Thursday, November 4, 2010
ஒரு சுயநலக்காரனின் உளரல்
கவிஞன் எனும் நான்,என்னையே அறியமுற்பட்டேன்..என் கனவு தேசத்தை விட்டுவிட்டு எவனோ செய்த உலகத்தில், இலையுதிர்காலத்தின் கடைசி இலையாய் ஒட்டியும் ஒட்டாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.எனக்கு பிடித்தோ பிடிக்காமலோ என் மீது வண்ணங்களை எவனோ ஒருவன் பூசிக் கொண்டு இருக்கிறான்.எவன் மீதோ பூசுவதற்கு என் கையில் வண்ணக்கலவை திணிக்கப்பட்டிருக்கிறது..நானும் அவனது முகத்தில் வண்ணங்களை அடித்துக்கொண்டிருக்கிறேன்,எப்போதாவது சுய பிரஞை பெற்று இதை எல்லாம் மாற்ற நினைத்தால் "புரட்சிக்காரன்" என்று பச்சை குத்திவிடுவார்களோ என்ற பயம் வந்து சூழ்ந்து கொள்ள ஒரு சுயநலவாதியாய் இருக்க சம்மதித்து விடுவேன்.என் போல் புரட்சிக்காரனாய் மாற நினைத்து முடியாமல் போனவர்களின் தோழமை கிடைக்கவும், அதை பிடிக்காதவர்களின் விரோதத்தை சம்பாதித்துக் கொள்ளாமல் இருக்கவும் ஒரே சமயத்தில் ஆசைப்பட்டேன்.இப்பொழுது புரட்சி ஏதும் செய்யத் துணிவில்லாமல் மற்றவர்களை புரட்சி செய் என்று சொல்லும் கோழையாய் இருக்கிறேன்.இந்த வண்ணங்களை அழிக்க தண்ணீர் கொண்டு வராமல் பெருமழை பெய்ய ஆணையிட்டுக் கொண்டிருக்கிறேன்.தற்செயலாய் சிறுசாரல் வந்தாலும் அதில் என்பங்கு உண்டேன்று வரலாறு சொல்லும் என்று நானே சொல்லிக் கொள்ளும் பைத்தியக்காரத்தனத்தை தான் நீங்கள் கவித்துவம் என்று சொல்கிறீர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment