Saturday, May 17, 2014

ப்ளாக் ஸ்வேன்- கறுப்பு அன்னமும் கணியன் பூங்குன்றனாரும்


நீங்கள் ஒரே நாளில் இரண்டு சிறந்த படங்களைப் பார்க்க முடியாது.. அப்படிப் பார்த்தால் முதலில் பார்த்தது அவ்வளவு சிறந்த படமாக இருக்க முடியாது. ஒரு சிறந்த படம் பார்த்தின் தாக்கம் குறைந்தது அந்த ஒரு நாளாவது இருக்கும். வேலை, மன்த் எண்ட்/ வீக் எண்ட் டார்கெட், பாஸின் திட்டுகள், கிரெடிட் கார்டு பில், உறவுகளுடனான பிரச்சனை இவற்றுக்கு மத்தியில் வாழ நிர்பந்திக்கப்படுபவனுக்கு சிறந்த படம் பார்ப்பது என்பது மிகப் பெரிய துன்புறுத்தல். இதைப் பற்றிப் பேசினால் நாம் முதலாளித்துவம் பற்றி எல்லாம் பேசவேண்டும். கவலைப்படாதீர்கள் இது முதலாளித்துவம் பற்றிய பதிவல்ல.. நான் பார்த்த ஒரு சிறந்த படத்தைப் பற்றியான எனது கருத்து மட்டுமே.  



அதிகாலை மூன்று மணிக்கு விழிப்புத்தட்ட  நண்பனிடம் வாங்கி வந்த ப்ளாக் ஸ்வேன் (கறுப்பு அன்னம்) படம் பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்த்து முடிக்கும் போது அப்படியே உறைந்து போயிருந்தேன். ஏதோ நெஞ்சில் அடைத்தது போன்ற உணர்வு.. உடனே குளியலறைக்குள் சென்று ஷவரைத் திறந்து அதற்குக் கீழ் நின்று கொண்டேன். ஏனோ எனக்கு கணியன் பூங்குன்றனாரின் பாடல் நினைவுக்கு வந்தது.

”தீதும் நன்றும் பிறர் தர வாரா” இந்த வரிகளை எத்தனை முறை கேட்டிருப்போம். எத்தனை முறை சொல்லியிருப்போம். இதன் அடுத்த வரியைப் பலரும் கேட்டதில்லை நினைவில் வைத்திருப்பதும் இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் எனத் தொடங்கும் இப் பாடலுக்கும் படத்திற்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ப்ளாக் ஸ்வேன் பார்த்த பின்பு இந்த பாடலின் வேறு அர்த்தங்கள் புரிபடத் தொடங்கின..  நெடுநாள் தோழியை ஒருநாள் காதலி என்று கண்டுகொண்டதைப் போல் ஒரு மனநிலை. உண்மையில் கணியன் நான் நினைத்ததையே நினைத்து எழுதாமல் இருந்திருக்கலாம் என்ற போதும் மேகத்தில் நமக்கு வேண்டிய உருவத்தைக் கண்டு கொண்டது போல் ஒரு மகிழ்வான உணர்வு..

நான் உணர்ந்ததைச் சொல்வதற்கு முன்பு படத்தைப் பற்றி பார்ப்போம். நினா என்கிற பெண் ஒரு பேலே டான்ஸர். மிகவும் அமைதியான , அன்பான, அம்மா சொல்வதைக் கேட்டு நடக்கும் நல்ல பெண். ஆனால் எப்போதும் ஒரு மென் சோகத்தில் இருப்பாள். அவளுக்கு அரிப்பு நோய் இருக்கும் அவளே அறியாமல் அதை அவள் சுரண்டிவிடுவதால் அவளது உடல் அடிக்கடி புண்ணாகிவிடும். அவள் மேல் உயிரையே வைத்திருக்கும் அம்மா அவளை எப்போதும் தன்னுடைய கண்காணிப்பிலேயே வைத்திருப்பாள். நினா அவளை அறியாமலேயே சுரண்டிவிடுவதால் அவளது நகங்களை வெட்டி விடுவாள். நினாவின் அறைக்குத் தாழ்ப்பாள் இருக்காது. அதனால் எப்போது வேண்டுமானாலும் அம்மாவால் அவளது அறைக்குள் நுழையமுடியும் அவளுக்கு இருக்கும் ஒரே விருப்பமான விசயம் பேலே டான்ஸ் மட்டுமே.

அவள் பயிற்சி பெறும் கம்பெனி லேக் ஸ்வேன் என்கிற ஒரு புதிய பேலே நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்கிறது. (லேக் ஸ்வேன் என்பது படத்துக்காக தயாரிக்கப்பட்டது அல்ல உண்மையிலேயே இருக்கும் ஒரு இசை  நாடகம். ஆனால் அந்த நாடகத்தின் கதையை கொஞ்சம் மாற்றி இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.)படத்தில் வரும் நாடகத்தின் கதை இதுதான். ஒரு அழகிய பெண் சாபத்தால் வெள்ளை அன்னமாகிவிடுகிறாள். அவளது சாபம் நீங்க வேண்டுமென்றால் அவளை ஒருவன் உண்மையாகக் காதலிக்கவேண்டும்.  ஒரு இளவரசன் அவளைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். ஆனால் அவனை தீய குணமுடைய கறுப்பு  அன்னமொன்று மயக்கித் தன் வலையில் விழச்செய்கிறது. இதைத் தாங்க முடியாமல் மனமுடைந்து அந்த வெள்ளை அன்னம் தற்கொலை செய்து கொள்கிறது.


இந்த நாடகத்தின் முக்கியக் கதாப்பாத்திரமான வெள்ளை அன்னம் மற்றும் கறுப்பு அன்னம் ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களையும் செய்யும் வாய்ப்பு நினாவிற்குக் கிடைக்கிறது. முதலில் வெள்ளை அன்னமாக ஆடிவிட்டு அடுத்து கறுப்பு அன்னமாக மாறிவிட்டு மீண்டும் வெள்ளை அன்னமாக மாறி நடிக்கவேண்டும். நினாவின் சுபாவத்திற்கேற்ற வெள்ளை அன்னத்தின் பாத்திரத்தை மிகவும் அற்புதமாகச் செய்வாள். ஆனால் அவளது பண்புக்கு மாறான கறுப்பு அன்னத்தின் பாத்திரத்தை அவளால் கொண்டுவர முடியாது. எப்படி அந்த கறுப்பு அன்னத்தின் பாத்திரத்தை அவள் நடித்தாள் என்பதே கதை.

இங்கே தான் தீது நன்றும் பிறர் தர வாரா என்கிற வாக்கியம் எனக்குள் தொக்கி நிற்கிறது. இவ்வளவு நாள் இதை ராஜா சின்ன ரோஜா பாட்டில் வருவது போல் “நன்மை ஒன்று செய்தீர்கள் நன்மை விளைந்தது.. தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விளைந்தது” எனச் சொல்கிறது என்கிற அளவில் மட்டுமே புரிந்து வைத்திருந்தேன். ஆனால் ப்ளாக் ஸ்வேன் பார்த்த பிறகு தீதும் நன்றும் நம்முள்ளேயே இருப்பவை.. அவை எக்ஸ்டர்னல் விசயம் அல்ல… ஒரு சேறைப் போல் திடீரென்று வந்து நமது மேல் விழுவதன்று நம்முடலின் அங்கம் போல் நம்முடனே வள்ர்ந்து வருவது.. இன்னது தீது இன்னது நன்று எனப் பிரித்தறிய முடியாவண்ணம் நம்மை ஆட்டுவிப்பது என்று சொல்வதாக புரிந்துகொண்டேன்.. எல்லாவற்றையும் விட முக்கியமானது அந்த பாடலில் மத்தியில் வரும் சில வரிகள்..


”நீர் வழிப் படூஉம் புணை போல ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம்”

நீரில் ஓடும் புணை மரம் போல உன் வாழ்க்கையை அதன் போக்கில் வாழு என்பது இதற்கு அர்த்தம் என்று இதுவரை விளக்கம் எழுதியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த வரிகளை விதியின் மேல் நம்பிக்கை கொண்டு வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிடு என்று சொல்வதாகவே அர்த்தப்படுத்தி வைத்திருந்தேன். இங்கே ஆருயிர் என்பதை வாழ்க்கை என்று அர்த்தப்படுத்தாமல். இதற்கு முந்தைய வரிகளில் வரும் நம்முள் நிலைப் பெற்றிருக்கும் நன்மை தீமை என்று அர்த்தப்படுத்திக்கொண்டால் இந்த பாடல் புதிய வகையில் பரிணமிக்கிறது.
உனக்குள் இருக்கும் தீமையையும் நன்மையையும் அதன் போக்கில் விட்டுத் தொடரு.. தீயது தீயவற்றை மட்டுமல்ல நல்லவற்றையும் கொண்டு சேர்க்கும்.. நன்மையும் சில சமயம் தீமையைக் கொண்டுவரும்.. இதில் எது வரினும் ஏற்றுக்கொள் என்று பொருள்படுகிறது.. இதையே தான் ப்ளாக் ஸ்வேனும் சொல்கிறது..

நினா மிகவும் நல்லவளாக இருக்கும் வரை அவளது கறுப்புப் பக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது.. கறுப்பு அன்னமாக மாறுவதற்காக அவள் தன்னுள் பொதிந்திருக்கும் கறுப்புப் பக்கத்தை வெளிக் கொண்டுவருகிறாள். இதை அவளாகச் செய்வதில்லை. இந்தப் படத்தில் லில்லி  என்றொரு கதாப்பாத்திரம் வரும். எப்போதும் நாடகங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களுக்கான பயிற்சியை அதில் நடிப்பவர் தவிர்த்து இன்னொருவருக்கும் கொடுப்பார்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் நடிப்பவர் வரவில்லை என்றால் இன்னொருவரை வைத்துச் சமாளித்துவிடலாம் என்பதே அதன் நோக்கம். இந்தப் படத்தில் அப்படி நினாவோடு லில்லியையும் தயார் செய்வார்கள். லில்லிக்கு கறுப்பு அன்னத்தின் நடனம் மிக இயல்பாக வரும்.  
ஒரு காட்சியில் பயிற்சியாளருக்கும் நினாவிற்கும் நடக்கும் உரையாடல்

“கறுப்பு அன்னத்தோட ஆட்டம் உனக்கு வராதததுக்கு காரணம் நீ எல்லா அசைவுகளையும் அந்த ஒழுங்கோட செய்ற.”
”நான் ரொம்பச் சரியாச் செய்யனும்னு நினைக்கிறேன்”
”ஒழுங்கோட செஞ்சா அது சரியா செஞ்சதா அர்த்தமில்ல… நீ அப்படியே உன் உணர்ச்சிகளோட  லூசா விடு அப்பதான் ரொம்பச் சரியா செய்யமுடியும்”

இதுதான் கணியன் சொன்ன  ”நீர் வழிப் படூஉம் புணை”. லில்லி அதை அறிந்து செய்வாள் அதனால்தான் அவளால் கறுப்பு அன்னத்தை நன்றாக ஆட முடிந்தது. ஒரு இரவு லில்லி நினாவை வெளியே அழைத்துச் செல்வாள். அங்கு நினா போதை மாத்திரை எடுத்துக்கொண்டு.. இதுவரை அவள் அம்மாவிற்காக கட்டுபடுத்தி வைத்திருந்தாலோ அவற்றில் இருந்தெல்லாம் விடுபடுவாள்.. லில்லியோடு வீட்டுக்கு வரும் நினா முதல் முறையாக அன்று அம்மாவை எதிர்த்துப் பேசுவாள். நினா தனது அறையின் கதவை அடைக்க முயலும்போது அதைத் தடுக்க அவள் அம்மா கையைக் குறுக்கே வைப்பார். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் கையை எடுக்கும் வரை மீண்டும் மீண்டும் அறைந்து சாத்தி அம்மாவின் கையை ஒடித்துவிடுவாள். அடுத்த நாள் தாமதமாக பயிற்சி வகுப்புக்கு வர அங்கே லில்லி ஆடிக்கொண்டிருப்பாள். பயிற்சியாளர் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருப்பார். தனது இடத்தைப் பிடிக்க லில்லி முயல்கிறாள் என்று நினைத்துக் கொள்வாள், நினா.. அந்த லேக் ஸ்வானில் வரும் கதை அவளது வாழ்வில் நடப்பதாக கற்பனை செய்துகொள்வாள்.

வெள்ளை அன்னத்திற்கு சொந்தமான இளவரசனைக் கறுப்பு அன்னம் பரித்துக் கொள்வது போல தனக்குச் சொந்தமான கதாப்பாத்திரத்தை லில்லி பரித்துக் கொள்ள முயல்வதாக நினைப்பாள். அது அவளை கோபப்படுத்தும். அவ:ள் முழுவதும் வெள்ளை அன்னத்தின் குணத்தில் இருந்து கறுப்பு அன்னத்தின் குணத்திற்கு மாறுவாள். அது அவளுக்கு மன ரீதியாக நிறையச் சிக்கல்களைக் கொண்டுவரும்.. அவள் பல விநோதங்களைப் பார்ப்பாள். அவளது கண்ணாடி பிம்பத்தில் லில்லி தெரிவாள். அவளது கால்கள் அன்னம் போல் மாறும். அவளது புண்ணை அவளது கண்ணாடி பிம்பம் சொறிந்து பெரிதாக்கும். அவ:ளுக்கு கறுப்பு சிறகுகள் முளைப்பது போல் இருக்கும்.

 நிகழ்ச்சி நடக்கும் சிறிது நேரத்திற்கு முன்புதான்  எழுந்து நிகழ்ச்சிக்குச் செல்வாள். அங்கே லில்லி நிகழ்ச்சிக்குத் தயாராய் இருப்பதைக் கண்டு எரிச்சலடைந்து வேகவேகமாக ஒப்பனை இட்டு வெள்ளை அன்னமாய் ஆடப் போவாள். ஆடும் போது ஒரு இடத்தில் ஆட்டம் பிசகி கீழே விழுந்துவிடுவாள். அழுகையோடு ஒப்பனை அறைக்கு வந்தால் அங்கே லில்லி கறுப்பு அன்னத்தின் ஒப்பனையோடு இருப்பாள். நினா விழுந்துவிட்டதால் தானே கறுப்பு அன்னத்தின் நடனத்தை ஆடப்போவதாகச் சொல்வாள். இதனால் ஆத்திரமடையும் நினா லில்லியை தாக்கி கொன்றுவிடுவாள். அவளது உடலை மறைத்து வைத்துவிட்டு அதே வெறியோடு வந்து கறுப்பு அன்னத்தின் நடனத்தை ஆடுவாள்.கூட்டம் ஆரவாரம் செய்து எழுந்து நின்று கைதட்டும். இப்போது மீண்டும் அவள் வெள்ளை அன்னமாக மாறவேண்டும். அதை எப்படி எதிர் கொண்டாள் என்பதை படம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்..
ஒரு கலைஞன் தனது கலைக்காக எந்தளவிற்கு மெனக்கெட வேண்டி உள்ளது என்பதையும் இந்த படம் காட்டும். இந்தப் படத்தின் இன்னொரு முக்கியமான பாத்திரம் படத்தில் ஐந்து நிமிடம் மட்டுமே வரும் பாத்திரம். நினாவிற்கு முன்பு அந்த கம்பெனிக்கு கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த பேத் என்கிற பாத்திரம். தன்னுடைய வாய்ப்பு பரிக்கப்பட்டதால் வேண்டுமென்றே வாகனத்தில் அடிபட்டுக் கிடக்கும் பேத்தை பார்க்க நினா செல்வதும்.. பேத்தின் மன உணர்வுக்குப் பின்னாளில் நினா வருவதும்.. அட்டகாசம்… பேத் போன்ற கதாப்பாத்திரம் பிரியங்கா சோப்ரா நடித்த ஃபேசன் படத்திலும் வரும். நம்ம ஊரில் தாம் தூம் என்கிற மொக்கைப் படத்தில் மொக்கைப் பாத்திரம் செய்தவரும் தற்போது குயின் என்கிற படத்தில் அட்டகாசமாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றவருமான கங்கனா ரனெளத் அதில் நடித்திருப்பார்..அந்த பாத்திரத்தைப் பற்றியும் ப்ளாக் ஸ்வானில் நடித்தற்காக அகாடமி விருது வாங்கிய நடாலி போர்ட் பற்றியும் படத்தின் இயக்குனர் டேரன் அர்னோவ்ஸ்கி பற்றியும் இந்தப் பதிவில் சொல்லமுடியாது..ஏற்கனவே ரொம்ப நீண்ட பதிவாகிவிட்டது. முடிந்தால் இன்னொரு  சமயத்தில் எழுதுகிறேன்..

இப்படத்தின் ட்ரெய்லர் கீழே….


Friday, May 9, 2014

ஒரு பாடலும் துயரத்தின் தேடலும்




நம் வாழ்வில் எல்லோரும் எதாவது ஒரு பாடலால் தாக்குண்டு அதன் சுழலில் சிக்கி மூழ்கி அதைவிட்டு வெளிவராமல் அதிலேயே தங்கிவிடுவோம். அவை பெரும்பாலும் சோகப்பாடல்களாகவும் வாழ்க்கையையும் நமது இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் பாடல்களாக இருக்கும். நான் யோசிப்பதுண்டு ஏன் துயரங்களையும் குழப்பங்களையும் இம்மனித இனம் தேடிப் போய்கொண்டே இருக்கிறது. அதற்கு என்ன கிடைக்கிறது. நான் மட்டும்தான் அப்படி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் கூர்ந்து கவனித்தால் எல்லோரும் துயரத்தை நோக்கி நகரவே விரும்புவதாகத் தெரிகிறது. துயரத்தில் இருக்கும் சுவையை உணர்ந்தவன் அதை விட்டு வெளியேறத் துணியவே மாட்டான். எவ்வளவு கிடைத்தாலும் அவன் வேறெதையோ தேடித்தேடி அலைந்து அதை நினைத்துத் துயரப்பட்டுக் கொண்டே இருப்பான். அதைப் பேராசை என்று ஒற்றை வரியில் நமக்குப் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்துவிடுகிறார்கள். அது ஆசை அல்ல துயரத்திற்கான தேடல்.

ஆசை துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்ன பிறகும் நாம் ஏன் ஆசையைத் துரத்திக் கொண்டிருக்கிறோம். நாம் மறைமுகமாக தேடிச்செல்வது இன்பத்தையல்ல துன்பத்தை அதனால்தான். துன்பமே நமது விருப்பமாக இருக்கிறது. அதை உணராமலேயே நாம் இருக்கிறோம். துன்பமே உங்களைத் திருப்தியளிக்கிறது. அதுதான் ஒரு செயலில் இருந்து வெளியேற உதவுகிறது. விடுதலை அளிக்கிறது.  உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றில் நீங்கள் தோற்றுப் போனால் மட்டுமே அதை விட்டு விலகமுடியும். வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் வரை அது நம்மை விடாது நாமும் அதை விட மாட்டோம். தோல்வி தரும் துயரமே விடுதலைக்கான வழி . துயரமே நமது மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கான தேடல் மட்டுமல்ல வாழ்க்கைக்கான தேடல் கூட துயரம்தானோ என்று தோன்றுகிறது.அதுவே ரோமியோ- ஜூலியட்டில் இருந்து ராக்ஸ்டார் படத்தில் வரும் காதல் ஜோடிக் கதைகள் வரை அனைத்துக் காதல் கதைகளையும் நமது விருப்பத்துக்குறியவையாக ஆக்கியிருக்கின்றன.

நான் எப்போதும் எதையாவது நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பேன். ஏன் நீ இப்படி இருக்கிறாய். உன்னில் இருந்து நிறைய அவநம்பிக்கைகளே வருகின்றன என நண்பர்கள் சொல்வார்கள். சோகப்பாடல்கள் கேட்டுக்கொண்டு இரவில் தனியே அழுதுகொண்டிருக்கும் நிலையை அவர்களுக்கு எப்படியும் விவரிக்கமுடியாது என்பதால் நானும் பதில்சொல்லாமல் விட்டுவிடுவேன். காதலி ஒருத்தி வந்துவிட்டால் காதல்தோல்விப் பாடல்களை ரசிக்க முடியாமல் போய்விடுமோ என்பதற்காகவே காதலிக்காமல் இருந்த காலங்கள் உண்டு. நம்மால் உச்சபட்ச மகிழ்ச்சியை எப்படி வெளிபடுத்த முடியும் அதிகபட்சம் ஆடிக் குதிக்க முடியும் அவ்வளவுதான். ஆனால் உங்களது உச்சபட்ச துயரம், உங்களது வாழ்வை முடித்துக்கொள்ளும் முடிவைக் கூட எளிதாக எடுத்துவிடும். அதுதான் துயரத்தின் வலிமை.

இந்தப் பதிவு நான் கேட்ட பாடல் ஒன்றை பகிர்ந்துகொள்வதற்காகவே ஆரம்பித்தேன். எங்கெங்கோ சென்றுவிட்டது. கேட்ட மாத்திரத்தில் நம்மைத் தாக்கிய பாடலை விட நன்கு தீட்டப்பட்ட கத்தி எந்த தடங்களும் இல்லாமல் மெல்ல மெல்ல இதயத்திற்குள் இறங்குவதைப் போல நேரடியாக மெல்ல மெல்ல சில பாடல்கள் இறங்கும். அவற்றைக் கையாள முடியாமல் தோற்றுப் போகும் நிமிடங்களில் இசை எவ்வளவு அழுத்தமானது.. எவ்வளவு அடர்த்தியானது.. எவ்வளவு இருள்தன்மை நிரம்பியது என்று தெரியும்.. ஒரு போதை வஸ்துவைப் போல் உங்களை இழுத்து இழுத்து மழுங்கடித்து நீங்கள் இருக்கும் இடத்தை உணரச்செய்ய விடாது. உங்களது மேலதிகாரியோ அம்மாவோ இல்லை.. காதலியோ வந்து என்ன பேசினாலும் வெறும் நிழலாகவே தெரிவார்கள். அப்படியானதொரு பாடல் ”லக் ஜா கலே”



1964 ஆம் ஆண்டு வெளியான ”வோ ஹவுன் தி” என்கிற ஹிந்தி படத்தில் வெளியான இந்தப் பாடலை லதா மங்கேஷ்கர் பாடியிருப்பார். பாடல் வரிகள் ராஜா மெஹ்தி அலிகான். இதன் இசையமைப்பாளர் மதன்மோகன். ஆனால் இந்தப் பாடலை முதன்முதலில் கேட்டது பாம்பே டாக்கீஸ் படத்தில்.

பாம்பே டாக்கீஸ் படத்தில் இந்தப் பாடல் வரும் இடம் மிகவும் முக்கியமானது. ரயில்வே கிராஸிங்க் ப்ரிட்ஜ் ஒன்றில் ஒரு சிறுமி பழைய சினிமாப் பாடல்களைப் பாடி காசு வாங்கிக் பிழைப்பு நடத்துகிறாள். பிரபல நியூஸ் ரீடர் ஒருவன் இருக்கிறான். அவனது மனைவி ஒரு பத்திரிக்கையில் சப் எடிட்டராக இருக்கிறாள். அவர்கள் இருவருக்குள்ளும் எந்த சண்டையும் இல்லை என்றாலும் இருவருக்குள்ளும் அதிக நெருக்கம் இல்லை. அவன், மனைவியின் அலுவலகத்தில் இண்டெர்னாக சேருகிறான் ஒரு ஓரினச்சேர்கையாள இளைஞன். அவன் மனைவியுடன் நெருங்கிப் பழகும் அவன் அந்த நியூஸ் ரீடரும் Gay வாக இருக்கவேண்டும் என்று யூகிக்கிறான். அவனோடு நெருங்கிப் பழக முயல்கிறான். ஆனால் அவன் பிடி கொடுக்காமல் இருக்கிறான். ஒருநாள் அவனை அழைத்துக்கொண்டு அந்த சிறுமியிடம் சென்று ஒரு பாடலைப் பாடச் சொல்கிறான். அவள் ”லக் ஜா கலே” என்று பாட ஆரம்பிக்கிறாள். மொத்தமே ஒரு ஆறுவரிதான் பாடுவாள். அப்போது காமிரா அந்த நியூஸ் ரீடரின் முகத்தில் பதிந்து இருக்கும். அவன் மனது உலையும் தருணம் அது. ரன்தீப் ஹூடா அந்தக் காட்சியில் பிண்ணி எடுத்திருப்பார். இதாண்டா ஆக்டிங்க் என்று சொல்லும் அளவுக்கு செம ரகளையாக இருக்கும்… அந்த வீடியோ இதோ




ரன்தீப் ரியாக்சன்ஸ் பார்ப்பதற்காகவே இந்தக் காட்சியை அடிக்கடி எடுத்துப் பார்ப்பேன்.. பிறகு அந்த பாடல் மெல்ல உள்ளிறங்க ஆரம்பித்தது. ஆனாலும் ஒரிஜினல் பாடலைக் கேட்கத் துணியவில்லை. அதே பாம்பே டாக்கீஸ் படத்தில் “அஜீப்பு தாஸ்தா ஹே ஏ” என்றொரு பாடலை படத்தின் தொடக்கத்தில் பாடுவாள் அந்தச் சிறுமி அதுவும் லதா மங்கேஸ்கர் பாடல்தான். கேட்டவுடன் மிகவும் பிடித்துவிட்டது .உடனே ஒரிஜினல் தேடிக் கேட்டேன். ஆனால் அது அவ்வளவாக ஈர்க்கவில்லை. அதனால் இந்தப்பாடலைக் கேட்க வேண்டாம் என்றிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு மாதகாலத்திற்கு அந்த ரன்தீப் ரியாக்சன் மட்டும்தான். இன்று எதோ ஒரு துணிவில் ஒரிஜினல் பாடலை யூடியூபில் பார்த்தேன். பார்த்தவுடன் எனக்கு கண்களில் கண்ணீர் ஊறி நின்றுவிட்டது. அழுதால் பக்கத்தில் இருப்பவர்களுக்குத் தெரிந்துவிடுமே என்று அடக்கிக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக சிறிது நேரத்தில் இன்றைக்கு என்று எனது பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் வெளியே சென்றுவிட்டார்கள்.. எனது ரோவிலேயே நான் மட்டுமே இருந்தேன். மீண்டும் மீண்டும் கேட்டு அழுது… துயரத்தின் ருசியைக் குடித்து… துயரத்தின் மதுரத்தில் மூழ்கிக் கிடந்தேன்…
அந்த வீடியோவில் இறுகிய முகத்துடன் மனோஜ் இருப்பார். சாதனாவின் இருள் முகத்தில் இருந்து ஆரம்பிக்கும் பாட்டு ஒரு புன்னைகையுடன் தொடர்ந்து.. “எனது கண்களில் மீண்டும் இந்த காதல் மழை பொழியாமலே போகலாம்” என்கிற வரியில் அழும்போது.. அதிராத மனிதனே இருக்க முடியாது. சாதனாவின் கண்கள்.. அவ்வளவு வலியது.. இப்பாடலின் முடிவில் ஒரு முத்தம் இருந்திருந்தால் இன்னும் அதிக வலிமையைச் சேர்த்திருக்கும் என்று தோன்றுகிறது. 64ல் எடுத்த பாடலில் அது எல்லாம் சாத்தியம் இல்லை என்ற போதும் அதைச் செய்திருக்கலாம். ஒருவேளை செய்யாமல் விட்டால் இதற்காக வருங்காலத்தில் ஒருவன் வந்து நொந்துகொள்வான் என்று தெரிந்து கூட செய்யாமல் விட்டிருக்கலாம்.
அந்தப் பாடலை என்னால் முடிந்தளவு மொழிபெயர்த்திருக்கிறேன். அதன் வீடியோ இணைப்பு கீழே

என்னைத் தழுவிக்கொள்
இவ்வழகிய இரவுக்காக - இது
மீண்டும் வராமலேயே போகலாம்…

என்னைத் தழுவிக்கொள்
இவ்வழகிய இரவுக்காக - இது
மீண்டும் வராமலேயே போகலாம்…
இப்பெரு வாழ்வில் மீண்டும்
நம் சந்திப்பு நிகழாமலே போகலாம்….

என்னைத் தழுவிக்கொள்…

இன்று கிடைத்த இந்த கணம்
நமக்கு எதேட்சையாக கிடைத்திருக்கிறது..
உனது இதயத்தில் இருக்கும் என்னை
கொஞ்சம் நெருங்கிப் பார்….

”இது மீண்டும் நிகழாதிருக்க” என
உன் விதியில் எழுதியிருக்கலாம்.
இப்பெரு வாழ்வில் மீண்டும்
நம் சந்திப்பு நிகழாமல் போகலாம்.
என்னைத் தழுவிக்கொள்
இவ்வழகிய இரவுக்காக - இது
மீண்டும் வராமலேயே போகலாம்…

என் அருகில் வா
நான் மீண்டும் மீண்டும் வர மாட்டேன்..
என் அருகில் வா
நான் மீண்டும் மீண்டும் வர மாட்டேன்..

எனது கைகள் கொண்டு
உனது கழுத்தைச் சுற்றி
எனது மன பாரத்தை
உன் மேல் சாய்ந்து அழுகிறேன்..

எனது கண்களில் இருந்து
மீண்டும் இந்த காதல் மழை
பொழியாமலேயே போகலாம்.
இப்பெரு வாழ்வில் மீண்டும்
நம் சந்திப்பு நிகழாமலே போகலாம்….


என்னைத் தழுவிக்கொள்
இவ்வழகிய இரவுக்காக - இது
மீண்டும் வராமலேயே போகலாம்…
இப்பெரு வாழ்வில் மீண்டும்
நம் சந்திப்பு நிகழாமலே போகலாம்….




இவ்வளவையும் டைப் பண்ணி மீண்டும் படித்துப்பாத்துக் கொண்டிருந்தேன். என்னா ஸ்டோரிடா என்று வந்து பார்த்த எனது சீஃப் கேட்டார். நான் இந்தப் பாடலைப் பற்றிச் சொல்லி அவருக்குப் போட்டுக் காண்பித்தேன். “அயோக்கிய ராஸ்கல்” என்றார். இதேப் பாட்டு இதே இடத்துல ஜெய்சங்கரும் ஜெயலலிதாவும் நடிச்சிருப்பாங்க.. என்று உடனே தேடி அந்தப் பாடலின் லிங்க் அனுப்பினார். அந்தப் படம் ”யார் நீ” 1966 வெளியாகியிருக்கிறது. ”வோ ஹவுன் தி” யின் ரீமேக்காக இருக்கவேண்டும். பாடலைப் பாடியது சுசீலா.. எழுதியது கண்ணதாசன்.. இருவரும் ஹிந்திப் பாடலுக்கு குறைவில்லாமல் தங்களது பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். ஆனால் ஜெயாவும் ஜெய்யும்தான் கடுப்பேத்திவிட்டிருக்காங்க.. அந்த லிங்கைப் போட்டு அதைப் பார்த்தால் இந்த பாடலின் மூட் போய்விடும் என்பதால் அதைப் போடவில்லை..





Friday, May 2, 2014

கலோனல் ஸேண்டர்ஸ் - கே.எஃப்.சி உருவாக்கியவனின் கதை

கண்களில் நீர் பொங்க சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். அவரிடம் வேறு எந்த சேமிப்பும் இல்லை. அவருக்குத் தெரிந்தது எல்லாம் அவரது அம்மா அவருக்கு கற்றுக் கொடுத்த சமையல்தான்.


அமெரிக்காவில், அறுபத்தி ஐந்து வயது முதியவர், ஒரு காசோலையை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அது அவர் சம்பாதித்து சிறுகச்சிறுக சேமித்து வைந்திருந்த காசு. அதை வைத்து அவரது மீதி நாட்களை நிம்மதியாக கழிக்க எண்ணியிருந்தார். இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் திட்டமும் அவருக்கு இருந்தது. ஒரு மதியவேளை கூரியரில் ஒரு கடிதத்துடன் வந்த காசோலையை பார்த்த போது அவருக்கு நெஞ்சு அடைத்தது. அவர் தொழில் செய்வதற்காக வாங்கிய சிறிய கடனுக்கு வட்டி குட்டி எல்லாம் கழித்ததில் வெறும் நூற்றி ஐந்து டாலர்தான் மிஞ்சுவதாகவும் அதற்கான காசோலை அனுப்பியுள்ளதாகவும் அந்த கடிதம் சொல்லியது. கண்களில் நீர் பொங்க சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். அவரிடம் வேறு எந்த சேமிப்பும் இல்லை. அவருக்குத் தெரிந்தது எல்லாம் அவரது அம்மா அவருக்கு கற்றுக் கொடுத்த சமையல்தான். அன்று சோர்ந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்த அந்த முதியவர் மீண்டும் எழுந்தபோது சமையல் சக்கரவர்த்தியாக எழுந்தார். அவரது சமையல் ரெசிபியை இப்போது உலகமே சுவைத்து சப்புக்கொட்டிக் கொண்டிருக்கிறது. கே.எஃப்.சி என்று அழைக்கப்படும் உணவு சாம்ராஜ்யத்தைப் படைத்த கலோனல் ஹர்னல்ட் ஸேண்டர்ஸ்தான் அவர்.

அறுபத்தி ஐந்து வயதில் எப்படி கலோனல் ஸேண்டர்ஸால் எல்லாவற்றையும் புதிதாய் உருவாக்கி வெற்றி பெறமுடிந்தது?. அவரது ஆரம்ப நாட்களைப் பற்றி தெரிந்த எவரும் இந்தக்கேள்வியைக் கேட்கமாட்டார்கள். 1890, செப்டம்பர் 9 ஆம் தேதி அமெரிக்காவின் ஹென்றிவில்லி பகுதியில் பிறந்தார், ஸேண்டர்ஸ். அவரது தந்தை வில்புர் டேவிட் ஒரு விவசாயி. தாய் மார்கரெட் ஆன் ஒரு அன்பான இல்லத்தரசி ஸேண்டர்ஸ்க்குப் பிறகு பிறந்தவர்கள் மூன்று பேர். மகிழ்ச்சியான குடும்பத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அந்த குடும்பம் விரைவிலேயே சரிவைச் சந்தித்தது. ஒரு விபத்தில் சிக்கிய வில்புர் டேவிடைக் காக்க அவர்களது விவசாய நிலமனைத்தையும் விற்க நேர்ந்தது. இருந்தும் அவரது காலைக் காப்பாற்ற முடியவில்லை.விவசாயக் கூலியாக மாறி குடும்பத்தைக் காப்பாற்றினார், டேவிட். ஒரு நாள் காய்ச்சலுடன் வந்து படுக்கையில் விழுந்த அவர் எழவே இல்லை. அப்போது ஸேண்டர்ஸ்க்கு ஐந்து வயது. அந்த குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. மார்கரெட் ஆன் தையல் வேலை, பாத்திரம் கழுவதல் போன்ற கிடைத்த வேலைக்குச் சென்றார். அந்த வருமானம் போதவில்லை என்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்கத்தில் இருக்கும் நகரத்திற்கு வேலைக்குச் சென்றார். வாரம் ஒருமுறை மட்டுமே குழந்தைகளைக் காணவீட்டுக்கு வருவார். அவர்களது உணவுக்கான பணத்தை பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கொடுத்துவிடுவார். அம்மாவின் கஷ்டங்களை உணர்ந்த ஸேண்டர்ஸ் தம்பி தங்கைகளை பாதுகாத்து வளர்த்தார்.

தனது முதல் சமையலை ஒரு பேட்டியில் பின்வருமாறு கூறுகிறார். “அப்போது எனக்கு ஏழு வயது. அம்மாவின் நினைவு அதிகம் வர ஒரு நாள் அம்மாவுக்காக நானே லோஃப்(ஒரு வகையான ரொட்டிப்பண்டம்) தயாரித்தேன். அதற்கு முன்பு நான் சமைத்ததே கிடையாது. அம்மா சமைக்கும் போது நான் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பேன் அவ்வளவுதான். அம்மா செய்வதுபோலவே லோஃப் வந்திருந்தது. நான் தம்பி தங்கைகளுடன் அம்மாவைக் காண நகரத்திற்கு கிளம்பினேன். அம்மா வேலை செய்யும் இடத்திற்குப் போனபோது பல பெண்களுடன் சேர்ந்து உருளைக்கிழங்கு உரித்துக் கொண்டிருந்தாள். என்னைப்பார்த்ததும் குழப்பத்துடன் அருகே வந்தாள். நான் செய்த ரொட்டியைக் கொடுத்தேன். அதை சாப்பிட்டுவிட்டு கண்ணில் நீர்மழ்க அவள் கொடுத்த முத்தம் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. சமையலின் மகத்துவதத்தை அன்று உணர்ந்தேன்”






நன்றாக சமைத்ததால் தம்பி தங்கைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு மட்டுமல்லாமல் சமையல் பொறுப்பும் ஸேண்டர்ஸின் கைக்கு வந்தது. பள்ளிக்குப் போக ஆசை இருந்தாலும் குடும்பத்திற்காக சமைக்க ஆரம்பித்தார். ஸேண்டர்ஸ்க்கு பத்துவயதான போது சார்லி நாரிஸ் என்கிற உள்ளூர் விவசாயியின் நிலத்திற்கு வேலைக்குச் சென்றார். அங்கே சிறுபையன் என்பதால் மாதத்திற்கு இரண்டு டாலர் சம்பளம் கொடுக்கப்பட்டது. அதிக வேலை வாங்குவது மட்டுமில்லாமல் சிலசமயம் அடிக்கவும் செய்வதால் கோபப்பட்டு அந்த வேலையை விட்டுவிட்டு வீட்டுக்குவந்தார். அன்று அவரது அம்மா கூறிய அறிவுரையை பின்னாட்களில் சோர்வுரும் போதெல்லாம் நினைவில் வைத்து முன்நகர்ந்ததாக ஸேண்டர்ஸ் கூறுகிறார். அதன் பிறகு ஹென்றி மாங் என்கிற விவசாயிடம் வேலைக்குச் சேர்ந்தார். மாதம் நான்கு டாலர் சம்பளம். மாலை வேலை முடித்து வந்தவுடன் சாப்பிட்டுவிட்டு அம்மாவுடன் பால்பண்ணைகளுக்கு பால் கறந்து கொடுப்பதற்காக செல்வார். வீடு திரும்ப பனிரெண்டு மணிக்கு மேலாகிவிடும். மீண்டும் காலை நான்கு மணிக்கு எழுந்து வேலைக்குச் செல்லவேண்டும். என்னதான் உழைத்தாலும் வறுமை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது. ஸேண்டர்ஸின் பனிரெண்டாவது வயதில் மார்கரெட் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஸேண்டர்ஸ்க்கு அந்த திருமணம் பிடிக்கவில்லை. எப்போதும் தனது சித்தப்பாவிடம் சண்டையிட்டுக் கொண்டேயிருந்தார். ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறினார்.

புதிய ஊருக்குவந்து விவசாய வேலைகளைச் செய்துகொண்டே பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார்.ஆனால் அவரால் படிக்கமுடியவில்லை என்று இரண்டே வாரத்தில் பள்ளியைவிட்டு நின்றார். பிறகு பக்கத்து நகரத்திற்குச் சென்று பெயிண்டராக, ஸ்ட்ரீட்கார் கண்டக்டராக என சிறு சிறு வேலைகள் பார்த்தார். அப்போது கியூபாவில் பணியாற்ற அமெரிக்கா ராணுவம் ஆட்கள் எடுப்பதாக நண்பர் ஒருவர் மூலம் கேள்விப்பட்டு தனக்குப் பதினாறுவயது என்று பொய்சொல்லி ராணுவத்தில் சேர்ந்தார். உண்மையில் அப்போது அவருக்கு பதினான்கு வயதுதான் ஆகியிருந்தது. நிறைய வேலை செய்து முருக்கேறிய உடலுடன் இருந்ததால் பதினெட்டுவயது என்று சொல்லியிருந்தால் கூட நம்பியிருப்பார்கள். கியூபாவில் இருந்து திரும்பிய பிறகு கொல்லராக, தீயணைப்பு வீரராக என பலவேலைகளில் ஈடுபட்டார். தீயணைப்பு வீரராக இருக்கும் போது ஜோஸப்பின் என்கிற பெண்ணைக் காதலித்து மணந்துகொண்டார். அப்போது அவருக்கு வயது பதினெட்டு. அவரது கோபத்தால் தீயணைப்புவீரர் வேலையும் போனது. அதன்பிறகு ரயில்வேயில் வேலைக்குச் சேர்ந்தார். ஜோஸப்பினுக்கு சமைக்கத் தெரியாது என்பதால் ஸேண்டர்ஸ்தான் தினமும் சமைப்பார். தனது ஏழு வயதில் இருந்து தொடர்ந்து சமைத்து வருவதால் சமையலில் கெட்டிக்காரராக இருந்தார். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட அவரது சமையலை ருசித்துப் பாராட்டினார்கள். ஸேண்டர்ஸ்க்குள் இருந்த சமையற்கலைஞன் சரியான நேரத்திற்காக காத்துக்கிடந்தான். இதற்கிடையில் இன்ஸுரன்ஸ் ஏஜண்ட், சேல்ஸ்மேன், சூப்பர்வைஸர் என்று டஜனுக்கும் மேற்பட்ட வேலைகளுக்கு மாறினார்.

1930 ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டங்கண்டது. பல படித்த இளைஞர்கள் வேலை இழந்தனர். பல கம்பேனிகள் மூடப்பட்டன. ஸேண்டர்ஸும் வேலை இழந்தார். எங்குமே வேலை கிடைக்கவில்லை. உணவகங்கள் எல்லாம் ஃபாஸ்ட்புட் கடைகளாக இருந்தன. ஃபாஸ்ட்புட் கடைகளை வெறுத்த ஸேண்டர்ஸ்க்குள் இருந்த சமையற்கலைஞன் இதுவே தருணம் என்று விழித்துக்கொண்டான். கெண்டகி மாகாணத்தில் ’ஸேண்டர்ஸ் கோர்ட் அண்ட் கஃபே’ என்கிற பெயரில் சின்ன ரெஸ்டாரண்டைத் திறந்தார். அதில் அவர் தான் செர்வர், சமையலர், எல்லாம். இரண்டே ஆண்டுகளில் மாகாணம் முழுக்க பிரபலாமானது. மாகாண கவர்னர் வந்து உணவு உண்டு ”இதுவே மாகாணத்தின் உணவு” என்று புகழ்ந்தார். கெண்டகிக்கு வரும் அனைத்து சுற்றுலாப்பயணிகளும் ஸேண்டர்ஸின் கடையைப் கேள்விப்பட்டு தேடிவந்தனர். அடுத்த ஆண்டில் நூற்றி நாற்பத்திரண்டு பேர் அமர்ந்து உண்ணும் அளவுக்கு பெரியகடையாக்கினார். இருந்து எல்லாம் நன்றாகப் போய்கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பெரும் தீவிபத்து ஏற்பட்டும் மொத்தகடையும் சாம்பலானது. ஏற்கனவே நல்ல பெயர் இருந்ததால் வங்கிகள் கடன் கொடுக்க முன்வந்தன. மீண்டும் புதிதாய் 1940ல் தொடங்கிய போதுதான் தனது உலகப்புகழ் பெற்ற சிக்கன்ரெசிபியை உருவாக்கினார்.

மீண்டும் சோதனை இரண்டாம் உலகப்போர் வடிவில் வந்தது. போரால் சுற்றுலாப்பயணிகளின் வரவு குறைந்தது. கடன் கட்டமுடியாமல் வேறொரு உணவகத்திற்கு சூப்பர்வைசராகச் சேர்ந்தார். ஜோஸப்பினுடனான மண உறவு முறிந்தது. கிலோவ்டியா என்கிற பெண்ணை மணந்தார். தான் கண்டுபிடித்த ரெசிபியைத் தூக்கிக்கொண்டு பெரிய ஹோட்டல்கள் எல்லாம் ஏறி இறங்கினார். நண்பர்கள் என்று மட்டுமில்லாமல் தெரிந்தவர்களிடம் எல்லாம் தனது ரெசிபியைப் பற்றிச் சொல்லி உதவிகேட்டார். எல்லா இடங்களிலும் மறுப்பே மிஞ்சியது. இறுதியில் 1952 ல் பெட்டி ஹார்மென் எனும் தொழிலதிபர் உதவியால் முதல் ”கெண்டகி ஃப்ரைட் சிக்கன்” கடை தொடங்கப்பட்டது. விரைவிலேயே பெரும் வரவேற்பைப் பெற்றது. வெற்றிபெற்றுவிட்டோம் இனி கடைசிகாலத்தை நிம்மதியாக கழிக்கலாம் என நினைக்கும் போதுதான் முதல் பத்தியில் நடந்த சம்பவம் நடந்தது. தன்னைவிடாமல் துரத்திக்கொண்டு வரும் துரதிஷ்டத்தை தீர்க்கமாகப் பார்த்து ஒரு முடிவெடுத்தவராய். தனது சிக்கன் ரெசிபியை மெருகேற்றினார்.சிக்கன்களை பக்கெட்களில் விற்கும் ஐடியாவைக் கண்டுபிடித்தார். வியாபாரம் சூடு பிடித்தது. அமெரிக்கா கனடா முழுவதும் பங்குதாரர்களின் உதவியால் கடைதிறக்கப்பட்டது. முதுமை கூடியதால் தனது பங்குகளை ஜான்.ஒய்.பிரவுன் என்பவருக்கு இரண்டு மில்லியன் டாலருக்கு விற்றுவிட்டு கெண்டகி ஃப்ரைட் சிக்கனின் பிரதிநிதியாக மட்டும் இருந்தார். கெண்டகி ஃப்ரைட் சிக்கன் கடைகள் உலகம் முழுக்கத் தொடங்கப்பட்டன.


”தற்போது இருக்கும் ’கெண்டகி ஃபிரைட் சிக்கன்’ சமையலை வியாபாரமாக மட்டுமே பார்க்கிறது. மக்கள் ஃபாஸ்ட் புட் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே கெண்டகி ஃபிரைட் சிக்கனை ஆரம்பித்தேன். ஆனால் தற்போது மக்களின் உடல்நலத்தைப் பற்றி கவலைப்படுவதேயில்லை” என்று வழக்குத் தொடுத்தார் ஸேண்டர்ஸ். கே.எஃப்.சி ஸேண்டர்ஸிடம் ஒரு மில்லியன் டாலர் வழங்கி இது போல் மீண்டும் நிகழாது என்று சமாதானம் பேசியது. ஸேண்டர்ஸும் தனது வழக்கைத் திரும்பப் பெற்றார். அத்தொகையைக் கொண்டு தொண்டு நிறுவனம் தொடங்கி மருத்துவ உதவிகள் செய்ய ஆரம்பித்தார். இன்றும் அவரது தொண்டு நிறுவனம் ஏழை மக்களுக்குத் தொண்டு செய்துகொண்டிருக்கிறது.




1980, டிசம்பர் 16 ஆம் தேதி ஸேண்டர்ஸ் எனும் சமையல் சக்கரவர்த்தி மறைந்தார். அதன் பிறகு அனைத்துப் பெரிய கம்பேனிகளும் அதை வாங்க முயன்றன. இறுதியில் உலகிலேயே இரண்டாவது பெரிய நிறுவனம் என்று அறியப்படுகிற பெப்சிகோ கம்பெனி வாங்கியது. அதுவரை கெண்டகி ஃப்ரைட் சிக்கன் என்று இருந்த பெயர் கே.எஃப்.சி என்று பெயர் மாற்றப்பட்டு மொத்தம் நூற்றி இருபது நாடுகளில் பதினெட்டாயிரம் கடைகளாக உலகம் முழுக்க வியாபித்திருக்கிறது. தற்போது ஸேண்டர்ஸ் கனவு கண்ட சுகாதாரம், சேவை அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு சமையல் ரெசிபியை மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டு கல்லாகட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த வருடம் சீனாவில் மூன்று கடைகள் சுகாதாரக் குறைவு என்று சொல்லி மூடப்பட்டன. இங்கே திருச்சியில் உள்ள கே.எஃப்.சியில் கூட புழு இருக்கும் சிக்கனை விற்கிறார்கள் என்று பரபரப்புச் செய்தியானது. கோழி வளர்க்கும் முறையே பயங்கர சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. கோழியின் இறகுகள் , அலகுகள் எல்லாம் உதிர்வதற்காக முட்டைகளாக இருக்கும் போதே ஊசிப்போடப்படுகிறது என்று படங்கள் வெளியாகி பரபரப்பு கிளம்பியது. இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு கே.எஃப்.சியின் முகப்பில சிரித்தபடி இருக்கிறார் கலோனல் ஹர்னல் ஸேண்டர்ஸ்.

தற்போது கே.எஃப்.சி போன்ற உணவகங்களின் தரம் எப்படி இருக்கிறது என்று அறிய Food INC என்கிற டாக்குமெண்ட்ரியைப் பார்க்கவும்.

(இதன் சுருக்கப்பட்ட கட்டுரை புதிய தலைமுறை இதழில் வெளியானது)

இந்தியாவில் சே




அவரது கனவுகள் அவரை அதிகாரத்தின் அஸ்திவாரங்களில் கை வைக்கத் தூண்டியது, மற்றவர்களின் சுதந்திரத்திற்காக வன்முறை போராட்டம் என்கிற கண்ணிவெடி நிலத்திற்குள் நுழையத் தூண்டியது.



(சே வின் இந்தியப் பயணத்தைப் பற்றி எழுத்தாளர் ஓம் தன்வி 2010 ஆம் ஆண்டு ஒரு கட்டுரை வெளியிட்டார். அந்தக் கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இது.)

சேகுவேரா இறந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் சே எனும் புரட்சி அடையாளத்தின் மீதுள்ள ஈர்ப்பு இப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. லா ஹபானாவில் உள்ள வேடாடோவின் பெரிய கட்டிடங்களுக்கு நடுவே எளிமையான ஒரு சின்ன நீல நிற வீடு இருக்கிறது. உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதில் ஆர்வமுடையவரும் கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவிற்கு அடுத்து சக்திவாய்ந்தவராக திகழ்ந்தவருமான கமாண்டர் எர்னஸ்டோ சே குவேரா அந்த சிறிய வீட்டில்தான் வாழ்ந்தார் என்றால் நம்புவது கடினம். தற்போது அந்த வீடு சேகுவேரா படிப்பக மையமாக அவரது மகன் கமிலோ குவேரா மார்ச்சால் மாற்றப்பட்டுள்ளது.

ஒரு சில வாரங்களுக்கு முன்பு, 1959 ஆம் ஆண்டு, குவேரா மேற்கொண்ட, அதிகம் வெளியே தெரியாத அவரது இந்தியப் பயணத்தைப் பற்றி தெரிந்துகொள்ள நான் குவேரா படிப்பக மையத்திற்கு சென்றேன். சேவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக சேவின் சொந்த நாடான அர்ஜென்டினாவிற்கு கமிலோ கிளம்பிக் கொண்டிருந்தார். எனது உதவிக்கு ரிசர்ச் ஆபிசர் லாசாரோ பக்கலோவை விட்டுச் சென்றார். சேவுடன் இந்தியாவிற்கு வந்தவர்கள் பற்றியும் அந்த பயணத்திற்கு பின் கியூபாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைள் பற்றியும் பக்கலோ நிறைய தகவல்கள் கொடுத்தார். இந்தியா உட்பட பல நாடுகளுக்கு சென்று வந்ததை பற்றி சே கியூப அரசாங்கத்திற்கு சமர்பித்த அறிக்கையையும் மூன்றாம் உலக நாட்டுத் தலைவர்களுடன் சே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கொண்ட காலண்டரும் அங்கே காணக்கிடைத்தது. அதில் ஒரு புகைப்படத்தில் சேவும் நேருவும் இருந்தார்கள். அவர்களது உறவின் நெருக்கம் சேவின் அறிக்கையிலும் சேவுக்கு நேரு அளித்த ’குக்குறி’ என்கிற வாளிலும் தெரிந்தது. அந்த வாளை மிகுந்த பயபகத்தியோடு எனக்கு பக்கலோ காண்பித்தார்.

அந்த கத்தியின் பிடி தந்தத்தாலும் கத்தியின் உறை வால்நட் மரத்தாலும் செய்யப்பட்டிருந்தது. அந்த உறையில் ஒரு பெண்ணின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த பெண் யார் என்று தெரிந்துகொள்வதற்கு கமிலோ ஆர்வமாக இருந்ததாக பக்கலோ கூறினார்.’அது பெண் அல்ல பெண் தெய்வம் துர்கா, சக்தியின் அவதாரம்’ என்றேன். ’சே போன்ற சக்திவாய்ந்த தலைவருக்கு அதைவிட சிறந்த பரிசு தந்திருக்கமுடியாது’ என்றதும் பக்கலோ புன்னைகத்தார்.

கியூப சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாடிஸ்டாவுக்கு எதிராக போரிட்ட காலங்களில் சேகுவேராவின் செயல்பாடுகளால் பிடல் காஸ்ட்ரோ கவரப்பட்டார். இரண்டு ஆண்டு கால கொரில்லா யுத்தத்திற்குப் பிறகு 1959 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காஸ்ட்ரோவின் புரட்சிப்படை ஆட்சியமைத்தது, “சே கியூபாவின் சொந்தமகன்” என்று காஸ்ட்ரோ அறிவித்தார். கியூபாவின் அறிவிக்கபடாத வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான சே குவேராவை ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிவைத்தார். புதிதாக அமைந்த கியூபா அரசாங்கத்தின் மேல் நம்பிக்கையை வளர்த்தெடுப்பதும் கியூபாவில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு குறிப்பாக சர்க்கரைக்கு சந்தையை ஏற்படுத்துவதும் அப்பயணத்தின் நோக்கமாக இருந்தது.

1959, ஜூன் 12 ஆம் தேதி ஹவானாவில் இருந்து கிளம்பிய சே தனது 31வது பிறந்தநாளை மேட்ரிட்டில் [ஸ்பெயின் தலைநகர் ] கொண்டாடிவிட்டு கெய்ரோ வழியாக தில்லி வந்தார். அவரது விமானம் ’பாலம்’ விமானநிலையத்தை ஜூன் 30 இரவில் வந்தடைந்தது. அதிகாரப்பூர்வமாக எந்த பதவியிலும் இல்லாததால் ‘கியூபாவின் தேசியத் தலைவர்’-ஐ வரவேற்க துணை பாதுகாப்பு அதிகாரி டி.எஸ். கோஸ்லா மட்டுமே வந்தார். பின்பு சாணக்கியபுரியில் புதிதாக கட்டப்பட்டிருந்த அசோக் ஹோட்டலில் சே தங்கவைக்கப்பட்டார். சேவுடன் கணிதவியலாளர், பொருளியல் வல்லுனர்,கட்சி உறுப்பினர், புரட்சியில் தலைமை வகித்த கேப்டன், ஒரு மெய்க்காப்பாளர் என சிறிய குழுவுடன்தான் சே வந்திருந்தார். பார்டோ லாடா என்கிற வலதுசாரியும் இந்த குழுவுடன் தில்லியில் இணைந்துகொண்டார். லாடா, சேவிற்கு உதவ அனுப்பபட்டாலும் ஹவானா ரேடியோவின் தினசரி நிகழ்ச்சிகளில் இருந்து லாடாவை ஒதுக்கிவைப்பதற்காக காஸ்ட்ரோ கையாண்ட யுக்தி இது என்றும் கூறப்படுகிறது. சேவும் வந்திறங்கிய மறுநாள் காலை பிரதமரின் இல்லமான தீன் மூர்த்தி பவனில் நேருவை சே சந்தித்தார். நேருவுக்கு சோஷலிச நாடுகளின் மீது ஒரு கரிசனம் இருந்தது. “நேரு ஒரு தந்தைவழி தாத்தாவைப் போல் வரவேற்றார்” என்று சே தனது அறிக்கையில் குறிப்பிடும் அளவுக்கு நேருவால் கவரப்பட்டார். மேலும் அந்த அறிக்கையில் “நேரு உன்னத ஆர்வத்தோடு கியூப மக்களின் அற்பணிப்பையும் போராட்டத்தையும் பற்றி கேட்டறிந்தார். மேலும் நமது அளவில்லா தைரியத்தை பாராட்டிய அவர், நமது கொள்கைகளுக்கு ஆதரவுதெரிவித்தார்” என்று சே எழுதியுள்ளார்.

காலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா கியூபாவுக்கு இடையே நல்லுறவு ஏற்படுத்தவது பற்றியும் வர்த்தக உறவை வளர்ப்பது பற்றியும் சே பேசினார்.கல்கத்தாவில் கியூபாவின் தூதரகம் இருந்த போதிலும் கியூபாவில் இந்திய தூதரகம் தனியாக இல்லை. வாஷிங்கடனில் இருந்த இந்தியத் தூதரகமே கியூபாவின் உடனான உறவை கவனித்துக்கொண்டிருந்தது. கியூபாவில் தூதரகம் தொடங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இரு நாடுகளும் நல்லுறவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை துரிதமாக தொடங்குவது என்று முடிவெடுத்தன. உணவுக்குப் பிறகு இந்திய வர்த்தக அதிகாரிகளை சந்திப்பதாக் முடிவெடுக்கப்பட்டது.


உணவு மேஜையில் நடந்தவற்றை லாடா தனது குறிப்பில் பின்வருமாறு விளக்குகிறார். “உணவின் போது நேருவுடன் அவரது மகள் இந்திராவும் பேரன்கள் ராஜீவ் மற்றும் சஞ்சயும் இருந்தார்கள். இரண்டு மணி நேரமாக நேரு ஒவ்வொரு உணவைப் பற்றியும் சேவுக்கு கூறிக்கொண்டிருந்தார். அதைக் கேட்பதில் ஆர்வமில்லாத சே மரியாதை நிமித்தமாக புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சேவே பேச்சை மாற்ற எண்ணி கம்யூனிச சீனா பற்றியும் மாசே துங் பற்றியும் நேருவின் கருத்தைக் கேட்டார். ஆனால் நேரு அதை கவனிக்காமல் ஆப்பிள்கள் பற்றியும் அவற்றின் சுவையைப் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார்”.நேருவைப் பற்றி அறிந்தவர்கள் லாடா சொல்வது நம்பும்படி இல்லை என்றே சொல்வார்கள்.
மதிய உணவுப் பேச்சு சுவாரஸ்யமற்று இருந்தாலும் உணவுக்குப்பின் பல முக்கியச் சந்திப்புகள் நடந்தன. கியூப குழு, ஓக்லா தொழிற்சாலையின் மரம் இளைக்கும் இயந்திரங்களை பார்வையிட்டது. பின்னர் வர்த்தக அமைச்சர் நித்யானந்த் கனூகோவை சந்தித்தித்து. இந்தோ-கியூப வார்த்தக உறவு வளர இது அடிக்கல்லாக இருந்தது. மாலையில் அரை மணி நேரம் காட்டேஜ் இண்டஸ்ட்ரி எம்போரியத்தில் செலவிட்டார் சே.

அடுத்த நாள் ஜூலை 2 ஆம் தேதி கியூப குழு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனனை சந்தித்தது. மறுநாள் ”கனிந்த மனநிலையில் துணிந்த வீரன்” என்று சேவும் மேனனும் புன்னகையுடன் பேசும் படங்களை செய்திதாள்கள் வெளியிட்டன. பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மட்டுமின்றி விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் , தேசிய பௌதிக ஆய்வக அதிகாரிகள் ஆகியோரையும் சந்தித்தார்கள். முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான ஒரு மெட்டல் டிடெக்டரை சோதித்துப் பார்த்தார் சே.

மறுநாள் தில்லியைச் சேர்ந்த விவசாயிகளையும் பள்ளிகளையும் பார்வையிட்டார். அன்று மாலை சமூக மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ்.கே.தேயை சந்தித்தார். நான்காவது நாள் விவசாயத்துறை அமைச்சர் ஏ.பி.ஜெயினை சந்தித்த சே இந்தியாவில் இருந்து நிலக்கரி, பருத்தி,சணல் பொருட்கள், சமையல் எண்ணெய்கள், டீ, ஃபிலிம், பயிற்சி விமானங்கள் ஆகியவற்றி இறக்குமதி செய்வதைப் பற்றியும் சர்க்கரை,செம்பு, டயர் தயாரிப்புக்கு உதவும் பொருட்கள், கோக்கோ ஆகியவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதைப் பற்றியும் பேசினார். இந்த சந்திப்புகளைப் பற்றி சே எழுதிய குறிப்புகளை வாசித்தால் அவர் குறைந்த நாட்களில் சர்வதேச வர்த்தகத்தை எவ்வளவு தெரிந்துவைத்துள்ளார் என்று தெரியும். “வர்த்தகச் செயலாளருடனான சந்திப்பு எதிர்கால பேச்சுவார்த்தைக்கு உதவியாய் இருந்தது. இது மிகவும் முக்கியமானதாக மாறலாம். முன்னூற்றி எண்பது மில்லியன் இந்தியர்களின் வாழ்நிலை உயர்ந்தால் அவர்களது சர்க்கரை தேவை அதிகரிக்கும்.இந்தியா நமக்கு சர்க்கரைக்கான பெரிய சந்தையாக மாறும்” என்று எழுதியிருந்தார். காஸ்ட்ரோ கூட ”இந்த துப்பாக்கியைக் காதலிக்கும் டாக்டருக்கு எந்த வேலை கொடுத்தாலும் சிறிது நாட்களில் அதில் நிபுணன் ஆகிவிடுகிறார்” என்று சொல்லியிருக்கிறார்.

சே பிலானாவிற்கு வருகை தந்ததைப் பற்றி நிறைய அலுவல் ரீதியான புகைப்படங்கள் இருந்த போதிலும் அதைத் தாண்டி நிறைய பெர்சனல் புகைப்படங்கள் இருந்தன.அதில் சில விவசாயிகள் காந்தி குல்லாயுடன் சேவுக்கு மாலை போடுவது போன்ற அரிய புகைப்படமும் இருந்தது. இந்தியாவின் கல்வி நிலையைப்பற்றி “கூட்டுறவின் பெருமைகளான பள்ளிகள் எல்லாம் இரண்டு ஆசிரியர்களின் கடின முயற்சியாலேயே நடைபெறுகிறது. அங்கிருக்கும் குழந்தைகள் முகத்தில் பிணி தொற்றியிருந்தது. அவர்கள் தரையில் முழங்காலிட்டு ஆசிரியர்களின் விளக்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்”. இது இன்றும் பொருந்திப்போவதுதான் வருத்தத்துக்குரியது. அதே போல் ஒருபுறம் பெரும் தொழிற்சாலைகளும் இன்னொருபுறம் வரியநிலை விவசாயிகளையும் பார்த்த சே மிகுந்த வருத்தத்துக்கு உள்ளானார். “சிலருக்கு அளவுக்கு அதிகமாக இருக்கிறது.சிலருக்கு எதுவுமே இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் கால்நடைகளை பராமரிக்கும் இந்திய பண்புதான் கிராமத்தின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகிறது என்று சே அறிந்தார். அது பின்னாட்களில் அவருக்கு உதவியது.

வாசிப்பது, கவிதை எழுதுவது என்று எப்போதும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பவர் என அறியப்பட்ட சே இந்தியாவில் இருந்தவரை மிகுந்த உற்சாகத்துடன் வெளியே சுற்றிக்கொண்டிருந்தார். தில்லியில் இருக்கும் சிலி அம்பாசிடரை சந்திக்கும் போது தலைகீழாக நின்று சிரசாசனம் செய்து காண்பிக்குமளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தார். தில்லியில் இருந்து அவரது தாயுக்கு எழுதிய கடிதத்தில் இதைப் பற்றி குறிப்பிட்ட அவர், வந்த காரியங்களை சரியாக செய்யமுடியுமாவென்று பயந்ததாகவும் ஆனால் இந்தியத் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளதாகவும் எழுதியுள்ளார்.

ஜூலை 5 ஆம் தேதி தில்லிவிட்டு இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு கியூப குழு கிளம்பியது. முதலில் அவர்கள் லக்னோவில் உள்ள சர்க்கரை ஆராய்ச்சி மையத்திற்கு சென்றதாக கியூப வானொலி அறிக்கையில் இருக்கிறது ஆனால் இதுகுறித்து வேறு ஆவணங்கள் இல்லை. ஜூலை 10 ஆம் தேதி சே கல்கத்தா வந்தார் என்று ஒரு ஆங்கில நாளேடு தெரிவிக்கிறது. அங்கே அவர் மேற்குவங்க முதல்வர் பி.சி.ராயையும் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட்கட்சியின் தலைவர்களையும் சந்தித்ததாக அப்போது கல்கத்தாவில் பணிபுரிந்த ஒரு உயரதிகார நண்பர் என்னிடம் தெரிவித்தார். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக சே தங்களை சந்தித்ததை கம்யூனிஸ்ட் தலைவர்கள் முற்றிலும் மறுத்தனர்.

சே தனது அறிக்கையில் கல்கத்தாவில் கிருஷ்ணா என்று ஒரு அறிவுஜீவியை சந்தித்தாகவும் அணுசக்தியை எப்படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது, அணு ஆயுதங்கள் எவ்வளவு கொடூரமானவை, ஹிரோஷிம்மாவில் அவை ஏற்படுத்திய தாக்கம் போன்றவற்றைப் பற்றி புது தெளிவு வர அவருடனான உரையாடல் காரணமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த மாயக் கண்ணன் யார் என்று எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிலர் அது ஜே.கிருஷ்ணமூர்த்தியாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அனால் சே குறிப்பிடும் தேதிகளில் அவர் காஷ்மீரில் இருந்தார் என்பதால் அது அவர் இல்லை என்பது உறுதியாகிறது. பின்பு ஒருமுறை சே ஜப்பான் செல்லும் போது அங்கிருந்த கியூப தூதர் சேவை இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த படைவீரர்களின் கல்லறைக்கு மரியாதை செலுத்த அழைத்த போது “இல்லை நான் ஹிரோஷிம்மாவிற்கு போகிறேன்.. எங்கே அமேரிக்கா லட்ச ஜப்பானியர்களை கொன்றதோ அங்கே போகிறேன்” என்று கிளம்பியதாக அந்த பயணக்குழுவில் இடம்பெற்ற ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு காரணம் கிருஷ்ணாவின் பேச்சு என்றும் கூறியுள்ளார்.

காந்தியின் மீதும் அவரது சத்யாகிரகப் போராட்டத்தின் மீதும் பெருமதிப்பை இந்தியப் பயணம் சேவுக்கு ஏற்படுத்தியது. சே, தில்லியில் இருக்கும் போது அவரை ஆல் இந்தியா ரெடியோவிற்காக கே.பி.பானுமதி பேட்டி எடுத்தார். பானுமதியிடம் நான் பேசியபோது “சே நிறைய இடைவெளி விட்டு ஒரு சோதிடர் போல் பேசினார் “அவரது ராணுவ உடை ,பெரிய பூட்ஸ்கள் , மாண்டி கார்லோ சுருட்டு ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஒரு புனித துறவி போல் பேசினார்” எனக் குறிப்பிட்ட அவர், “நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட். உங்களால் எப்படி பலமத சமூகத்தை ஏற்றுக் கொள்ளமுடிகிறது?” என்று கேட்டபோது “நான் என்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொண்டதே இல்லை. நான் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் நம்பும் ஒரு சாதாரண சோசலிஸ்ட். எனது பால்ய காலத்தில் இருந்தே லத்தின் அமெரிக்க நாடுகளின் பசி, பஞ்சம்,பட்டினி,வேலையின்மை ஆகியவற்றைப் பார்த்தே வளர்ந்தேன். மார்க்சியம் லெனினியக் கோட்பாடுகளில் உலகத்திற்கு தேவையான பாடங்கள் இருக்கின்றன. ஆனால் அதை சரிவர நடைமுறைப் படுத்துவதே மார்க்சின் கனவுகளை முழுமையடையச் செய்யும். இந்தியாவில் சுதந்திரத்திற்கு வழிவகுத்த காந்தியத்திற்கு என்று தனிப்பட்ட சக்தி இருக்கிறது. உங்களைப் போல் லத்தின் அமெரிக்கர்களான எங்களுக்கு காந்தியும் நீண்ட பாரம்பரியமும் இல்லை அதனால் தான் எங்களது மனநிலை வேறுவிதமாக இருக்கிறது” என்று சே பதிலளித்ததாக கூறினார். இந்தியாவின் அஹிம்ஸை அவரை ஈர்க்கவில்லை என்றாலும் சமூக நீதியின் மீதான அவரது பார்வையில் அது மாற்றத்தை ஏற்படுத்தியது. அது அவரது கடைசிகாலங்களில் பிரதிபலித்தது.

இந்தியாவில் இருந்து சே கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) வழியாக பர்மா,இந்தோனேசியா,ஜப்பான் என்று பயணித்தார். திரும்பும் போது சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் தங்கினார். ஆப்பிரிக்க ஐரோப்பிய நாடுகளில் சே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது காஸ்ட்ரோவிற்கு உடல் நலக்குறைவு என்கிற வதந்தியைக்கேட்டு 1959 செப்டம்பர் 8 ஆம் தேதி ஹவானா திரும்பினார். கியூபாவிற்குத் திரும்பிய சேவிற்கு காஸ்ட்ரோ தொழில்துறை அமைச்சர் பதவி அளித்தார். அலுவலக வேலை சே குவேராவிற்கு சலிப்பைத் தந்தன. அவர் ரஷ்ய சோசலிசம் முதலாளித்துவத்தைப் போலவே மூன்றாம் உலக நாடுகளை வைத்து பயனடைவதாக கருதினார். தனது பதவியைத் துறந்துவிட்டு துப்பாக்கியுடன் காட்டுக்கே திரும்பினார். அவர் இந்தியாவில் இருக்கும் போதும் மற்ற லத்தின் அமெரிக்க நாடுகளில் புரட்சியை ஏற்படுத்துவதைப் பற்றியே சிந்தித்து வந்தார் என்கிறார்கள் அவரது பயணக்குழுவில் இடம்பெற்று இருந்தவர்கள்.

.மீண்டும் அவரது புரட்சி உடையை அணிந்து கொண்ட சே காங்கோ மற்றும் பொலிவியாவில் சோசலிசப் புரட்சியை கொண்டுவர முயற்சித்தார். அவை ஏன் தோற்றன என்பது வேறு கதை. ஆனால் கியூபர்களுக்கும் லத்தின் அமெரிக்க நாட்டு மக்களுக்கும் சே குவேரா ஒரு தேவகுமாரனைப் போல் தோன்றுகிறார். அவரது கனவுகள் அவரை அதிகாரத்தின் அஸ்திவாரங்களில் கை வைக்கத் தூண்டியது, மற்றவர்களின் சுதந்திரத்திற்காக வன்முறை போராட்டம் என்கிற கண்ணிவெடி நிலத்திற்குள் நுழையத் தூண்டியது. 1967 அக்டோபர் 9 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாலும் அவரது சிந்தனை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு ஊக்கமாக இருந்து அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்து எழச் செய்கிறது. அவர் இறந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பும் அவர் கனவு புரட்சி நெருப்பை பலரது மனதில் பற்றவைத்தபடி இருக்கிறது.




(நன்றி:புதியதலைமுறை)