Sunday, October 28, 2012

நானாக மாற விரும்புபவர்கள்


காலை எழுந்ததும்
சூரியனுக்குத் துணையாய்
கொஞ்சம் வெயில்
பிரசவிக்க வேண்டியிருக்கும் .

ஏதேனும் பறவைக்குஞ்சு
தவறி விழுந்தால்
அதைப் பூனைகள் அண்டுமுன்
கூடு சேர்க்க வேண்டும்.

தண்ணீர் கலந்து
என்பதாலேயே
விலையேறிய பாலை
ஆறவைத்து பூனைக்கு ஊற்றவேண்டும் .


தேனுரிவதில் ஏதேனும்
பிரச்சனை வந்தால்
பட்டாம் பூச்சிக்கும் தேனீக்கும்
பைசல் பண்ணவேண்டிவரும்.

பாரதியுடன் சேர்ந்து கொண்டு
எத்தித் திருடும் காக்கைக்கு
இரங்கிய பின்
சுத்தி வளரும் கொடிக்கு
பாரியுடன் ஒருகையைத்
தரவேண்டியிருக்கும்


யு.பி.எஸ் மாட்ட வசதியில்லாத
பக்கத்து வீட்டுக் கவிதா குட்டிக்கு
கார்ட்டூன் நேரத்தில்
கதை சொல்ல வேண்டியிருக்கும்.


இதற்கிடையில் யாராவது
"என்ன தான் பண்றீங்க?"
எனும் போது
அமைதியாக மண் பார்க்கவேண்டும்

Sunday, October 7, 2012

உள்ளாடை


நீங்கள் யார் என்பதை
உங்கள் உள்ளாடை
சொல்லிவிடும்.

உங்கள் அந்தரக்கத்தைக்
காப்பதையும் தாண்டி
அவையாற்றும் வினைகள் -எல்லாம்
ஜனநாயகத்தின் வரம்...


பிராண்டட் பட்டி தெரிய
உள்ளாடை அணிவது
நாகரிகத்தின் உச்சம்
ஆகிவிட்ட நொடியில்
வெளித் தெரியும்
உள்ளாடையை சுட்டுவதும்
இழிவு ஆகிவிட்டது.


கோமனத்தை
இன்னும் உள்ளாடை
என நம்பும்
மாயாண்டிக்கு கேட்காமல்
உலகமயமாக்கலுக்கு
ஒரு நன்றி
சொல்லிக் கொள்ளுங்கள்.


அப்படியே
கிழிந்த உள்ளாடையின்
மேல் அயர்ன்
பண்ணிய சட்டை போடும்
அனந்த் ராஜுக்கும்
கேட்காமலிருக்கட்டும்...

முகநூல் திறக்காத
நாளில் சிவப்பு ஜட்டியோடு
கவிதை எழுதும் கவிஞருக்கு
கேட்டால் நீங்கள் செத்தீர்கள்..

ஒரே ஒரு
ஆறுதலான
விஷயம்.

எனக்கு
உள்ளாடை அணியும்
பழக்கம் இல்லை...

இந்த கவிதைக்கெல்லாம் பேர் வைக்க முடியாது


மரண வீட்டிற்குப் போனேன்
ஒருவன் இறந்து கிடந்தான்.

இறந்தவன் யார் எனக் கேட்டேன்
என் அப்பா என்றான் ஒருவன்.

இன்னொருவனிடம் கேட்டேன்
என் தங்கையின் கணவன் என்றான்.

வேறொருவனிடம் கேட்கும் போது
ஊர் பெரிய மனிதன் என்றான்.

கடங்காரன் என்றாள்
கேட்காமலேயே ஒருத்தி.

கடைசியாய்
இறந்தவனிடமே கேட்டேன்
அவன் அமைதியாக இருந்தான்.

தீர்க்கமாக நம்புங்கள்



நாம் அடிமை இல்லை....
தீர்க்கமாக நம்புங்கள்...
நானும் அதையே நம்புவேனாக..

நம்மை பேச
அனுமதிக்கிறான்.
நாக்கு மட்டும் அவனுடையது....

நாம் அடிமை இல்லை
தீர்க்கமாக நம்புங்கள்...
நானும் அதையே நம்புவேனாக..

நாம் விரும்பிய
கல்வி கிடைக்கும்.
வேலைக்கான படிப்பை-மட்டும்
அவன் முடிவு செய்வான்...

நாம் அடிமை இல்லை....
தீர்க்கமாக நம்புங்கள்...
நானும் அதையே நம்புவேனாக..

காதலிக்கு பரிசு
வாங்கலாம்.-ஆனால்
கடைக்கு அவன்தான்
சொந்தக்காரன்..

நாம் அடிமை இல்லை....
தீர்க்கமாக நம்புங்கள்...
நானும் அதையே நம்புவேனாக..


இந்தக்
கவிதையை என்னால்
எழுத மட்டுமே முடியும்..
உங்களால் படிக்க
மட்டுமே முடியும்...

நாம் அடிமை இல்லை
தீர்க்கமாக நம்புங்கள்...
நானும் அதையே நம்புவேனாக..

கடவுளின் துகள்... கடவுளின் இருப்பு...


"ஓய்... ஹின்டு பாத்திங்களா... கடவுளின் துகள கண்டுபிடிச்சிட்டாங்களாம் கானும்.... நான் தான் சொன்னேனே கடவுள் ஒரு பொருள்னு உங்க கருத்துப் படியே.. பொருள யாராலையும் உருவாக்கவும் முடியாது அளிக்கவும் முடியாது ... அந்த பரம்பொருள் தான் நம்ம எல்லாத்தையும் உருவாக்கினது... இப்பவாவது புரிஞ்சுதா ஓய்..." ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்ட நண்பர் சொன்னார்.

அப்படியா கடவுள் பொருளா?

பார்ப்போம்... பொருள் என்றால் மூன்று விதியின் கீழ் இருக்கும்.. (தலைவிதி இல்லிங்க சாமி... அறிவியல் விதி)

பொருள் என்றால் என்ன? (வாட் இஸ் மேட்டர்?) எட்டாவதில் படித்தது.. ஆங்கில வழிக்கல்வி... மனப்பாடம் பண்ணிய டெபனிசன் மண்டைக்குள் இருக்கிறது.. முடிந்த அளவு தமிழில் சொல்கிறேன்..

1.பொருள் என்பதை நம்மை (மற்ற பொருள்களை) சார்ந்து இருக்காது.. சரியான மொழி மாற்றா என்று தெரியாததால் ஆங்கில டெபனிசனை இங்கே போடுகிறேன்... (எ மேட்டே டஸ்னாட் டிபன்ட் அப் ஆன் சப்ஜக்ட்ஸ்) .. அதாவது ஒரு கல் தேனியில் கிடக்கிறது... நீங்கள் அமேரிக்காவில் இருந்தாலும், சென்னையில் இருந்தாலும் , தேனியில் இருந்தாலும்,இறந்தே போனாலும், அந்த கல் தேனியில் தான் இருக்கிறது. உங்களைச் சார்ந்து இல்லை

2.பொருளை நாம் ஏதாவது ஒரு வகையில் உணரமுடியும்.(வீ கேன் ஃபீல் மேட்டர் பை எனி மீன்ஸ்)
விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

3.பொருள் எதாவது ஒரு கால வெளியில் தான் இருக்கும்.(எ மேட்டர் மஸ்ட் பீ இன் எ டைம் ஸ்பேஸ்) அதாவது ஒரு பொருள் எதாவது ஒரு இடத்தை நிரப்பித் தான் இருக்க முடியும். உங்க செல்போன் உங்கள் கையிலோ.. பையிலோ.. தரையிலேயோ.. மேஜையிலேயோ எதேனும் ஒரு இடத்தில் தான் இருக்க முடியும்.. இடம் இல்லாமல் உங்க செல்போன் இருக்க முடியாது.. (வெளி தான் புரிவதற்காக இடம் என்று சுட்டப்படுகிறது). அதே போல் குறிப்பிட்ட காலத்துக்குத் தான் அது செல் போன்.. உங்கள் போனை வைத்துவிட்டு ஆயிரம் வருடம் வந்து பார்த்தால் அது அரித்துப் போய் தூசியாகிவிடும்.

இது மூன்றையும் கடவுள் சேட்டிஸ்ஃபை பண்ணிகிறாரா? என்ன சொல்கிறார் , நம் முதல் பத்தி ஆசாமி..

1."கடவுள் யாரையும் டிபென்ட் பண்ணி இல்ல... நாம தான் லார்ட டிபென்ட் பண்ணி இருக்கோம்"
2."தியானத்தால கடவுள உணரமுடியும்னு பெரியவா எல்லாம் சொல்லிருக்காலோ இல்லியோ... இந்த ரோட்டுல வந்து சாமி ஆடுறாலே அது எல்லாம் கடவுளை உணராமலா ஆடுவா.."
3." 'காடு'க்கான கால வெளி எல்லாம் நாம பாக்க முடியாது கானும்... அவாளுக்கு தேவலோகம்னு ஒன்னு இருக்கு... அங்க இருந்து எல்லாத்தையும் கவனிச்சுப்பா... அங்க ஒரு நாள் என்பது நமக்கு ஒரு வருஷம்னு எம்பாட்டி சொல்லுவா..."


1.எனக்கென்னமோ கடவுள் மனுசங்கள மட்டும் தான் டிபென்ட் பண்ணி இருக்கிற மாதிரி தெரியுது.. மனுசன் வாரதுக்கு முன்னாடி இருந்த எந்த உயிரினமும் இப்ப மனுசனத் தவிர இருக்கிற உயிரினமும் கடவுளைக் கும்பிடுவது இல்லியே.... "நமக்கு மட்டும் தானேடா ஆறாம் அறிவு இருக்கு" அப்படின்னு சாமி சொல்வார்.. ஆறாம் அறிவு மட்டும் தான் இருக்கு மத்த அஞ்சும் எங்க போச்சோ.... சரி... சாமி சொல்ற மாதிரி வச்சுப்போம்.

2.தியானம் பண்ணி கடவுள உணர்ந்தவங்க மேல எல்லாம் கேஸ் நடக்குது... அத விடுங்க ... இந்த ரோட்டுல ஆடுறவங்க எல்லாம் ஒரு வகையான மன நோய்க்கு ஆட்பட்டவங்கனு படிச்ச டாக்டருங்க சொல்றாங்க.... அதுக்குள்ள போக விரும்பல

3.கடவுள் என்கிற பொருள் கால வெளியில இருக்குன்னா... நாம முன்னமே பார்த்த மாதிரி பொருள் இருக்கனும்னா அதுக்க்கு முன்னாடியே கால வெளி இருக்கனும் கால வெளி இருக்கனும்..... கடவுள் தான் எல்லாம் படைச்சார் அப்படின்னு சொல்றப்போ.. அவருக்கு முன்னாடி கால வெளிய படைச்சது யாரு....?

எல்லாத்தையும் இன்னும் தெளிவா அறிவியல் பூர்வமா உடைச்சா நேரம் ஆகும்....
ஆக மொத்தத்தில்
கடவுள் பொருள் இல்லை

முத்த நொடி


உன்னை முத்தமிடவேண்டும்
போல் இருக்கிறது .
இந்த நொடியே

உன் கைகளில்
தவழும் மதுக் கோப்பையின்
கடைசித் துளியாய்
காத்திருக்க முடியாது .

உன்னை முத்தமிடவேண்டும்
போல் இருக்கிறது .
இந்த நொடியே.

முத்தமிடுவது
தவம்....
பிடித்த தோழியை
என்கையில் வரமாகி விடுகிறது.


முத்தம்,
அன்பின் வெளிப்பாடா
காமத்தின் வடிகாலா
யூதாஸ் துரோகமா
வேம்பயரின் இரத்த
உரிஞ்சளின் துவக்கமா
எனவெல்லாம் ஆராயாதே...

உன்னை முத்தமிடவேண்டும்
போல் இருக்கிறது .
இந்த நொடியே.

இந்த கவிதையை
முழுதாய் படிக்கவேண்டாம்
இந்த நொடி கடந்து விட்டால்
எண்ணம் மாறி விடலாம்.

ஆகையால்
உன்னை முத்தமிடவேண்டும்
போல் இருக்கிறது .
இந்த நொடியே.
.

முயலும் ஆமையும்


(முன்குறிப்பு: இது குழந்தை எழுதிய கதை தானே அன்றி குழந்தைகள் கதை அல்ல)



தாவர பட்சினிகள் மட்டும் வாழும் முல்லை வனத்தில் சுட்டி முயல் ஒன்று இருந்தது. அதற்கு தானே சிறந்தவன் என்கிற தலைக்கனம் இருந்தது . அதனால் அது யாரையும் மதிக்காது.எல்லோரும் அதற்கு மரியாதை செய்ய வேண்டும் என நினைக்கும் . அப்படி மதிக்காதவர்களின் பொருட்களை எடுத்து ஒளித்து வைத்து அவர்களை அலைய விடும் .அந்த காட்டிற்கு புதிதாய் ஒரு ஆமை வந்தது. அந்த ஆமையை வணங்கச் சொன்னது முயல்.
"அன்பாக கேட்டிருந்தால் வணங்குவதற்கு எந்த தடையும் இல்லை ஆனால் ஆணவத்துடன் கேட்டால் நான் வணங்க மாட்டேன் "என்றது ஆமை
"ஒழுங்காக வணங்க போகிறாயா இல்லையா ?"மிரட்டியது முயல்.
"என்னை வணங்க வைக்க வேண்டும் என்றால் நீ முதலில் வணங்க வேண்டும் அதற்கு பதிலாய் நான் உன்னை வணங்குவேன் "என்றது ஆமை .
"உன்னுடன் போட்டி போட்டு உன்னை தோற்க வைத்து வணங்க வைக்கிறேன் "என முயல் கத்தியது.

அதன் படி முயலுக்கும் ஆமைக்கும் ஓட்ட பந்தயம் வைக்கப் பட்டது. ஆமை மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. முயல் வேகமாக துள்ளி ஓடியது . நீண்ட தூரம் ஓடிய பின் முயல் திரும்பி பார்த்தது . கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆமை தென்படவில்லை. அதனால் முயல் கொஞ்ச நேரம் படுத்து விட்டுப் போகலாம் என்று மரத்தடியில் படுத்தது. அப்படியே தூங்கி விட்டது. ஆமை மெதுவாக வந்தது. முயல் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தது. ஆமை முயலை எழுப்பியது.
"எந்திரி முயல் போட்டி இன்னும் முடியவில்லை " என்றது.பதறி எழுந்த முயல்,
"நீ நினைத்தால் என்னை கடந்து சென்று ஜெயித்திருக்கலாமே . ஏன் என்னை எழுப்பினாய் "எனக் கேட்டது .
"நீ தூங்கிக் கொண்டிருக்கும் போது நான் ஓடி ஜெயித்தால் அது உண்மையான வெற்றியாகாது. அது வெட்கக் கேடானது"என்றது ஆமை.
முயல் தன் தவறை உணர்ந்து "மன்னித்து விடு நண்பா " என மன்னிப்பு கேட்டது.
அன்றிலிருந்து அது தலைக்கனம் இன்றி எல்லோரையும் மதித்து வாழ்ந்தது. அதனால் எல்லோரும் முயலை மதித்து வாழ்ந்தனர்.

(நன்றி வண்ணக்கதிர் )



Monday, October 1, 2012

நான் செய்கிறேன்

என்னை முழுவதும்

உருக்கியெடுக்கும் வலியை

கடத்த விரும்புகிறேன்



அழலாம்...

சுருண்டு படுக்கலாம்



நான்

புன்னகை செய்கிறேன்.



உன்மேல் எல்லை

மீறும் என்கோபத்தை

காட்ட விரும்புகிறேன்



கெட்டவார்த்தையில் திட்டலாம்

கொலை செய்யலாம்



நான்

மன்னிக்கிறேன்.



உலகை மறக்கும்

போதை ஒன்று

தேவைப்படுகிறது..



தேநீருடன் புகைக்கலாம்

மது அருந்தலாம்

நான்

புத்தகம் வாசிக்கிறேன்..





மிக மகிழ்ச்சியான

தருணம் ஒன்று

பிறக்கிறது..



சிரிக்கலாம்

துள்ளி குதிக்கலாம்

நான்

செடி நடுகிறேன்.



நெரிசலான இரயில்நிலையத்தில்

எனது இருப்பை

உணர்த்த விரும்புகிறேன்



உரக்க பாடலாம்

திடீரென ஆடலாம்

நான்

கவிதை எழுதுகிறேன்...