Thursday, January 19, 2012

நாங்களும் புத்தகத் திருவிழாவுக்குப் போனம்ல...


மிகக் கோலகலமாக நடந்து முடிந்துள்ளது சென்னை புத்தகத் திருவிழா.கரும்பு கடிக்காமல் பொங்கலோ பொங்கல் எனக் கூவாமல் பொங்கல் இவ்வளவு மகிழ்ச்சியாய் கழிந்தது என்றால் மொத்த காரணமும் சென்னை புத்தகக் கண்காட்சி தான். புத்தகக் கண்காட்சி நடந்த செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் கால் வைத்த உடன் தோன்றியது "ஏலேய் இது எம்மண்ணு... இவிங்கே எம் மக்க" என்கிற நினைப்பு. இது தான் புத்தகத்தின் மேல் வெறி கொண்டு அலையும் அனைவருக்குமே தோன்றியிருக்கும். நிரைய மக்கள் கூட்டம். அதில் வாசகர்களை விட எழுத்தாளர்கள் தான் அதிகம். புத்தகக் கண்காட்சியில் நுழைந்த உடனே முதலில் அண்ணன் யுவகிருஷ்ணா எழுதிய அழிக்கப் பிறந்தவன் தான் வாங்கினேன்.நல்ல த்ரில்லர்.இதுவரை தமிழில் வந்த மட்டமான த்ரில்லரை மட்டுமே படித்து அலர்ஜி அடைந்திருக்கும் என் போன்றோர்க்கு பெரிய ஆறுதல். பின்பு ஒவ்வொரு கடையாக சுத்திப் பார்த்துக் கொண்டிருந்தேன். கடந்த நான்கு வருடங்கள் போல் இந்த வருடமும் பொன்னியின் செல்வன் தான் பெஸ்ட் செல்லர். ஏறக்குறைய எல்லா முன்னணி பதிப்பகங்களும் பொன்னியின் செல்வன் போட்டிருந்தார்கள்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கடையை கடக்கும் போது கீழ்கண்ட உரையாடலைக் கேட்க நேர்ந்தது.
"ரெண்டு நாள்ல... 2000 புக்கு காலியாகிடுச்சண்ணே"
"என்ன புத்தகம்?"
"விலைப்பட்டியல் புத்தகம் தான்"
இதைக் கேட்டுக் கொண்டே நகரும் போது.இரண்டு இளைஞர்கள் பேசிக்கொண்டு வந்ததும் காதில் விழுந்தது.
"ஒவ்வொரு கடையிலும் இருக்கிற கேட்டலாக் (விலைப்பட்டியல்) வாங்கி எடைக்குப் போட்டாலே எப்படியும் பத்து கிலோவுக்கு மேல் தேரும்டா, ஒஸ்தி சரக்கே வாங்கலாம்"
முன்னணி பதிப்பகம் ஒன்றில் 64 பக்கத்துக்கு விலைப்பட்டியல் இலவசமாக எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதே அளவு கொண்ட மற்ற புத்தகங்கள் 50 முதல் 100 ரூபாய் வரை இருந்தது. விலைப்பட்டியலுக்குப் பதில் அந்தப் புத்தகங்களைக் கொடுத்திருந்தால் என்னைப் போன்ற ஏழை எழுத்தாளர்களாவது படித்து இன்புற்றிருப்பார்கள்.





வழக்கம் போல் இந்த முறையும் புத்தகத் திருவிழாவில் நிரைய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. சில ஆயிரங்கள் செலவழித்து நடத்துவதற்கு இது போன்று புத்தகத் திருவிழாவில் மக்கள் மத்தியில் வெளியிடுவது எவ்வளவோ மேல் என்று எழுத்தாளர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். ஞானி, மனுஷ்யபுத்திரன், போன்றவர்கள் தங்களது கடைகளில் உட்கார்ந்து கொண்டு வரும் வாசகர்களுக்கு கையெழுத்துப் போட்டுக் கொண்டும், அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டும் இருந்தார்கள்.

பொன்னியின் செல்வனுக்கு அடுத்தபடியாக விற்றவை மணிமேகலைப் பிரசுர புத்தகங்கள் தான். குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்வது எப்படி? அழகாய் ஆவது எப்படி? போன்ற நிரைய புத்தகங்கள் பரபரப்பாக விற்றது. எப்போதுமே கூட்டமாகவே காணப்பட்டதால் மணிமேகலை பிரசுரத்துக்குள் நுழையவே முடியவில்லை. "எப்படி என்கிற கேள்வி இருக்கும் வரை மணிமேகலை பிரசுரம் இருக்கும்." என்கிற நண்பரின் கருத்து மறுக்க முடியாத ஒன்று.
நல்ல விற்பனையான இன்னொரு புத்தகம் சு.வெங்கடேசன் எழுதி சாகித்ய அகாடமி பரிசு பெற்ற காவல் கோட்டம்.தமிழினி பதிப்பகக் கடையிலேயே உட்கார்ந்திருந்தார் அவரைத் தெரிந்தவர்கள் மட்டும் கையெழுத்து வாங்கிக் கொண்டு போனார்கள்.இளைஞர்களின் கனவு நாயகன் கவாஸ்கர் கூட இரண்டு வாங்கிக்கொண்டு கிளம்பினார்.

குழந்தைகளுக்கான புத்தகங்கள் போனமுறையை விட இந்த முறை அதிகரித்துள்ளதாகவே தோன்றியது. அதில் குறிப்பிடவேண்டியவை செம்பருத்தி,புக்ஸ் ஃபார் சில்ட்ரன்,யுரேகா. அதிலும் செம்பருத்தி வெளியிட்ட அண்ணன் அஜயன் பாலா அவர்களின் புத்தகம் 1000 குழந்தைகளின் கருத்தைக் கேட்டு அதற்கு ஏற்ப வடிவமைக்கப் பட்டிருந்தது என்பது சிறப்பு.புத்தகத் திருவிழாவில் யூமா வாசுகியின் ஏழு சிறுவர் நூல்கள் வெளியானது.அதில் ஒரு நூலை என்னைப் பெற்றுக் கொள்ளச் செய்த தோழர் ஜி.நாகராஜன் அவர்களுக்கு நன்றிகள். சந்தித்த பதினைந்து நிமிடங்களிலேயே எனக்குள் ஒரு பெரும் மதிப்பை ஏற்படுத்திவிட்டார்.யூமா வாசுகி. குழந்தைகளை அதிகமாக ஈர்த்தவை கார்ட்டூன் சிடிகள். நல்ல தமிழ் பாடல்களை கார்ட்டுன் பொம்மைகள் பாடி ஆட அதைப் போலவே ஆடிப் பாடிக்கொண்டிருந்தன மனித பொம்மைகள்.

இன்னொரு பக்கம் உங்களது குழந்தைகளின் ஐ.கியூ வை வளர்க்க எங்கிற ஆங்கிலத் தட்டி வைத்து 0-5 வயதுக்குள் உள்ள உங்கள் குழந்தையை அறிவுடையவர் ஆக்குவோம் என்று அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பெற்றோர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தனர். மூன்று வயது மகனிடம் அட்வெஞ்சரஸ் என்கிற வார்த்தையைப் படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார் ஒரு அம்மா.

எஸ்.ரா வின் இலக்கிய பேருரை சீடியும் சக்கை போடு போட்டது.ஏழு பேர் சேர்ந்து மொத்தமாக வாங்குபவர்கள்,ஏற்கனவே வாங்கியவர்களிடம் காபி பண்ணிக்கொள்ளலாம் என்கிற நினைப்பில்
இருப்பவர்கள் ஆகியவர்களையும் கடந்து சீடி நன்றாய் போனதாய் கேள்விப்பட்டேன்.

தமிழ் காமிக்ஸ் கடையைத் தேடி நாயாக அலைந்த போது.எல்லோரும் சொன்னவை "தமிழில் காமிக்ஸ் அழிந்துவிட்டது.ஆங்கிலக் காமிக்ஸ் தான் கிடைக்கும்" . கடைசியில் இருந்த ஒரே ஒரு காமிக்ஸ் கடையைத் தேடிக் கண்டு பிடித்த போது அங்கே இருந்த காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாம் ஆக்ஷன் காமிக்ஸாகவே இருந்தன.எல்லாவற்றிலும் டமால்,, டுமீல்... படார்... என்றே இருந்தது... மிகவும் நொந்து போனதில் அடுத்த புத்தகத் திருவிழாவுக்குள் ஒரு சண்டை இல்லாத இயல்பான தமிழ் காமிக்ஸை கொண்டு வரவேண்டும் என்கிற சபதம் நெஞ்சில் ஏறியது.(ஆர்வம் உள்ள ஓவியம் வரைய தெரிந்த நண்பர்கள் தொடர்பு கொள்ள்லாம்). தலைவர் அதிஷாவையும் ஒரு காமிக்ஸ் புத்தகம் எழுத வேண்டிக் கொண்ட போது.. அவர் யூமா வாசுகிக்கு போட்டியாக குழந்தை எழுத்தாளர் ஆகப் போவதாக சங்கல்ப்பம் எடுத்தார். அடுத்த கண்காட்சியில் செம்பருத்தியில் அதிஷாவின் குழந்தை கதைகள் என்கிற தலைப்பில் புத்தகம் காணக் கிடைக்கலாம்.

திரு.இரா.நடராஜன், அசோகமித்ரன்,அப்துல் ரகுமான் என நான் படித்து வியந்தவர்களை நேரில் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வை எழுத முடியாது.இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், ராம், சசிக்குமார், அகத்தியன்,பாலுமகேந்திர போன்ற சினிமாகாரர்களையும் அங்கே காணமுடிந்தது.

இருப்பதிலேயே அதிகமான கூட்டம் நொருக்குத்தீனி மற்றும் சாப்பாட்டுக் கடையில் தான்.சிலர் பெருமைக்காக வேண்டும் என்றே இரண்டு கை நிரைய புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்தார்கள். ஹைகூ கவிஞர் மு.முருகேஷ் அவர்களது கடையில் உட்கார்ந்திருந்த போது அந்தக் கடைக்குள் நுழைந்த தன் மனைவியை தடுத்து "உனக்கு சமையல் புத்தகம் தான் வாங்கித் தருவேன். படிச்சிட்டு நல்லா சமச்சுப் போடு" என்று கூட்டிச் சென்றதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டார் மு.முருகேஷ். மு.முருகேஷ், கவிஞர் அ.வெண்ணிலாவின் கணவர். அ.வெண்ணிலா எழுதப் போகும் நெசவு பற்றிய நாவலுக்கு உறுதுணையாக அவருடன் சேர்ந்து நெசவு மண்ணில் தங்கப் போகும் அற்புதக் கணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர் என்கிற நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு எழுத்தாளருடன் வாசகர்கள் சந்திப்பு நிகழ்த்தியது நன்றாக இருந்தது. வாசகர்களின் அபத்தமான கேள்விகளுக்கு கூட எழுத்தாளர்கள் அமைதியாக பதில் அளித்தார்கள்.இந்த சந்திப்புகளில் கலந்து கொண்ட ஒரே ஒரு பெண் எழுத்தாளர் பாமா மட்டும் தான். இன்னும் இரண்டு பெண் படைப்பாளிகளையாவது அழைத்திருக்கலாம் என்று தோன்றியது.

கவிஞர்.அ.வெண்ணிலா அவர்கள் பதிப்பித்த இந்திய சரித்திரம் என்கிற 8 தொகுதிகள் அடங்கிய நூல் மிகவும் முக்கியமான நூல். 140 ஆண்டு உலக, தமிழக, இந்திய வரலாறு அடங்கியது. அந்நூலை பா.சிவனடி எங்கிற தனிமனிதனாய் உட்கார்ந்து எழுதியுள்ளார். அவரது புகைப்படம் கூட கிடைக்கவில்லை என்பது கவலையான விசயம். அந்த ஒரு நூலை வாங்குவதற்காகவே நெசவுத் தொழிலாளி ஒருவர் தன் மகனுடன் வெகுதூரத்தில் இருந்து வந்தார்(ஊர் மறந்துவிட்டது). இது போன்ற ஆட்கள் இருப்பதனால் தான் புத்தகங்கள் வாழ்கின்றன..

எனக்கு தனிப்பட்டு நிரைய நண்பர்களை அறிமுகப் படுத்தியது இந்தப் புத்தகத் திருவிழா.பூ.கோ. சரவணின் காசில் இரண்டு புத்தகங்களை லபக்கிக்கொண்டேன்.அவர் பேசியதை பொறுமையாகக் கேட்டதற்கு அவர் இன்னும் ஐந்து புத்தகங்கள் பரிசளித்திருக்கலாம். முதல் இரண்டு நாட்கள் என்னுடன் சுத்தியதாலோ என்னவோ காச்சல் கண்டு படுத்த மதன் செந்தில் பிறகு புத்தகத் திருவிழாவுக்கு வரவே இல்லை.

இம்முறை நாவல் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தேன்.அசடன், கரமசோவ் சகோதரர்கள் எல்லாம் வாங்கலாம் என் ஆசைப்பட்டாலும் நான் அம்பானி அல்லாத காரணத்தால் வாங்கமுடியாமல் போயிற்று.

பாரதி புத்தகாலயத் தோழர் ஒருவர் போஸ்டர் ஒன்றை பரிசளித்தார்.அதில் எழுதியிருந்தவையைக் குறிப்பிட்டு இக்கட்டுரையை முடிக்கலாம் என நினைத்தேன்.

"தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?" என்கிற கேள்விக்கு "புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு வருவேன்"என்று பதிலளித்தார் ஜவகர்லால் நேரு.

"என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள்,இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று"என்றார் பெட்ரண்ட் ரஸல்.

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது யோசிக்காமல் "புத்தகம்" என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

"கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகங்களைக் கொடுத்தால் போதும்" என்றாராம் தந்தை பெரியார்.

"வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்" என்றாராம் நெல்சன் மண்டேலா.

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்ட போது புத்தகங்கள் என சற்றும் தயங்காமல் லெனின் கூறிட குவிந்த புத்தக்ங்கள் பல லட்சம்.

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்.

"ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் ட்ஹரும் ஆகச் சிறந்த பரிசு புத்தகங்கள் தான்" என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

"ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்" என்கிற கேள்விக்கு "நூலகம் கட்டுவேன்" என்றார் காந்தி.

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்ட போது புத்தகங்கள் தான் என்றார் மார்டின் லூதர் கிங்.

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங்.

2 comments:

யுவகிருஷ்ணா said...

அய்யா! அப்பப்போ பாராகிராப் விட்டு எழுதுங்க. முழுசும் படிக்குறதுக்குள்ளே தாவூ தீருது :-(

புதிய பரிதி said...

பேரா விட்டுத் தான் டைப் பண்ணேன்.ஆனா இப்படித் தான் கன்டினியூசா வருது...ஏதோ செட்டிங்கஸ மாத்தனும்னு நினைக்கிறேன்.. அண்ணே..

Post a Comment