Saturday, June 2, 2012

பாண்டியும் சினிமாவும்


பாண்டி திரையரங்குக்குள் நுழைந்த போது ஆங்காங்கே மனிதர்கள் உட்கார்ந்து இருந்தார்கள் மொத்தமாய் ஒரு இருபது பேர் இருப்பார்கள்.அதில் இரண்டு ஜோடியும் அடக்கம் கல்லூரியில் படிப்பவர்களாய் இருக்கலாம். முதலில் ஆண் அடுத்து பெண் அடுத்து பெண் அடுத்து ஆண் என வரிசையாய் உட்கார்ந்திருந்தது அவர்கள் அனைவரும் நண்பர்கள் இல்லை எனவும் அவர்களது ஜோடியின் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கையையும் காட்டியது.''இங்கே புகைப்பிடிக்கக் கூடாது'' என எழுதிய வாசகங்களை படித்ததாலோ படிக்காததாலோ சிலர் புகைவிட்டுக் கொண்டிருந்தார்கள்.இதை எல்லாம் பாண்டி கண்டு கொள்ளாமல் தனக்குச் சரியான இடம் எது எனச் சுற்றி பார்த்து விட்டு இரண்டாவது வரிசையில் போய் உட்கார்ந்து கொண்டான்.அங்கே உட்கார்ந்தால் அண்ணாந்து தான் பார்க்கவேண்டும் என்றாலும் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அண்ணாந்து பார்த்தே வளர்ந்தவனுக்கு அது ஒன்றும் சிரமமாய் இருக்காது.திரையரங்கின் பினாயில் வாசனை அவன் மூக்கின் வழியாக மூளைக்குச் சென்று ஒரு வித போதையைத் தந்தது.




பாண்டிக்கு வயது நாப்பது இருக்கலாம் கண்,முடி,நெற்றி என தனித்தனியாகச் சொல்ல அவன் சினிமா கதாநாயகன் அல்ல . சாதாரண ஒரு தனியார் அலுவலகத்தில் பியூனாக வேலைபார்க்கும் ஒருவன்.ஏழை எனத் தான் அழைக்கப்படுவதை கவுரவ குறைச்சலாக கருதும் பாண்டி தன்னை ஒரு லோயர் மிடில் கிளாஸ் என அழைத்துக்கொள்வான்.அவன் பார்ப்பதற்கு உங்கள் உறவினர் மாதிரியோ,தெருவாசி மாதிரியோ,நண்பர் மாதிரியோ ஏன் உங்களை மாதிரியோ கூட இருப்பான்.

பாண்டி உலகசினிமா,ஈரான் சினிமா,பிரெஞ்சுசினிமா பார்க்கும் ஆள் கிடையாது.உள்ளூர் சினிமாவில் கதாநாயகன் அழும் போது அழுது,சிரிக்கும் போது சிரித்து,சண்டை போடும்போது விசில் அடித்து ஆர்ப்பாட்டமாய் படம் பார்க்கும் ஆள்.ஆனால் அது எல்லாம் பதினைந்து வருடங்களுக்கு முன்பு.குடும்பம் குட்டி ஆன பின் படத்திற்குப் போவதே குறைந்து போனது கடந்த ஆறு வருடங்களாய் அவன் திரையரங்குக்கே போனதில்லை.இன்று வந்தது கூட தற்செயலானது தான்.மாட சாமி அண்ணனிடம் பத்தாயிரம் கடன் கேட்டிருந்தான்.இரண்டு மணிக்குத் தேனி பஸ் ஸ்டாண்டுக்கு வரச் சொன்னவர்,இவன் வந்தபின்பு ஆறு மணிக்குத் தான் வரமுடியும் என்று சொல்லிவிட்டார்.மீண்டும் ஊருக்குப் போய் வரமுடியாது என்பதால் அதுவரை திரைப்படம் பார்ப்பது என முடிவு செய்தான்.சினிமா பார்க்கும் மனநிலையில் பாண்டி இப்போது இல்லை என்றாலும் அவனுக்கு அதைத்தவிர வேறு வழி இல்லை.கடிகாரத்தைப் பார்த்தான் மணி 2.25ஐத் தாண்டி இரண்டு நிமிடமோ, ஒரு நிமிடமோ ஆகியிருந்தது.விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன.திரை மெதுவாக மேலேறியதும் விளம்பரம் போட்டார்கள்.பின் சீட்டில் திரும்பிப்பார்த்தான் இருட்டில் எதுவும் தெரியவில்லை.மீண்டும் திரையைப்பார்த்தான் படம் தொடங்கியது.இவனுக்கு மனது எல்லாம் மாடசாமி மேலேயே இருந்தது.பணம் வருவதற்கான அவனது ஒரே நம்பிக்கை மாடசாமிதான். கடன் அன்பை முறிக்கும் என்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான். இந்தியாவில் ஒரு பரம ஏழை கடன் வாங்காமல் இருந்து விடலாம், பெரும் பணக்காரனும் கடன் வாங்காமல் இருந்துவிடலாம்.ஆனால் இந்த மிடில் கிளாஸ் மக்களால் கடன் வாங்காமல் வாழ முடியாது.முதலில் சொந்த வீடு கட்ட கடன் வாங்கினான்.பின்பு தன் மகளை மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்க்க கடன் வாங்கினான்.அப்படியே அவன் கடன் வளர்ந்தது

"பெரிய ஆளாகி என்னவாகப் போற"என்று இவன் கேட்கும் கேள்விக்கு "கலெக்டர்" என அந்த சிறு குழந்தை பதில் சொல்லும் போது "உனக்காக எம்புட்டு கஷ்டத்தையும் தாங்குவேன்" என்று தூக்கிக் கொஞ்சுவான்.அவள் அப்போதே கலெக்டர் ஆகிவிட்ட நினைப்பு அவனுக்கு.சிறுவயதில் கலெக்டர் ஆவேன் எனச் சொன்னவர்கள் எல்லாம் கலெக்டர் ஆகிவிட்டால் நம் நாட்டில் தெருவுக்கு ஆறு கலெக்டராவது இருப்பார்கள்.

"இந்த அநியாயத்த தட்டிக் கேட்க ஒரு ஆம்பிளை வராமையா போயிருவான்" திரையில் முடியை விரித்துப் போட்டுக் கத்திக் கொண்டிருந்தாள் ஒருத்தி. ஏன் தட்டிக் கேட்க எல்லோரையும் ஆண்களையே எதிர் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்தப் பெண் கத்தி முடித்ததும். ஷூ போட்ட கால் ஒன்று ஓடி வந்து கொண்டிருந்தது.கண், காது, வாய் என தனித்தனியாய் காட்டி மொத்தமாய் முகத்தைக் காட்டினால் அது கதாநாயகன்.போன படத்திலும் இப்படித்தான் அநியாயத்தைத் தட்டிக் கேட்க பறந்து வந்தார் இதில் ஓடி வருகிறார் ஒரு வேளை எதார்த்த சினிமாவாய் இருக்கலாம்.பாண்டி கூட தனது 19, 20 வயதுகளில் கம்யூனிஸ்ட்டுகாரர்களோடு சேர்ந்து ரேசன் கடைகளில்,தாசில்தார் அலுவலகத்தில் என்று பல இடங்களில் அநியாயத்தைத் தட்டிக் கேட்டிருக்கிறான். எங்குமே இப்படி அடித்துக் கேட்டதில்லை.அப்பா இறந்தபின் அப்படி தட்டிக் கேட்க எல்லாம் போவதில்லை.தன் வீடு தன் குடும்பம் என்றாகிவிட்டான்.

அப்போது கதவைத் திறந்து நாலைந்து பேர் திரையரங்கின் உள்ளே நுழைந்தனர்."டேய் படம் போட்டாங்கே டா"என பேசிக்கொண்டு பாண்டியின் அருகில் உட்கார்ந்தார்கள்.
"அண்ணே, படம் போட்டு ரொம்ப நேரம் ஆச்சா"என்றான் ஒருவவன்
"இல்ல இப்பத்தான்" என்றான் பாண்டி.
உள்ளே வரும் போது கதவைச் சரியாக சாத்தாததால் வெளியே இருந்து வந்த ஒளி கண்ணைக் கூசச் செய்தது.நம் நாட்டில் திரையரங்குக்கு சரியான நேரத்தில் எல்லோருமே சென்றதாய் சரித்திரமே இல்லை.எங்கிருந்து பார்த்தாலும் தமிழ்படம் புரியும் என்கிற நினைப்பு கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.ஆனால் பெரும்பாலோனோரின் வாழ்க்கை தமிழ் சினிமா போல் இல்லை.பாண்டியின் வாழ்க்கையும் அதில் அடங்கும் தனது 25வது வயதில் வாட்ச்மேனாய் சேர்ந்து இப்போது அதே கம்பேனியில் பியூனாக இருக்கிறான் இது ஒன்றும் அபரிவிதமான வளர்ச்சி அல்ல.


"உழைப்பும் நேர்மையும் விடாமுயற்சியும் இருக்கிற வரைக்கும் எந்த கொம்பனாலும் என் வளர்ச்சிய தடுக்க முடியாதுடா" கதாநாயகன் பேசியதும் ஒரு பாட்டு, அதில் அவர் ஆட்டோ ஓட்டினார், பின்பு டாக்சி ஓட்டினார், பின்பு ஐந்து பஸ்க்கு முதலாளி ஆனார், பாட்டு முடியும்போது ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் எல்லாம் கட்டிவிட்டார்.பாட்டில் ஹீரோ களைத்திருக்கும் போது தண்ணீர் தருவது, தூங்கும் போது விசிறிவிடுவது போன்ற வேலைகளை கதாநாயகி செய்து கொண்டிருந்தாள்.அதைப் பார்த்ததும் பாண்டிக்கு காய்த்ரி நினைவு வந்தது.காயத்ரி பாண்டியின் அருமை மனைவி.பாண்டி வாழ்க்கையை ஓட்ட தண்ணீர் கொடுத்து விசிறி மட்டும் விடும் கதாநாயகி அல்ல மகளிர் சுய உதவிக் குழுவில் சேர்ந்து வேலைப் பார்த்து,சீட்டுப் போட்டு, இக்கட்டு சமயத்தில் எல்லாம் அவனைத் திட்டிக் கொண்டே நகையைக் கழட்டி அடகுக்கு கொடுத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருக்கும் தமிழ் நல்லுலகத்துப் பெண்.இப்போது கூட அடகு வைத்துவிட்ட அவளது நகையை மூழ்காமல் மீட்டெடுக்கும் பொருட்டுத் தான் கடன் வாங்க வந்திருக்கிறான்.கடனும் பொய்யைப் போலவே ஒன்றை மறைக்க இன்னொன்று அதற்கு மற்றொன்று என வளர்ந்துவிடுகிறது.


கதாநாயகனை வில்லன் ஏமாற்றி எல்லா பணத்தையும் சுருட்டிக் கொள்கிறான். கதாநாயகன் நடு ரோட்டில் இறங்கி நடக்கையில் இன்டர்வெல் போட்டார்கள்.எல்லோரும் எழுந்து வெளியேறினார்கள்.பாண்டி எதுவும் வாங்கிச் சாப்பிடும் மனநிலையில் இல்லை. "செம படம்ல" என பாண்டிக்கு அருகே இருந்த இளைஞர்கள் சொல்லிக் கொண்டே வெளியேறினார்கள்.வாழ்க்கையிலும் இது போன்று இன்டர்வல்கள் வந்தால் நன்றாய் இருக்கும்.நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிடம் இருந்து ஒரு பத்து நிமிடம் இன்டர்வல் கிடைக்காதா எனப் பலரை ஏங்க வைக்கிறது வாழ்க்கை.அதுவே நமது அரசுக்கு டாஸ்மாக்கை அதிக வருமானம் வரும் துறையாய் மாற்றி இருக்கிறது அந்த காதல் ஜோடி ஐஸ்கிரீம்களோடு நுழைந்தார்கள். படம் துவங்கியது.

பாண்டி மெதுவாக கண்ணசந்து விட்டான்.மீண்டும் விழிக்கையில் படம் முடிந்திருந்தது.எல்லோரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.மணியைப் பார்த்தான் 5.30 ஆகியிருந்தது.பஸ் ஸ்டாண்டுக்குள் சென்றான்.மாடசாமிக்கு போன் பண்ணியபோது அது நாட் ரீச்சபளில் இருந்தது.மீண்டும் மீண்டும் முயற்சி பண்ணினான்.தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தான் மாடசாமி.வேறு யாராவது கடன் தருபவர்கள் இருக்கிறார்களா என்று யோசித்தான். "உழைப்பும், நேர்மையும்,விடாமுயற்சியும் இருக்கிற வரைக்கும் எந்தக் கொம்பனாலும் என் வளர்ச்சிய தடுக்கமுடியாதுடா".தேவையில்லாமல் அந்த டயலாக் மண்டையில் ஓடியது.படத்துக்கான கிளைமேக்ஸ் என்ன என்று தெரியாமல் போனது அவனுக்கு எரிச்சலைத் தந்தாலும் படம் எப்படியும் முடிந்துவிடும் என ஆறுதல் கொண்டான்.

1 comment:

Post a Comment