Tuesday, September 4, 2018

செப்டம்பர் எனும் திராவிட மாதம்



 ஒழுங்கற்றவையில் ஒரு ஒழுங்கைத் தேடுவதும், தொடர்பில்லாத சம்பவங்களில் இருக்கும் பொதுத்தன்மையை  கண்டடைவதும் மனித மனதிற்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செயல். இந்தக் கட்டுரையும் அதைத்தான் செய்ய முயல்கிறது.


"Remember Remember the fifth of November" என்கிற வாசகத்தை நாம் பலமுறை கேட்டிருப்போம். கத்தோலிக்க அடிப்படைவாத்திற்கு ஆதரவாக மன்னரையும் நாடாளுமன்றத்தையும் எதிர்த்து சதி செய்த guy fawkeys தூக்கிலிடப்பட்ட தினம் என்றாலும் இந்த வாசகம், மக்கள் குறித்து கவலைப்படாமல் வல்லாதிக்கம் செலுத்தும் அரசருக்கும் நாடாளுமன்றத்துக்கும் எதிராக இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல... திராவிடர்கள் அனைவருக்கும் ஒரு  வாசகம் உண்டு... Remember Remember the Month of September...

ஏனென்றால் செப்டம்பர் மாதம் என்பது திராவிடர்களாக அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கு தந்தவை ஒன்றல்ல ரெண்டல்ல..  இந்த உலகத்தில் ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி அதனை களத்துக்கும் எடுத்துச் சென்று அதை மக்களிடம் பொருத்தி அதனை மேலும் மேலும் செம்மைப்படுத்திய ஒரு தத்துவவாதி இருந்தார் என்றால் அது அனேகமாக பெரியாராகத்தான் இருக்கமுடியும். அதே போல் ஒரு சித்தாந்தத்தை தோற்றுவித்தவரிடம் முரண்பட்டு அவருடைய சித்தாந்தத்தையே ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்தவர் ஒருவர் இருந்தார் என்றால் அது அண்ணா மட்டுமாகத்தான் இருக்கமுடியும். இவர்கள் இருவரும் பிறந்த மாதம் என்பதற்காகவே செப்டம்பரை திராவிடர்கள் கொண்டாடலாம்... ஆனால் இவர்கள் இருவரை மட்டும் திராவிடர்களுக்கு செப்டம்பர் வழங்கவில்லை.. இன்னும் சில ஆயுதங்களையும் படிப்பினைகளையும் அம்மாதம் திராவிடர்களுக்கு வழங்கியுள்ளது.

மோசமான ஒடுக்குமுறைதான் புரட்சிக்கு தோற்றுவாய் என்பதைப் போல பிராமண அல்லாதோரின் எழுச்சிக்கு பாடுபட்ட திராவிட இயக்கத்தின்  தோற்றத்திற்கு வித்திட்டது, பிராமணர்கள் நிரம்பிய ஒரு இயக்கம். அதன் பெயர் ஹோம் ரூல் இயக்கம். அன்னிபெசண்ட் தலைமையில் இயங்கி வந்தது. இந்திய சுயாட்சிதான் அதன் நோக்கம் என்ற போதும் காங்கிரஸின் ஆதரவுடன் தொடங்கப்பட்டிருந்ததால் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் அதில் இணைந்தனர். காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பான்மையினர் பிராமணர்களாக இருந்த காரணத்தினால் ஹோம் ரூல் இயக்கம் பிராமணர்களின் கூடாரமாக மாறியது. மயிலாப்பூர் வழக்கறிஞர்கள் ஹோம் ரூல் இயக்கத்தை ஆக்கிரமித்தனர். ஏற்கனவே பிராமணர்களின் வல்லாதிக்கத்திற்கு எதிராக திராவிடர் சங்கத்தை நடத்தி வந்த டாக்டர் சி. நடேச முதலியாருக்கு இந்த அணிவகுப்பு ஆபத்தானதாகப் பட்டது. அவர் பிராமணரல்லாத முக்கியப் பிரமுகர்களை கொண்டு தனி இயக்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என நினைத்தார். விளைவு சர் பிடி தியாகராயர், டி.எம்.நாயர், திவான் பகதூர் பி.ராஜரத்தின முதலியார் ஆகியோருடன் இணைந்து தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. அது ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் என்கிற பத்திரிகையை நடத்தி வந்ததால் நீதிக்கட்சி என்று நாளடைவில் மாறியது. இந்த நீதிக் கட்சியின் தொடக்கத்திற்கு வித்திட்டது ஹோம் ரூல் இயக்கம். ஹோம் ரூல் இயக்கம்  தொடங்கப்பட்டது , 1916 ஆம் ஆண்டு 12 ஆம் தேதி. மாதம்? செப்டம்பர்!


அதுமட்டுமல்ல 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் திராவிட இயக்கங்களின் மூலமாகக் கருதப்படும் நீதிக்கட்சி வெற்றிகரமாக ஆட்சி செய்து முடித்திருந்தது. காங்கிரஸில் இருந்த பிராமண ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட நீதிக்கட்சியின் முதல் ஆட்சியில் பிராமண அல்லோதோர் அதிகம்பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். மாண்டேகு-செம்ஸ்போர்டு பரிந்துரையின் பேரில் இரட்டை ஆட்சிமுறையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட தேர்தல் என்பதால் காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணித்திருந்தது. தனது முதல் ஆட்சி காலத்தில் நீதிக்கட்சி எதற்காகத் தொடங்கப்பட்டதோ அந்தப் பணிகளை நிறைவேற்றுவதில் துரிதமாக இயங்கியது. அரசு வேலைவாய்ப்பில் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் 1921 ஆம் ஆண்டு . தணிகாசலம் செட்டியார் மசோதா ஒன்றை கொண்டுவந்தார். அனைத்து சமூகத்தினருக்கும் அரசுப்பணிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்றது அந்த மசோதா. அதை பிராமணர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் நிறைவேற்றியது நீதிக்கட்சி. அதே போல் 1920 ஆம் ஆண்டு தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்ட நிலையில் திவான் பகதூர் கிருஷ்ண நாயர் கொண்டு வந்த மசோதா மூலம் ஆண்களைப் போல பெண்களும் வாக்களிக்கலாம் என்கிற நிலையை உருவாக்கியது. இதில் பயனடைந்தது பிராமணப் பெண்களும்தான் என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. அத்துடன் பஞ்சமர் என்கிற சொல்லுக்குப் பதிலாக ஆதி திராவிடர் என்கிற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது , தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனி அலுவலர்கள் நியமனம் செய்தது, அறநிலையத்துறை அமைத்து பிராமணர்களின் கோட்டையான கோயில்களை பிராமணரல்லாதார் கைகளுக்கு கொண்டு வந்தது என பலவற்றை செய்த நீதிக் கட்சி அரசு செப்டம்பரில் முடிவுற்றது. ஆனால் அதுதான் திராவிட பேரியக்கத்தின் தொடக்கம்.

நீதிக்கட்சியின் சமூக செயல்பாடுகள் அடுத்த தேர்தலிலும் அவர்களுக்கு வெற்றியை வழங்கியது. இருப்பினும் நீதிக்கட்சியில் ஏற்பட்ட பிளவின் காராணமாக 1926 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியது. பிறகு பல்வேறு அரசியல் அந்தர் பல்டிகளுக்குப் பிறகு நீதிக்கட்சியின் ஆதரவு மூலம் சுப்புராயன் ஆட்சி நடத்தத் தொடங்கினார். இந்தக் காலகட்டங்களில் பெரியாரும் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி இருந்தார். அவருடைய வழிகாட்டுதலின் படி அவரது நீண்டகால கோரிக்கையான கம்யூனல் ஜி..வை சுப்புராயன் அரசு கொண்டு வந்தது. இந்த சாதனையை செய்த சுப்புராயனின் ஆட்சிக்காலமும் 1930 செப்டம்பரில்தான் நிறைவுற்றது. இம்முறை அதே செப்டம்பர் மாதத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது நீதிக்கட்சி. இந்தநிலையில்தான் 1934 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி திரும்பப் பெற காங்கிரஸ் நேரடியாக தேர்தல் களத்தில் குதித்தது.

பலம் வாய்ந்த காங்கிரஸை எதிர்கொள்ள பெரியாரிடம் தஞ்சம் அடையும் முடிவுக்கு வந்திருந்தது நீதிக்கட்சி. ஆனால் பெரியார் காங்கிரஸின் எதிரி என்பதற்காக மட்டும் நீதிக்கட்சியை வழிநடத்த ஒப்புக்கொள்ளவில்லை. அவர் ஒரு வேலைத்திட்டத்தை காங்கிரஸ் கட்சிக்கும் நீதிக்கட்சிக்கும் அனுப்பி வைத்தார். விவசாய நலன், தொழிலாளர் நலன் என சோசலிசப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த அந்த வேலைத்திட்டத்தில்  ”மதங்கள் அரசியலில், நிர்வாகத்தில் எவ்வித சம்மந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்கவேண்டும்” போன்ற திராவிடக்கருத்துகளும் இருந்தன என்பதை சொல்லத் தேவையில்லை. பிராமணர்களின் கையில் இருந்த காங்கிரஸ் அதை நிராகரிக்க பிராமணரல்லாதோர் வசம் இருந்த நீதிக்கட்சி அதனை ஏற்றுக் கொண்டது. ஏற்றுக்கொண்ட தினம் 1934 ஆம் ஆண்டு 29 ஆம் தேதி செப்டம்பர் மாதம். அதுதான் பெரியார் கட்டமைத்த திராவிட தத்துவத்திற்குள் நீதிக்கட்சி நுழைந்ததற்கான முதல் படி.


தமிழர்கள் என்றாலே இன்றும் கூட வடக்கத்தியர்களுக்கு இந்தி எதிர்ப்புக்காரர்கள்தான். தமிழர்கள் அதனை இந்தி திணிப்புக்கான எதிர்ப்பு என்று திருத்திச் சொன்னாலும் அவர்களுக்கு அது மூளையில் ஏறுவதில்லை. காரணம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழர்கள் காட்டிய வேகம் அவ்வளவு வீரியமிக்கது. 1938 ஆம் ஆண்டு தமிழர்கள் மேல் திணிக்கப்பட்ட இந்தியை எதிர்த்து இந்தி திணிப்பு எதிர்ப்பு படை ஒன்று உருவானது. பாவேந்தர் பாரதிதாசனின் பாடலைப் பாடியபடியே ஒரு பெரும்பயணத்தை மேற்கொண்டது அப்படை. திருச்சி உறையூரில் தொடங்கி 234 ஊர்களைக் கடந்து, 87 பொதுக்கூட்டங்களை நடத்தி, 42 நாட்களாக நடந்த நெடும்பயணம் நிறைவுற்ற தினம் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி. அதே தினத்தில் சென்னை கடற்கரையில் கூடிய 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பேசிய பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கினார். ஏற்கனவே சிலர் இந்த கோஷத்தை முன்வைத்திருந்த போதும் பெரியார் முன்மொழிந்த பின் அதிக முக்கியத்துவம் பெற்றது. இந்த முழக்கம் இன்றளவும் தமிழகத்தில் ஏதேனும் ஒரு மூலையில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

என்னதான் நீதிக்கட்சி பெரியாரின் தலைமையின் கீழ் வந்திருந்தாலும், அதன் முக்கியஸ்தர்கள் பிராமணரல்லாதோராக இருந்தாலும் சாதி ஒழிப்பில் ஆர்வம் காட்டதவர்களாகவும், அரசு பதவி பட்டத்தின் மேல் அதிகம் நாட்டமுடையவர்களாகவும் இருந்தனர். இவர்களை எல்லாம் களையெடுக்க நினைத்த பெரியார் அண்ணாவைக் கொண்டு சில முற்போக்கு தீர்மானங்களை நிறைவேற்றினார். இதனால் அதிருப்தி அடைந்த நீதிக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் 1944 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கரை சந்திக்க விரும்பினர். இந்தியா முழுவதும் பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துக் கொண்டிருக்கும் அம்பேத்கர் தங்களுக்கு ஆதரவு அளித்தால் பெரியாரை வென்றுவிடலாம் என்பது அவர்களது கணிப்பு. சென்னை கன்னிமாரா ஹோட்டலில் சண்டே அப்சர்வர் பி.பால சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய அம்பேத்கர், பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்க்க பெரியார் போல ஒரு தலைவரும், பெரியார் முன்மொழிந்தது போன்ற தெளிவான திட்டங்களும் தேவை என்று உரையாற்றினார். இந்த நிகழ்வை “சோறு போட்டு உதை வாங்கிய கதை” என்று குடியரசு பத்திரிகையில் கிண்டலடித்தார் பெரியார். பெரியாரும் அவரது திராவிட கொள்கையுமே சீர்திருத்ததிற்கான வழி என அம்பேத்கர் உறுதி செய்த தினம் 24 செப்டம்பர். பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை கட்டமைக்க தற்போது சிலர் முயல்வதைப் போல இருவரும் உயிருடன் இருக்கும் போதே முயற்சி எடுக்கப்பட்டது. ஒரு செப்டம்பர் நன்னாளில் அது தோல்வியைச் சந்தித்தது.

அதுமட்டுமல்ல திராவிடர் கழகத்திற்கான லட்சியங்கள் வரையறுக்கப்பட்ட மாதமும் செப்டம்பர்தான். 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி திருச்சி புத்தூர் மைதானத்தில் கூடிய மாநாட்டில்தான் திராவிட நாடு என்கிற கருத்தியல் முழுமை பெற்றது. சாதி,மத, பேதங்கள் மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவது அனைத்துவிதமான சுரண்டல்களில் இருந்தும் மக்களைக் காப்பாற்றுவது போன்றவை லட்சியங்கள் பட்டியலில் இருந்தன என்பதைக் கூற வேண்டியதில்லை. அதே போல் அந்த மாநாட்டில்தான் திராவிட இயக்கத்தின் அமைப்பு கட்டமைப்பு ரீதியாக எவ்வாறு இருக்கவேண்டும் என்பதும் இறுதி செய்யப்பட்டது.தமிழக கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கருப்புச் சட்டை படையின் துவக்கமும் அத்தினமே. இன்றளவும் தமிழகத்தில் கருப்புச் சட்டைக்காரர் என்றால் அது பெரியார் கொள்கைகளைப் பின்பற்றக் கூடியவர் என்றே அர்த்தம். கறுப்பு சட்டை அணிந்து ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் சாதி, மதக் கொடுமைகளையும், மூட நம்பிக்கைகளையும் இளைஞர்கள் தட்டிக் கேட்கத் தொடங்கினர். அதற்கான வித்து போடப்பட்டது செப்டம்பரில். அண்ணாவுக்கு கருப்புச் சட்டை அணிவதில் உடன்பாடு இல்லாத நிலையில் இந்தக் கருப்புச் சட்டை விவகாரமே இருவருக்கும் இடையில் மனக்கசப்பை ஏற்படுத்தியது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

1945 செப்டம்பர் மாதத்தில் தொடங்கிய விரிசல் விதை 1947 செப்டம்பர் மாதத்தில் முளைவிடத் தொடங்கியது. ஏற்கனவே சுதந்திர தினம் குறித்த விவகாரத்தில் பெரியதாக வளர்ந்திருந்த விரிசல் இப்போது உடைப்புக்கான தொடக்கமாக மாறியது. சுதந்திர தினம் என்பது பிரிட்டிஷ்காரர்களை மாற்றிவிட்டு பிராமணர்களை அமரவைப்பது என்று கூறி பெரியார் எதிர்த்திருந்தார். இரண்டு சுரண்டல்காரர்களில் ஒரு சுரண்டல்காரனிடம் இருந்து விடுதலை கிடைத்துவிட்டது என்று அண்ணா சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருந்தார். இந்த நிலையில்தான் 1947 செப்டம்பர் 14 ஆம் தேதி திராவிட பிரிவினை மாநாடு ஒன்று பெரியார் தலைமையில் கூடியது. மாநாட்டில் அண்ணாவும் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை. இதனால் கொந்தளித்த பெரியார் ஆதரவாளர்கள் சிலர் அண்ணாவின் படங்களை கொளுத்தும் சம்பவம் கூட நடைபெற்றது. ஆனால் கறுப்புச் சட்டை படைக்கு அப்போதைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி தடைவிதித்ததும் மீண்டும் பெரியாரும் அண்ணாவும் இணைந்தனர்.

தனக்குப் பின் அண்ணாதான் தலைவர் என்று பெரியார் ஈரோடு மாநாட்டில் தெரிவித்தார். ஆனால் அண்ணா தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்திருந்ததால் வேறொரு நபருக்கு தலைமையையும் திராவிடர் கழகத்தின் சொத்துக்களையும் மாற்ற நினைத்தார் பெரியார். அதற்கு அவர் .வி.கே.சம்பத்தை தேர்ந்தெடுத்த நிலையில் அவரும் அண்ணாவின் தீவிர விசுவாசியாக இருக்க தனக்கு பணிவிடை செய்து வந்த மணியம்மையிடம் சொத்துக்களையும் கட்சியையும் ஒப்படைப்பது என்று முடிவெடுத்தார். அப்போது இந்து மதச் சட்டப்படி ஒரு பெண்ணுக்கு தத்து எடுக்கும் உரிமையும் இல்லை.. தத்துப்போகும் உரிமையும் இல்லை. ஆகையால் பெரியார் மணியம்மையை திருமணம் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. 70 வயது பெரியார் 32 வயது மணியம்மையை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். அதனை தீவிரமாக எதிர்த்தனர் அண்ணாவும் அவரது ஆதரவாளர்களும்.. இந்த நிலையில் திருமணம் முடிந்தது. அத்தோடு செப்டம்பர் 10 , 1949 ஆம் ஆண்டு கே.. மணியம்மையின் பெயர் .வெ.ரா. மணியம்மை என்று மாற்றப்பட்டதாக குடியரசில் செய்திகள் வந்தன. ஏற்கனவே கொந்தளித்திருந்த அண்ணா அணியினர் 17 செப்டம்பர் 1949 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு இல்லத்தில் கூடினர். முக்கிய நிர்வாகிகள் இணைந்து பெரியார் தலைமையில் நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் கொண்டு வந்தனர். திமுக உருவானது. அன்று பெரியாரின் பிறந்த தினம் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

திமுகவின் உருவாக்கம் தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலிலேயே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. தேசியக்கட்சி அல்லாமல் ஆட்சியைப் பிடித்த முதல் மாநிலக் கட்சி என்பதில் தொடங்கி சுயமரியாதை திருமணம், பெண்களுக்கு சொத்துரிமை, கைரிக்‌ஷா ஒழிப்பு போன்றவற்றோடு எண்ணற்ற சமூகநீதி திட்டங்களை இந்தியாவில் முதன்முதலாக செயல்படுத்தியது திமுகதான் என்பது கருணாநிதியின் மறைவுக்குப் பின்னான செய்தித்தாள்களை வாசித்திருந்தாலே புரிந்திருக்கும்..

மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசுகள் மெல்ல மெல்ல பறித்துக் கொண்டிருக்கையில் இன்று கருணாநிதி அமைத்த ராஜமன்னார் குழு முக்கியத்துவம் பெற்று வருகிறது. எப்போதும் மத்திய அரசே மாநில அரசுகளுடனான உறவு குறித்து முடிவு செய்யும் நிலையில் கருணாநிதி,  மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக ராஜமன்னார் குழுவை நியமித்தார். 383 பக்க அறிக்கையை அந்தக் குழு சமர்பித்தது. இந்த அறிக்கை தமிழகத்திற்கு மட்டுமல்ல இலங்கைக்கும் மிக முக்கிய ஆவணமாக இருந்தது. ஈழத் தமிழர் பிரச்சனை சமயத்தில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையின் போதும் நார்வே பேச்சிவார்த்தையின் போதும் இதன் பரிந்துரைகளை முன்வைத்து விவாதங்கள் நடந்தன. மேலும் ஜோதிபாசு மேற்கு வங்க முதல்வராக இருந்த போது ராஜமன்னார் குழுவின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்ம் என்று மத்திய அரசுக்கு வெள்ளை அறிக்கை அனுப்பியதும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இந்தக்குழு அமைக்கப்பட்டது செப்டம்பர் 22 1969.

செப்டம்பர் மாதத்தில் நிகழ்ந்த அல்லது நிகழத் தவறிய நன்மை ஒன்று உண்டு. திமுகவின் தலைமைக்கு கருணாநிதி வந்த பிறகு திமுகவில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். அதிமுக என்கிற பெயரில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியையும் பிடித்தார். இருவரின் கொள்கைகளும் திராவிடம்தான் என்ற போதும் திமுகவும் அதிமுகவும் பரம எதிரிகள் போல மோதிக் கொண்டன. (இங்கே அதிமுகவை ஒரு முழுமையான திராவிடக்கட்சி என்று கூறமுடியுமா என்கிற கேள்விகள் எழலாம் ஆனால் அது தனி விவாதம். நடைமுறையில் திமுக போல் இல்லையென்றாலும் அதன் பெயரில் இருந்த திராவிடம் என்கிற வார்த்தைக்காகவும் திமுகவை விட அண்ணாவின் மேல் பற்றுக் கொண்டவர்கள் எனபதைக் காட்டிக் கொள்வதற்காகவும் அதிமுக திராவிட திட்டங்களை முன்வைக்க நேர்ந்தது என்பதை மறுக்கமுடியாது.)

இந்த சமயத்தில்தான் அதிமுகவும் திமுகவையும் இணைக்கும் முயற்சி ஒன்று நடைபெற்றது. ஜனதா தளக் கட்சியை சேர்ந்த பிஜு பட்நாயக் அந்த முயற்சியை மேற்கொண்டார். மேடைகளிலும் ஏடுகளிலும் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த எம்ஜிஆரையும், கருணாநிதியையும்1979 ஆம் ஆண்டு தனிமையில் சந்திக்க ஏற்பாடு செய்தார். அவர் தேர்வு செய்த நாள் செப்டம்பர் 12 . சந்திப்பில் இருவருக்கும் உடன்பாடு ஏற்பட்டது. எம்ஜிஆர் முதல்வராகவும் கருணாநிதி கட்சியின் தலைவராகவும் இருக்கமுடிவு செய்யப்பட்டது. கட்சியின் பெயர் திமுகவென்றும் கட்சியின் கொடி அதிமுகவின் கொடி என்பதும் கூட இருவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.. ஆனால் அடுத்த நாளே அதிமுக மேடையில் எம்ஜிஆர் இருக்கும் போதே கருணாநிதியையும் திமுகவையும் அதிமுக பேச்சாளர்கள் விமர்சிக்க அந்த இணைப்பு நிகழவில்லை. ஒரு வேளை அந்த இணைப்பு இணைந்திருந்தால் இத்தனை ஆண்டு காலமாக நடந்து வந்த திராவிடம் vs திராவிடம்  அரசியல் தமிழகத்தில் நடந்திருக்காது.

கருணாநிதி , எம்ஜிஆர் ஆகியோரின் வழி மட்டுமல்ல ஜெயலலிதாவின் வழியிலும் செப்டம்பர் மிகவும் முக்கிய மாதமாகப் பார்க்கப்படுகிறது. எம்ஜிஆருடன் திரைப்படங்களில் நடித்து பின்பு அவரது கட்சியிலும் இணைந்து அரசியலில் ஈடுபடத் தொடங்கிய ஜெயலலிதா விரைவிலேயே அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் என்கிற பொறுப்பைப் பெற்றார். கட்சியில் இருந்து வளர்ந்து வந்த ஜெயலலிதா எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் போதே திடீரென கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். அவரது கொள்கை பரப்புச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிட்டது எனப் பலரும் கணித்த நிலையில் அவர் 1986 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் இந்த அரசியல் மறுபிரவேசம் நடந்தது ஓரு செப்டம்பர் மாதத்தில்... அன்று அவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை எனில் எம்ஜிஆர் இருக்கும் போதே அவரால் கட்சியில் இருந்து விலக்கிவைக்கப்பட்டவர் என்கிற முத்திரையோடு ஜெயலலிதா இருந்திருப்பார்.இதனால் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் தலைமைப் பொறுப்பை அவரால் ஏற்றிருக்க முடியுமா என்பதும் கேள்விக் குறியே. இதில் வருந்தத்தக்க சுவாரஸ்யம் என்னவெனில் எம்ஜிஆருக்குப் பிறகு தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்த ஜெயலலிதா கடைசியாக செப்டம்பர் மாதத்தில்தான் மருத்துவமனையில் உடல்குறைவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவர் நலம்பெற்று திரும்பவேயில்லை.

இதுதவிர, அண்ணாயிசம் என்கிற 29 பக்க அதிமுகவின் கொள்கை அறிக்கையை எம்ஜிஆர் வெளியிட்டது, தற்போது தமிழகத்தின் துணை முதல்வராக இருக்கும் .பன்னீர் செல்வம் முதன்முறையாக முதல்வராக அறிவிக்கப்பட்டு அதிகார வட்டத்திற்குள் வந்தது என குறிப்பிடும்படியான நிறைய நிகழ்வுகள் இந்த செப்டம்பர் மாதத்தில் நடந்துள்ளன. ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி திமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் மு..ஸ்டாலின். அவர் தலைவராக எதிர்கொள்ளவிருக்கிற முதல் மாதமாக காத்துக் கொண்டிருக்கிறது செப்டம்பர்..





No comments:

Post a Comment