் காட்டி தமிழ் அறிஞர்கள் தங்களது சந்தேகத்தை எழுப்பி வந்த நிலையில், புவியியல் அமைப்புகளைக் கொண்டு பார்க்கும் போது கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம்தான் மதுரையாக இருக்க முடியும் என்கிற அனுமானத்திற்கு வரமுடிகிறது.   பழமையான தொல்பொருட்கள் கிடைத்திருக்கும் கீழடியே பாண்டிய மன்னர்கள் தலைநகராக ஆண்டதும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததுமான மதுரையாக இருக்கலாம் என்கிற கருத்து தற்போது முளைத்துள்ளது. மேலும் சிலப்பதிகாரத்தில் மதுரையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நாலங்காடி, அல்லங்காடி உட்பட பல வணிக முகாம்கள் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டடங்களோடு ஒத்துப் போகின்றன.

இதில் கவனிக்க வேண்டியது இத்தனை அறிய தகவல்களும் வெறும் இரண்டாண்டு ஆராய்ச்சியில் கிடைத்தவை என்பதே. அகழ்வாய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 110 ஏக்கர் பகுதியில் வெறும் ஐம்பது செண்ட்களுக்கு உள்ளாக 102 குழிகள் மட்டுமே தொல்லியல் துறையால் தோண்டப்பட்டுள்ளது. மீதமிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளை ஆராய்ந்தால் இன்னும் பல அதிசயக்கத்தக்க தகவல்கள் நமக்கு கிடைக்கலாம்.ஆனால்  அதற்கு மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

கீழடியில் 2015 மற்றும் 2016 ஆகிய  இரண்டு ஆண்டுகள் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், 2017 ஆம் ஆண்டுக்கான அனுமதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதற்கான எந்த காரணத்தையும் அரசு தெரிவிக்கவில்லை. மேலும் மூன்றாவது கட்ட ஆய்வுக்காக நிதி கோரிக்கை அனுப்பி காத்திருந்த தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். அதற்கான காரணம் கேட்ட போது துறைரீதியான நடவடிக்கை என்கிற பதிலே வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு தீர்ப்பாயத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணன் முறையிட்டார். ஆனால் அவரது முறையீடு குறித்து தீர்ப்பாயம் பரிந்துரை செய்தும் தொல்லியல்துறை அதை இரண்டாவது முறையாகவும் நிராகரித்துள்ளது. முன்னதாக இந்த பணியிட மாற்றத்தை ரத்து செய்து மீண்டும் அமர்நாத்தை கீழடி ஆய்வுப்பணியில் ஈடுபடுத்தக் கோரி வழக்கறிஞர் கனிமொழிமதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு கீழடி அகழாய்வு சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதிலும் அதை சிறந்த அதிகாரி மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் நீதிமன்றத்திற்கு அக்கறை இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும் கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணனே ஏன் பணியில் தொடரக்கூடாது என கேள்வியும் எழுப்பியிருந்தனர்.

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதியில் ஒரு சதவீத நிலப்பரப்பு கூட ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படாத நிலையில் தொடக்கத்தில் இருந்து ஆய்வில் ஈடுபட்ட அமர்நாத் ராமகிருஷ்ணனை மத்திய அரசு இடமாற்றம் செய்ததும் அவருக்கு பதிலாக ஜோத்பூரில் புராதனச் சின்ன பராமரிப்பு துணை காப்பாளரான, அமர்நாத்தைவிட அனுபவம் குறைவான ஸ்ரீராமனை கண்காணிப்பாளராக நியமித்திருப்பதும் உள்நோக்கங்கள் அற்ற தற்செயல் நிகழ்வாகவே தமிழர்கள் பார்க்கவிரும்பினாலும், மத்திய அரசின் தொடர் செயல்பாடுகள் அந்த பார்வையை மாற்றும் வகையில் அமைந்து வருவதாக தமிழின ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

காரணம், குஜராத்தில் உள்ள தொழவீராவில் 13 ஆண்டுகள் அகழாய்வு செய்ய அனுமதித்த மத்திய அரசு. ஆந்திராவில் உள்ள நாகார்ஜூன கொண்டாவில் பத்து ஆண்டுகள் அகழாய்வு செய்ய அனுமதித்த மத்திய அரசு, அகிசித்ராவில் 6 ஆண்டுகளும், குஜராத்தில் உள்ள லோத்தலில் 5 ஆண்டுகளும் அகழாய்வு செய்ய ஊக்குவித்த மத்திய அரசு, கீழடி ஆராய்ச்சியை மட்டும் இரண்டே ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வருவதின் பின்னணி என்ன என்கிற கேள்வி ஒவ்வொரு தமிழனின் மனதிலும் விஸ்வரூபம் எடுத்து நிற்கத்தான் செய்கிறது.

-----------------------

ஒரு தொல்லியல் பொருள் எத்தனை ஆண்டு பழமையானது என்பதைக் கண்டுபிடிக்க அதன் கரிமூலப்பொருட்களின் மாதிரியை வேதிப்பொருள் ஆய்வகங்களுக்கு அனுப்பி “கார்பன் – 14 பகுப்பாய்வு எனும் முறையில் ஆய்வு செய்ய வேண்டும். பெரும்பாலும் இது போன்ற பொருட்கள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா அனலைசிஸ் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்படுகின்றன. அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களில் எத்தனை பொருட்களின் மூலக்கூறு மாதிரிகளை கார்பன்-14 பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பதை மத்திய தொல்லியல் துறை முடிவு செய்கிறது.

ராஜஸ்தானில் உள்ள காளிபங்கனில் நடத்தப்பட்ட அகழாய்வில் 28 பொருட்களின் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பிவைத்துள்ளனர். தொழவீராவில் இருந்து 20 பொருட்களின் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கிரிசராவில் இருந்து 15 பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், கீழடியில் கண்டறியப்பட்ட மூலப் பொருட்களின் மாதிரியில் இரண்டே இரண்டை மட்டும்தான் கார்பன் – 14 பகுப்பாய்வுக்கு அனுப்ப மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. குறைந்தபட்சம் 10 பொருட்களின் மாதிரியையாவது ஆய்வுக்கு அனுப்பினால்தான் பொருட்களின் உண்மைதன்மையை அறியமுடியும் என்பது தொல்லியலாளர்களின் கருத்து.

கீழடியில் அகழாய்வு தொடங்கப்பட்ட போது குஜராத்தில் உள்ள பிரதமர் மோடியின் சொந்த ஊரான வாட் நகரிலும் இராஜஸ்தானில் உள்ள பிஞ்ஜோர் எனும் இடத்திலும் அகழாய்வுகள் தொடங்கப்பட்டன.. இம்மூன்று இடங்களிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அகழாய்வு நடந்து முடிந்த நிலையில் வாட் நகரில் 2017 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மூன்றாம் கட்ட ஆய்வுக்கான தொடக்க நிகழ்ச்சி 2016 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதியே கொண்டாடப்பட்டுவிட்டது. பிஞ்ஜோரில் ஜனவரி 1 ஆம் தேதி துவக்க விழா நடந்தது. ஆனால் கீழடியில் மட்டும் ஆய்வு செய்ய அப்போது அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் கீழடிக்காக குரல் கொடுத்து போராட்டங்களை முன்னெடுத்தன. மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகமானதை அடுத்து , 2 ஆண்டுகள் நடை பெற்ற அகழாய்வு தொடர்பான அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்த பின்பே ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும் எனவும் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து வாட் நகரிலும், பிஞ்ஜோரிலும் நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்து அறிக்கை அளிக்கப்பட்ட பின் தான் தொடங்கப்பட்டனவா என்கிற தமிழரிஞர்களின் கேள்விக்கு மத்திய பாஜக அரசு மெளனம் சாதித்தது. இருப்பினும் கடந்த ஜனவரி மாதம் ஆய்வறிக்கை தயாரான பின்னும் மத்திய அரசுக்கு அகழாய்வை தொடங்கும் திட்டமிருப்பது போல் தெரியவில்லை. இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு குரல் எழவே, மார்ச் மாதம் அனுபவம் குறைவான அதிகாரியை கொண்டு மூன்றாம் கட்ட ஆய்வு பணிகளை அது தொடங்கியுள்ளது.

இல்லாத சரஸ்வதி நதியைக் கண்டறிய கோடிக்கணக்கில் செலவிட்டுக் கொண்டிருக்கிற மத்திய அரசு, விஞ்ஞானப் பூர்வமான ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்ட கீழடியில் ஆய்வைத் தொடர ஒத்துழைக்க மறுக்கிறது. அயோத்தியில் இராமாயண அருங்காட்சியகம் அமைக்க முதல்கட்டமாக 225 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள இந்த அரசு தான் கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களை காலப் பகுப்பாய்விற்கு அனுப்ப வெறும் ரூ. 1 லட்சத்தை ஒதுக்கியுள்ளது.

தமிழக அகழ்ஆய்வுகளை மத்திய அரசு புறக்கணிப்பது முதல் முறை அல்ல. கடந்த 2005 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து முடிந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள் மற்றும் அறிக்கைகள் தற்போது வரை வெளிவரவில்லை. சிந்து சமவெளி நாகரிகத்துடன் நேரடி தொடர்புடைய பல பொருட்கள் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள நிலையில் அதன் ஆய்வறிக்கையைப் பெற்று வெளியிட வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இப்படி அகழாய்வு முடிந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் அறிக்கையை வெளியிட முயற்சி செய்யாத தொல்லியல் துறை, அகழாய்வு நடந்து கொண்டிருக்கும் இடத்தில் அறிக்கையைக் கேட்டு அகழாய்வை நிறுத்தியதற்கு ஒரே நோக்கம்தான் இருக்கமுடியும் என்பதை இந்தி திணிப்புக்கு எதிராக கொதித்தெழுந்த  தமிழர்களுக்கும், தங்களது அடையாளங்களுள் ஒன்றான ஜல்லிக்கட்டுக்காக ஆர்ப்பரித்தெழுந்த தமிழ் நெஞ்சங்களுக்கும் சொல்லி விளங்கவைக்க வேண்டியது இல்லை.

தங்களது அடையாளங்களை அழிக்க நடத்தப்பட்ட படையெடுப்புகளைக் கடந்து தமிழர்கள் தங்களை தக்கவைத்துக் கொண்டு வாழ்ந்ததற்கு அடையாளங்கள் தமிழகமெங்கும் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. அதில் கீழடியைப் போல் முக்கியமான மற்றொரு சாட்சியம் கொடுமணல். தற்போதைய ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கொடுமணலில் பல்வேறு ஆயுதங்கள், ஆபரணங்கள், ரோமானியர்களுடன் வணிகத்தில் ஈடுபட்டதற்கான சாட்சிகள் இவற்றுடன் ஐநூறுக்கும் மேற்பட்ட சுடு மண் பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டன. அவ்வாறு கிடைத்த சுடுமண் பானைகளில் கிறுக்கல்களாக பல எழுத்துகளும் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றை வேதியல் ஆய்வுக்கு உட்படுத்திய போது அவையெல்லாம் கி.மு. ஆறு அல்லது ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்தவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதுவரை இந்தியாவில் நடைபெற்ற எந்த அகழ்வாராய்ச்சியிலும் எழுத்துகள் பொறித்த பானைகள் இந்தளவு கிடைத்தது இல்லை. இந்தியாவிலேயே தொன்மையான கல்வெட்டாக கருதப்படுவது பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட அசோகரின் பாறை சாசனங்கள்தான். அவற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அசோக பிராமி என்று குறிப்பிடப்படுகிறது. அசோகரின் கல்வெட்டுகள் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதனால் பிராமி எழுத்துதான் இந்தியாவில் முதலில் தோன்றிய எழுத்தாக இருக்கலாம் என கணிக்கப்பட்டது. ஆனால் அந்தக் கணிப்பை காணாமல் போகச் செய்யும் அளவுக்கு இருந்தன கொடுமணல் கண்டுபிடிப்புகள். அவற்றில் இருந்தவை அசோகர் பிராமி அல்ல என்பதும் முழுக்க முழுக்க தமிழர்களைச் சார்ந்த தமிழ் பிராமி என்கிற தமிழி எழுத்துக்கள் என்பதும் வரலாற்றை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க நிர்பந்தித்துள்ளது.

தமிழி என்கிற நம் தமிழர்களின் எழுத்து பழமையானதுதான் என்பதைக் குறிக்க பல நூல்களிலும் சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த பன்னவயன சுத்தா மற்றும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமவயங்க சுத்தா, ஆகிய சமண நூல்கள் 18 வகை எழுத்துகளைக் குறிப்பிடுகின்றன. அவற்றில் தமிழியும் ஒன்று. புத்தரின் கதையைக் கூறும், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிக முக்கிய பெளத்த நூலான "லலிதவிஸ்தாரா"வில் திராவிட லிபி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த திராவிட லிபி என்பது தமிழிதான் என செக் நாட்டில் பிறந்து தமிழறிஞராய் வாழ்ந்து மறைந்த கமில் சுவெலபில் குறிப்பிட்டுள்ளார்.

அசோகர் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு என்று வரையறைசெய்யப்பட்டுள்ள நிலையில் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழ் மக்கள் தங்களுக்கென தனியான ஒரு மொழியைக் கொண்டு எழுதியுள்ளார்கள் என்பது நிரூபணமானால் இந்தியாவிலேயே முதன்முதலில் எழுத்தறிவு பெற்றவர்கள் தமிழர்கள்தான் என்பது சிலரது அரசியலுக்கு எதிரானதாய் நிற்கும் என்பதால் அதை இருட்டடிப்பு செய்யும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். அதே சிலர்தான் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை விட பழமையானவை அல்ல என ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டும் வேலையிலும் ஈடுபட்டுள்ளனர்.கடல்கொண்ட பூம்புகாரின் கீழ் பொதிந்து கிடந்த தமிழரின் உண்மை அடையாளமே வெளிப்பட்டுள்ள நிலையில் வெள்ளிடைமலையான கீழடியை அவ்வளவு எளிதில் மறைத்துவிட முடியாது. இருப்பினும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பத்திரப்படுத்தப்படுமா என்கிற அச்சம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களைக் காக்க இந்தியாவெங்கும் 44 கள அருங்காட்சியகங்கள் மத்திய தொல்லியல் துறையின் கீழ் இருக்கின்றன. இவற்றில் தமிழகத்தில் இருப்பதோ ஒரே ஓர் அருங்காட்சியகம் மட்டுமே; அதுவும் சென்னை கோட்டைக்குள் இருக்கிறது. கர்நாடகத்தில் ஆறு மத்திய கள அருங்காட்சியகங்களும், ஆந்திராவில் நான்கு அருங்காட்சியகங்களும் உள்ளன. கீழடியில் எடுக்கப்பட்ட பொருட்கள், அந்தத் துறையின் மைசூர் கிட்டங்கிக்குக் கொண்டு செல்லப்படும் அதன்பின் அது நமக்கு எட்டாக்கனியே. ஏற்கனவே தமிழகத்திலிருந்து படியெடுக்கப்பட்ட பல்லாயிரம் கல்வெட்டுக்கள் மைசூரில்தான் இருக்கின்றன. அவற்றை நமது பல்கலைக்கழகங்களாலேயே அணுகவோ, ஆய்வுக்கு உட்படுத்தவோ இயலாத நிலைதான் இன்று வரை நீடிக்கிறது.

இந்த நிலையில்தான் கீழடி அகழாய்வில் கிடைத்தப் பொருட்களை இங்கே கள அருங்காட்சியம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை முன்வைத்து மத்திய அரசிடம் பெற்றுத்தரவேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உரியது. ஆனால், தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் மாநில அரசு வழக்கம் போல் அமைதி காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கள அருங்காட்சியம் அமைப்பதைப் போலவே அரசு செய்து முடிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விசயம். இந்த அகழ்வாராய்வுகளை துரிதப்படுத்துவது. இந்த ஆராய்ச்சிகள் தாமதப்படுத்த நமது அடையாளங்களை நமது அறியாமையால் நாமே அழித்து வருகிறோம். விவசாய வீழ்ச்சியாலும், ரியல் எஸ்டேட் தொழில் பெருக்கத்தாலும் பல அரிய பொக்கிஷங்கள் அடங்கிய நிலங்கள் எல்லாம் பிளாட்டுகளாகவும் கட்டடங்களாகவும் மாறி வருகின்றன. கீழடி நிலம் கூட அது தென்னை மர  தோப்பு என்பதால் மட்டுமே ஆய்வுக்கு பயன்படுத்த முடிந்தது. இதனால் வேகமாக கட்டடமாக மாறிவரும் பகுதிகளை உடனே ஆய்வு செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.

கீழடியில் கிடைத்துள்ளவை உண்மையிலேயே பழமையானதா இல்லையா எனற விவாதங்களை தொல்லியல் அறிஞர்கள் செய்துகொள்வதே சரி. ஆனால், அகழாய்வை அனுமதிக்க மாட்டோம் என்ற அரசியல் ரீதியான முடிவை அரசியல் கொண்டு எதிர்கொள்ள தமிழர்கள் தயாராக வேண்டும். தமிழர்களின் அடையாளங்களை நாகரீகங்களையும் பாடத்திட்டங்களில் சேர்த்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற முழக்கமும் எழுந்து வருகிறது. சிறு குழந்தைகளுக்கு நாகரிகத்தை கற்றுக் கொடுக்கும் போது அது எவ்வளவு பாரம்பரியமிக்கது என்பதையும் போதிக்கவேண்டும். நாம்  நண்பர்களோடு சேர்ந்து வடநாட்டு உணவகத்திற்கு சென்று ராஜஸ்தான் தாலி வாங்கி வயிறு நிறைய சாப்பிடும் அதே வேளையில் முதுமக்கள் தாழி குறித்த உரையாடலை தொடங்கவேண்டும். இடிக்கவேண்டிய தீண்டாமை சுவர்களை எல்லாம் இன்னும் இடிக்காமல் வைத்திருக்கும் நம் சமூகம் காக்க வேண்டிய தமிழர் அடையாளத்தை பிறர் தகர்க்க விடுவது சரியா?

(( நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்காக அந்த ஊடகத்தின் நிர்வாக விதிகளுக்கு உட்பட்டு எழுதப்பட்டது))

No comments:

Post a Comment