Thursday, June 24, 2010

பேருந்தும் மாற்றமும்



எங்கள்
கிராமத்திற்கு
பேருந்து போவது
அதிசயம்

அது
புதிதாய் இருக்கும்
என்பது மூட நம்பிக்கை

என்
முதல் பேருந்துபயணம்
மூன்று வயதில்
நடந்தேறியது

கூட்ட நெரிசலில்
மூச்சுவிட முடியாமல்
திணறிய நான்
`மாமா மடியில் உக்காந்துக்கோ`
என்று அடையாளம்
தெரியாதவர் மடியில்- அம்மாவால்
அமரவைக்கப்பட்டேன்

அவர் கையில்
பச்சை குத்தப்பட்டிருந்த
வினோதமான படத்தைப்
பார்த்து நான் அழுததும்
என்னை சமாதானப்படுத்தும்
முயற்சியில் அவர் தோற்றதும்
நினைவில் இன்னும் பசுமையாய்
இருக்கிறது.

இருபது வருடங்கள்
ஓடிவிட்டன
அதே கிராமத்திற்கு
அதே ஓட்டைப் பேருந்தில்
அதே கூட்ட நெரிசலில்
பயணித்துக் கொண்டிருந்தேன்

`சார் கொஞ்சம் இடம் கொடுங்கள்`
என்றதும் அந்தபெறியவர்
விலகி உட்கார்ந்தார்
கிட்டதட்ட நான்
அவர் மடியில் அமர்ந்திருந்தேன்
அவர் கையில்
அதே வினோதமான பச்சை

இந்த இருபது வருடம்
எதையுமே மாற்றவில்லை
பழைய கிராமம்
ஓட்டை பேருந்து
கூட்ட நெரிசல்
என்று எதையுமே
மாற்றவில்லை
`மாமாவை` `சார்` ஆக்கியதைத்
தவிர்த்து

No comments:

Post a Comment