Wednesday, February 1, 2012

என்ன வேணும்? -குழந்தைகள் கதை





ஒரு வானத்துல ஒரு தேவதை இருந்துச்சாம். அந்த தேவதை எப்பயுமே நல்லது செய்யனும்னு நினைக்குமாம்.யாரு யாரு எல்லாம் ரொம்ப கஷ்டப்படுறாங்களோ அவங்களுக்கு எல்லாம் அது நேராவே போய் உதவி செய்யுமாம். ஒரு தடவ அது பூமியப் பாக்கும் போது மூணு குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தது தெரிஞ்சது. உடனே தேவதை மனுசன் ரூபத்துல மாறி அந்த மூணு குடும்பத்தோட வீட்டுக்கும் போச்சு.

மொதக் குடும்பம் இருக்கிற வீட்டுக்குள்ள போனதும் அங்க இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப பசியால வாடிக் கிடந்தாங்க.அது ராத்திரி நேரம். மனுசன் ரூபத்துல இருந்த தேவதைய பாத்து திருடன்னு நினைச்சிக்கிட்டு எங்ககிட்ட தான் ஒன்னுமே இல்லயே நீ எதத் திருடப் போறனு கேட்டாங்களாம். உதவி பண்ண வந்த நம்மல போய் திருடன்னு நினைச்சிட்டாங்களேனு வருத்தப்பட்ட தேவதை நான் திருட வரல.உங்களுக்கு உதவ வந்திருக்கேன்னு சொன்ன உடனே எல்லோரும் சந்தோஷப்பட்டாங்க. "என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது, நிரைய அன்பு இருக்கிறது எது வேண்டும்?" அப்படினு கேட்டுச்சாம் தேவதை .வீட்டில இருக்கிற குடும்பத் தலைவன் "எங்க அம்மாவுக்கு மருந்து வாங்கனும், பிள்ளைக்கு பால் வாங்கனும், பொண்டாட்டிக்கு நல்லத் துணி வாங்கனும், அதனால பணம் தான் வேணும்."நு சொன்னானாம். தேவதை அவனுக்குப் பணத்தக் குடுத்திட்டு போயிடுச்சு.

அடுத்த வீட்டுக்கு தேவதை போனப்போ அவங்களும் அப்படி தான் இருந்தாங்களாம். அவங்க கிட்டயும் தேவதை ""என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது, நிரைய அன்பு இருக்கிறது எது வேண்டும்?"னு கேட்டதும் அங்க இருந்த அம்மா "எங்க நிலம் அடமானத்துல இருக்கு, அதனால எம் புருசன் தற்கொலை பண்ணிக்கிட்டாரு,எம் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும், அதனால எனக்கு பணமே தாங்க" அப்படினு சொல்லி அழுதாங்களாம்.தேவதையும் சரினு சொல்லிட்டு பணம் குடுத்துட்டு கிளம்பிருச்சாம்.


கடைசியா மூணாவது வீட்டுக்கு வந்து பாத்துச்சாம் தேவதை. அங்க திண்ணையில முனங்கிகிட்டே படுத்திருந்த கிழவர்கிட்ட உங்களுக்கு என்னா கஷ்டம்னு கேட்டுச்சாம். "எனக்கு உடம்பு எல்லாம் நோவு, மருந்து வாங்க பணமில்ல. நிலம் அடமானத்துல இருக்கிறதுனால எம் பைய்யன் டவுனுல பெயின்ட்டு வேலைக்கு போனான். மேல இருந்து தவறி விழுந்து செத்துப் போய்ட்டான். அவன் பிள்ளைக பசியால அழுகுது.எம் மருமக மாத்துத் துணியில்லாம வெளிய வரவே முடியாம இருக்கா"நு சொன்னாரு. ரெண்டு வீட்டு கஷ்டத்தையும் இந்த வீடு சேத்து சொல்லுதேனு நினைச்ச தேவதை எப்படியும் பணம் தான் கேப்பாங்க கொடுத்திரலாம்னு பைய்யில கைய்ய விட்டுக்கிட்டே "என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது, நிரைய அன்பு இருக்கிறது எது வேண்டும்?" னு கேட்டுச்சு. கிழவர் கொஞ்சம் கூட யோசிக்காம அன்புனு சொன்னாரு. உடனே தேவதை மகிழ்ந்து போய்."கவலப்படாதிங்க தாத்தா நான் இங்கேயே தங்கி உங்கள பாத்துக்குறேன்னு" சொல்லி அங்கயே தங்கிடுச்சு.

தாத்தாவுக்கு மூலிகை மருந்து எல்லாம் எடுத்துட்டு வந்து தினமும் காலையிலயும் சாய்ங்காலமும் ஊட்டி விடும் அப்புறம் அவரு மருமகளுக்கு நிரைய துணி வாங்கி கொடுத்து தைக்கவும் கத்து கொடுத்துச்சு, பிள்ளைகளை நல்ல பள்ளிக் கூடத்துல சேர்த்து விட்டிருச்சு.கொஞ்ச நாள்ல தாத்தாவோட உடம்பு சரியாகிடுச்சு, தைக்கிறதுனால கிடச்ச காச வச்சு நிலத்த மீட்டிட்டாங்க அதுல தாத்தா நல்லா வெவசாயம் பண்ண ஆரம்பிச்சாரு.பிள்ளைங்களும் நல்லா படிக்க ஆரம்பிச்சிருச்சுங்க. வந்த வேலை முடிஞ்சிருச்சுனு சொல்லி தேவதை கிளம்பிருச்சு."எங்கள விட்டு போகாதிங்க"னு அந்த குடும்பமே கெஞ்சுனாங்களாம்.ஆனா தேவதை நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்திருச்சு நான் போறேன்.யாராவது அன்ப கேட்டு வந்தா அவங்களுக்கு உங்க அன்ப கொடுங்கனு சொல்லிட்டுப் போயிடுச்சு.

போற வழியில முன்னாடி பணம் கொடுத்த ரெண்டு வீட்டையும் பாத்துட்டுப் போகலாம்னு உள்ள போன தேவதைக்கு அதிர்ச்சி இன்னும் அந்த ரெண்டு குடும்பமும் கஷ்டப்பட்டுக்கிட்டே இருந்துச்சு.அவங்களுக்கு தேவதைய முதல்ல அடையாளம் கூட தெரியல.அதுக்கப்புறம் அடையாளம் தெரிஞ்சுகிட்டு நீங்க கொடுத்த பணம் எல்லாம் தீந்துபோச்சு அப்படினு சொல்லி அழுதாங்க. "சரி சரி உங்களுக்கு நான் கொடுத்த பணம் தீந்து போச்சுனு அழாதிங்க, ஒரு வீட்டுல அன்பு கொடுத்துருக்கேன் அது அப்படியே இருக்கும். போய் வாங்கிக்கங்க சந்தோஷமா இருப்பீங்கனு " சொல்லி மூணாவதா போன வீட்ட காமிச்சுவிட்டு பறந்து போயிடுச்சு தேவதை. வந்தது மனுசன் இல்ல தேவதைனு அப்பதான் அவங்களுக்கு தெரிஞ்சது. தேவதை காமிச்ச வீட்டுக்குப் போய் கிழவர்கிட்ட நடந்ததை எல்லாம் சொல்லுச்சு அந்த ரெண்டு குடும்பமும்.கிழவரும் அவங்கள கூட சேத்துக்கிட்டாரு. விவசாயம் பண்ணியும் துணிய தச்சும் சந்தோசமா வாழ்ந்தாங்க மூணு குடும்பமும்.இத வானத்துல இருந்து பார்த்த தேவதையும் சந்தோசமா அடுத்த குடுமபத்துக்கு உதவ போச்சு .

No comments:

Post a Comment