Tuesday, March 6, 2012

இறப்புச் சொற்கள்

1

இப்போது நான் இறக்கிறேன்.

என்னுடன் சேர்ந்து உனது

அழகும்... நித்யமும்...

பவித்ரமும்.. இன்ன பிற

கனவுலக யாத்திரைகளும்...



நான்

அழுவதா? வேண்டாமா?





2



நான்

இறப்பதற்கு

மூன்று நாட்கள் இருக்கின்றன.

முதல் நாள்

எப்படி சூரியன் உதித்ததோ

அப்படியே தான்

உதித்தது மூன்றாம் நாளும்...



3



"எதுவும் கடந்து போகும்" என்கிறாய்

மரணம் என உச்சரிக்கின்றன

என் உதடுகள்.



4



இதை நீங்கள் படிக்கையில்

நான் இறந்திருக்கலாம்

இருக்கலாம் என்பதில்

இருக்கிறது எனதுயிர்.





5

மரணம்

எப்போது? எப்படி?

என்பதே ஆச்சரியம் என்கிறாய்

எனக்கு அதிர்ச்சி

எனக் கேட்கிறது





6



"மரணிப்பாய் என அறிந்து

எதற்கு ஆசை?"

எனும் உன் கேள்வியில்

'கூடாது' என்பதை

முடிவில் சேர்த்துக்

கொள்கிறேன்.



7



கவிதையினூடே இடம்

விடுகிறேன் அவற்றை

மரணம் நிரப்பட்டும்



8



சாகாமல் இருத்தலுக்கு

வாழ்தல் என்று

பொருள் அல்ல..



9

வெள்ளைத் தாளாய்

படர்ந்திருக்கிறது மரணம்

வட்டம் சிறிதானாலும்

பெரிதானாலும்

உள்ளீடு ஒன்றுதான்...

1 comment:

rajamelaiyur said...

அழகிய கவிதை தொகுப்பு நன்றி

Post a Comment