Monday, November 28, 2011

உப்புச்சப்பாணி

"இந்தப் பையனையும் விளையாட்டுல சேத்துக்கங்க"
"அக்கா இவன் ரொம்பச் சின்னப் பையன் அக்கா"
"உப்புச்சப்பாணிக்கு சேர்த்துக்கங்கப்பா"
அம்மா என்னை புதுசாய் குடிவந்த ஊரில் உள்ள என்னைவிட மூத்த பையங்களோடு சேர்த்து விட்டார்.
உப்புச்சப்பாணி என்பது என்ன என்று சில நகர்புற் நண்பர்களுக்கு விளக்கவேண்டியுள்ளது. எடுத்துக் காட்டுக்கு உப்புச் சப்பாணி என்பவரை கடவுளாகவும் விளையாட்டை வாழ்க்கையாகவும் வைத்துக் கொள்ளலாம் (வாழ்க்கையே கடவுளின் விளையாட்டுத்தானே என தத்துவம் எல்லாம் பேசாமல் நான் எழுதியதை தொடர்ந்து படிக்கவும்).உப்புச் சப்பாணியால் விளையாட்டுக்கு எந்த விளைவும் ஏற்படாது.அதே போல் உப்புச் சப்பாணிக்கும் எந்த விளைவும் ஏற்படாது.சிலர் உப்புச்சப்பாணிகளை வைத்து பிழைத்துக் கொள்வார்கள் நம்மூர் சாமியார்கள் மாதிரி.ஒரு சிறு வித்தியாசம் உப்புச் சப்பாணிகள் அங்கிட்டு இங்கிட்டும் ஓடிக் கொண்டிருப்பார்கள்.


உப்புச் சப்பாணி என்கிற வார்த்தை ஒப்புக்குச் சப்பாணி என்கிற வார்த்தையில் இருந்து வந்ததாக அறிகிறேன்.'ஒப்புக்கு' 'உப்புக்கு' ஆகி பின் உப்பாகிவிட்டது.சப்பாணி என்கிற வார்த்தையின் மூலம் தேடிப்போனால் பதினாறு வயதினிலே படத்தின் கமலஹாசனிடம் இருந்து வந்தது எனவும் எங்கள் ஊரில் இருந்து தான் படத்துக்கு வந்தது எனவும் இரண்டு தகவல்கள் கிடைக்கின்றன.(பாரதி ராஜா எங்கூர்காரர்) . எது எப்படியோ உப்புச் சப்பாணி என்பவர் டம்மிபீஸ் ஆனால் அவரை பயன் படுத்திக் கொள்ளமுடியும்.இது தான் டெபனிஷன்.

உதாரணத்திற்கு ஐஸ்பாய் போன்ற விளையாட்டுகளில் "வாரேன் வருகிறேன் திருப்பிச் சொன்னா வரமாட்டேன்" என்று கத்தி விட்டு பட்டு வருபவன்,எங்கு இருந்து எங்கு செல்கிறான்.யார் யார் எல்லாம் அகப்பட்டிருக்குறார்கள் போன்ற தகவல்களை உப்புச்சப்பாணிகள் மட்டுமே சேகரித்துவரமுடியும். இது போன்ற ஒற்றறிதலில் நான் புலி என்பதால் நான் தான் விருப்பத்துக்குறிய உப்புச் சப்பாணி.அதே போல் பட்டு வருபவன் உப்புச் சப்பாணியை கண்காணித்தால் எல்லோரையும் கண்டு பிடித்துவிடலாம்.இப்படி எல்லாவற்றுக்கும் உதவும் சாதக பாதகம் நிறைந்தவனே உப்புச் சப்பாணி.அவன் நினைத்தால் பலரை சிக்கவைக்க முடியும் ஆனால் அதனால் அவனுக்கு எந்த பிரயோஜனமும் இருக்காது. (நாம கூட கலைஞருக்கு ஆப்பு வச்சோம். நமக்கு எதாவது நடந்ததா அது மாதிரி...)

எங்கள் ஊரில் கிரிக்கெட் ஆடுகையில் 'ட்ரெயல்','ஓப்பனிங்க் ட்ரெயல்','பேட்ஸ்மேன் ட்ரெயல்','பவுளர் ட்ரெயல்' ,'பீல்டர் ட்ரெயல்','கீப்பர் ட்ரெயல்', என ஒரு ஓவர் சும்மா போடுவார்கள்.இந்த ஒரு ஓவரையும் உப்புச் சப்பாணிகள் தான் பேட் பண்ணுவார்கள்,அவர்கள் தான் பவுள் பண்ணுவார்கள்.இந்த ஒரு ஓவர் விளையாண்டதற்காக பந்து நாட் ரன் போகும் போதெல்லாம் ஓடி எடுக்கவேண்டிவரும்.ஓட்டுப் போடும் போது தேர்தலுக்கு முன்னாடி காசி வாங்கிக் கொண்டு பின்பு அஞ்சு வருசம் அல்லல் படுவோமே அது மாதிரி,ஒரு ஓவருக்கு ஆசைப் பட்டு பின்பு ஓடி ஓடி தேய்ந்துவிடுவோம்..

அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி அதற்கு பாதிப்பு வராத அளவுக்கு இடியென போர் முழக்கம் விடுவோம் அல்லவா அதே மாதிரி "எவ்வளவு தூரம் ஓடிப்போய் பந்த எடுத்தேன் தெரியுமா? ஒரு பால் சேர்த்து போடுங்க"என சீனியர்களுக்கு கோபம் வராத அளவுக்கு எதிர்த்து பேசவும் உப்புச்சப்பாணிகள் அனுமதிக்கப் படுவார்கள். அந்த கோரிக்கை சீனியர்களை பாதிக்கவில்லை என்றால் நிறைவேற்றுவார்கள்.(சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேத்தின மாதிரி...).சில சீனியர்கள் போனா போகுதுனு அவங்களாவே உப்புச் சப்பாணிகளை கூப்பிட்டு ஒரு பந்து போடுவங்க (பஸ்ல 50 பைசா குறஞ்ச மாதிரி)

இந்த உப்புச்சப்பாணிகள் எல்லா சிறுவர்களின் விளையாட்டிலும் இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது.ஆனால் நமது வாழ்வில் உறவினரிடமோ ,நண்பரிடமோ,அலுவலகத்திலோ,கல்லூரியிலோ,அரசியலிலோ ஏதேனும் ஒரு வகையில் உப்புச்சப்பாணியாகவே நாம் இருக்கிறோம்.

2 comments:

rajamelaiyur said...

//நமது வாழ்வில் உறவினரிடமோ ,நண்பரிடமோ,அலுவலகத்திலோ,கல்லூரியிலோ,அரசியலிலோ ஏதேனும் ஒரு வகையில் உப்புச்சப்பாணியாகவே நாம் இருக்கிறோம்.
//

100 % true

rajamelaiyur said...

உங்கள் பார்வைக்கு ..

பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்

Post a Comment